தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Sunday, July 22, 2018

உள்ளிழுக்கும் கவிதை




     கவிதை வாசிப்பு என்பதே இன்று அரசியலாகியிருக்கிறது. யாருடைய கவிதைகளை நாம் வாசிக்கவேண்டும் என்று நமக்கு கட்டளையிடும் விதமாகவே இன்றைய இதழ்கள் நம் மீது சிலரது கவிதைகளைத் திணிக்கின்றன. நாமும் அவற்றை வாசிக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறோம். இன்று இடைநிலை இதழ்களால் சிறு பத்திரிகைகளின் மூச்சுத் திணறுகிறது.. நாம் விரும்பும் கவிதைகளைத் தேடி வாசிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. வாசகர்களிடம் நிலவும் இத்தகைய தேக்க நிலையை, சமூக ஊடகங்கள் சரிசெய்ய முயல்கின்றன.
     இப்படி ஒரு சூழலில் கவிதை நூல் வெளியிடுவது என்பதே மிகப்பெரிய சவால். அப்படியே வெளியிட்டாலும் அவற்றை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது அதைவிட சவாலாகும். அந்த பணியை துணிவோடு செய்திருக்கும் நம் கவிஞர் சூர்யநிலா அவர்களுக்கு வாழ்த்துகள்.
     தொடர்ந்து மிகுந்த ஆயாசங்களுக்கிடையிலும் இயங்கி வருபவர் கவிஞர். இவரது அண்மை வரவு, ”புனலில் மிதக்கும் முகம்” இக்கவிதை நூலில் என்னைக்கவர்ந்த இரு கவிதைகளில் ஒன்றை மட்டும் சக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
     ஒரு நூலை நாம் தொடர்ந்து வாசிக்கவேண்டுமா என்பதை முதல் பத்து வரிகளே தீர்மானிக்கின்றன. நான் பல முக்கியமான நூல்களை இன்னும் வாசிக்காமலிருப்பதற்கும் அதுவே காரணம். எத்தனை முக்கியமான எழுத்தாளராக இருந்தாலும் முதல் பத்தியிலேயே என்னைக் கவரவேண்டும் இல்லையெனில் அந்த நூலை நான் அவ்வளவு சீக்கிரம் வாசிப்பதில்லை. இந்த என் மனநிலைக்கு சரியான தொகுப்பாக அமைந்துள்ளது இந்த தொகுப்பு.
     சமர் என்னும் முதல் கவிதையே என்னை மிகவும் கவர்ந்த கவிதை. இந்த ஒரு கவிதையே போதும் இந்த தொகுப்பைப் படிக்க நம்மை உள்ளிழுத்துச் செல்லும் திறவுகோலாக அமைத்துள்ளது. நம் கற்பனை செய்யும், கனவுகாணும் உலகம் அழகாக இருக்கிறது. ஆனால் எதேர்த்தமோ அதற்கு நேர்மாறாக உள்ளது. எல்லோரும் இன்னாட்டு மன்னர் என்றார்களே ஆனால் நிச வாழ்க்கை அப்படியா இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் போராடத்தானே வேண்டியிருக்கிறது. அன்றாட வாக்கையே போராட்டமாக அமைந்த ஒரு எளிய மனிதன் தனியாக எத்தனை போராட்டங்களுக்கு வாளைச் சுழற்ற முடியும். இயலாது என்பதற்காக விட்டுவிட முடியுமா? போராடி வாழ்ந்தாகத்தானே வேண்டியிருக்கிறது. நம் வாழ்க்கைப் போராட்டங்களை பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால் அவையெல்லாம் கவிதையாகிவிடாது. கவிதைக்கு அழகு சுருங்கச் சொல்லுதலாயிற்றே. இத்தகையதொரு சாமான்யனின் போராட்ட வாழ்க்கையைத்தான் இந்த முதல் கவிதை சுருங்கச் சொல்கிறது. அதனூடே வாசகனின் கற்பனைகளையும் விரிவடையச் செய்கிறது.
    
     பெரும் சேனைகளின் முன்னே
     கம்பீரமாக நடந்தேன்
என்று தொடங்கும் இரண்டு வரிகள் பல சிந்தனைகளை வாசகரிடம் கிளரிவிடுகின்றன. அரசன் ஒருவன் தன் படைகள் பின் தொடர கம்பீரமாக நடந்து செல்வதாக ஒரு காட்சி சட்டென தோன்றி மறைகிறது. தமிழர் மரபு என்பது உறவுகள் சூழ வாழ்ந்தது. நாட்டுப்புற வழக்காற்றில் சேனை என்பது உறவுகளைக் குறிக்கப் பயனபடுத்தப்படும் ஒரு சொல்லாகும். இப்படி உறவுகளோடு வாழ்ந்த பழய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவும் இவ்விரு அடிகள் வாசகரின் கற்பனையை விரிக்கும் புள்ளிகளாகவும் உள்ளன. நம் நாட்டின் தற்கால அரசனையும் நாம் இங்கே பொருத்திப் பர்த்துக்கொள்ளலாம்
     ”பல்லக்கு கொண்டு வரவா?”
     படைத்தலைவன்
     பணிந்து கேட்டான்
அடுத்ததாக இப்படி நகரும் கவிதை மன்னனைப் பணியும் படைத்தலைவனை ஒரு குறியீடாகக் கொண்டுள்ளது. மோடியிடம் பணியும் எடப்பாடியும் நம் கண்முன் வந்து போவதைத் தவிர்க்க இயலவில்லை. படை பலத்தோடு பணபலமும் பெருகிவிட்டால் உறவுகளும் இப்படிப் பணிவது இயல்பாகிவிட்டது. பணிவு என்பது அதிகாரத்துக்கு அடிபணிவது மட்டுமில்லை. இவையெல்லாம் கவிஞரின் கனவில் நடப்பவை.
     மறுதலித்து நடந்தேன்
     கவச உடைகள்
     கனத்துத் தொங்கின
என்னும் அடுத்த பத்தியும் கனவு உலகில்தான். மன்னனுக்கு கவச உடைகள் கனக்கின்றன கூலிகளுக்கோ சாதாரண உடைகளே கனக்கின்றன. அதனால்தான் வெற்றுடம்புடன் உழைக்கிறார்களோ?  பல்லக்கை மறுதலித்து நடப்பது ஏனோ? என்னும் வினாவும் வாசகனுக்கு வருவதில் வியப்பில்