தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, August 8, 2016

புதிய கல்விக்கொள்கைக்கான பரிந்துரைகளை எப்படி புரிந்துகொள்வது ?




            புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான பரிந்துரைகள் அளிக்க முன்னாள் கேபினட் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையிலான குழுவை நடுவணரசு நியமித்தது. இக்குழு தனது அறிக்கையை  அரசிடம் அண்மையில் அளித்தது. இந்நிலையில் இக்குழு அளித்துள்ள பரிந் துரைகள் குறித்து  பல்வேறு கருத்துகள் கல்வியாளர்கள் இடையே விவாதிக்கப்பட்டு வருகிறது. அவற்றை நாம் எப்படி புரிந்துகொள்வது என விவாதிப்பது அவசியமாகும்.
             தொடக்க கல்வி முதல் உயர் கல்வி வரை கல்வித் தரத்தை உயர்த்த பல்வேறு பரிந்துரைகள் கொண்ட 200 பக்க அறிக்கையை இக்குழு சமர்ப்பித்துள்ளதாகத் தெரிகிறது.
            சரியாக படிக்காத மாணவர் களுக்கு சிறப்பு வகுப்பு மற்றும் வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்பது இக்குழுவின் முக்கிய பரிந்துரைகளில் ஒன்றாக விளங் குகிறது. இது தற்போது நடைமுறையில் உள்ளதுதான் என்றாலும் அரசுப் பொதுத்தேர்வு எழுதும் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே சிறப்பு வகுப்புகள் நடத்தும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. இது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
            அடுத்து இக்குழு பரிந்துரைத்துள்ள அம்சம் முக்கியமானதும் விவாதத்திற்கு உரியதுமாகும். கட்டாயத் தேர்ச்சி என்பது நான்காம் வகுப்பு வரை மட்டுமே அளிக்கப்படவேண்டும் ஐந்தாம் வகுப்புமுதல் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மேல்வகுப்பிற்கு அனுப்பிடவேண்டும். இல்லையெனில் உடனடித்தேர்வுகள் வைத்து இரு வாய்ப்புகள்  வழங்க வேண்டும் என்பதுதான் அந்த பரிந்துரை. இது கல்வி உரிமைச்சட்டத்திற்கு முரணான ஒரு பரிந்துரை என்றாலும்  அதன் பின்புலத்தை ஆராய்ந்துபார்க்காமல் ஆசிரியர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதுதான் யதார்த்தம். ஒன்றும் தெரியாமல் பத்தாம் வகுப்பு வரை வந்துவிடுகின்றனர் என்பதே ஆசிரியர்களின் முக்கிய குற்றச்சாட்டு ஆகும். மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி என்பது அவர்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும் தேர்ச்சி அளிக்கவேண்டும் என்பதல்ல, அவர்களைக் கட்டாயம் தேர்ச்சி பெறுவதற்கு தகுதியானவர்களாக உருவாக்கிடவேண்டும் என்பதே அதன் உட் பொருள். அனைவருக்கும் கல்வி என்று ஒருபுறம் முழக்கமிட்டுக்கொண்டு மறுபுறம் அதற்கு எதிராக செயல்படுகிறது இன்றைய அரசு. இந்தியா போன்ற வளரும் நாட்டில் அனைவருக்கும் கல்வி கொடுப்பது என்பது சவாலாக உள்ள சூழலில் இக்குழுவின் மேற்கண்ட பரிந்துரை இந்த கனவை நிச்சயம் சிதைக்கும். தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களில் பலர் கல்வியைத்தொடர்வதில்லை என்பதே நடைமுறை உண்மையாக இருக்கும்போது இதுபோன்ற பரிந்துரையால் பள்ளியை விட்டு வெளியேறும் அல்லது இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி அனைவருக்கும் கல்வி என்பது எட்டாக்கனியாகும். தேர்வுதான் மாணவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே தேர்வு முறையை நீக்கவேண்டும் என்பது பல கல்வியாளர்களின் கோரிக்கையாக இருக்கும்போது இப்படி ஐந்தாம் வகுப்பிலேயே தேர்வைக்காரணம் காட்டி ஒரு மாணவனை மேல்வகுப்புக்குச் செல்லவிடாமல் நிறுத்தி வைப்பது என்பது அவன் கல்வியை மறுப்பதற்கு சமமாகும். கல்வியின் தரம் குறைந்து வருகிறது,  போட்டித்தேர்வுகளிலும், குடிமைப் பணித் தேர்வுகளிலும்,  இந்திய தொழில்நுட்ப நிறுவனம் போன்ற உயர்கல்வி நிறுவன்ங்களிலும்  நம் தமிழக மாணவர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது என்று கூறி இதனை நியாயப்படுத்துவோரும் உண்டு. போட்டித்தேர்வு என்பதே குவிசிந்தனையாளர்களின் ஊக்கப்படுத்தும் செயல். இதனால் விரிசிந்தனையாளர்கள் தகுதியற்றவர்கள் என்பது போன்றதொரு கருத்து உருவக்கப்பட்டுள்ளது. நம் நாட்டிற்கு தேவை குவி சிந்தனையாளர்கள் அல்ல விரி சிந்தனையாளர்களே. போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்க கல்வியும் வேலைவாய்ப்பும் விளையாட்டு அல்ல.
            அடுத்ததாகக் கல்விக்கு உரிய கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் கல்வி நிர்வாகத் தரத்தை உயர்த்திட  தனி நிர்வாக அமைப்பை உரு வாக்கவும் இக்குழு திட்டவட்ட பரிந்துரைகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதும் வரவேற்புக்குரியதுமாகும். அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளைப் போதிய அளவு ஏற்படுத்த இயலாமல்தான் அரசே கல்வித்துறையில் தனியாரை ஈடுபடுத்தியது. தனியார் கல்வி நிறுவன்ங்களே இன்று அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளன. இந்த நிலை மாறவேண்டுமெனில் அரசு கல்வி நிறுவனங்களின் உள் கட்டமைப்பு பலப்படுத்தப்படவேண்டும்.           
            உயர்கல்வி நிறுவனங்களுக் கான சர்வதேச தரவரிசைப் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்கள் முன்னிலை பெறு வதில்லை. எனவே நம் நாட்டில் உயர்கல்வியின் தரத்தை உயர்த்த, தலைசிறந்த வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும். உரிய கட்டுப்பா டுகளுடன் இவற்றுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இக்குழு பரிந்துரை செய்துள்ளது.
            இது மிகவும் மோசமான பரிந்துரையாகும். தரம் என்ற பெயரில் அயல் நாட்டுக் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பது என்பது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிக் கொட்டிக் கொள்வதைப் போன்றதாகும். அயல்நாடுகளில் தரமான கல்வி வழங்கப்படுகிறது எனக்கருதினால் அதுபோன்ற தரமான கல்வி நிறுவனங்களை நம் நாட்டில் நம்முடைய அரசுதான் உருவக்கவேண்டுமே தவிர அயல்நாட்டவரை கல்வி நிறுவனங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதிப்பது  நம் அரசின் கையாலாகாத தனத்தை உலகுக்கு வெளிச்சம்போட்டுக்காட்டும் செயல். இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
            மேலும் திறன் மேம்பாடு, தொழிற்பயிற்சி தொடர்பாகவும் மாணவர்களி டையே நன்னெறிகளை போதிப்பது, நம்பிக்கையை ஏற்படுத்துவது குறித்தும் சுப்பிரமணியன் குழு பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த பரிந்துரைக்கு முக்கியத்துவம் அளித்து செயல்வடிவம் கொடுப்பது அரசின் கடமை.

            இக்குழுவின் பரிந்துரைகள் குறித்தும் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் குறித்தும் பல்வேறு விமர்சன்ங்கள் எழுந்துள்ளன. இக்குழுவில் கல்வியாளர்கள் அதிகம் இடம்பெறாமல் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பதும் நம் சந்தேகங்களை உறுதிப்படுத்துவதாக உள்ளன. எனவே இக்குழுவின் பரிந்துரையை அப்படியே ஏற்காமல் சிறந்த கல்வியாளர்களின் மேலாய்வுக்கு அனுப்பி அவர்களின் இறுதி அறிக்கையை நடைமுறைப்படுத்தினால் புதியக் கல்விக்கொளகை சிறப்பாக அமையும்.

No comments:

Post a Comment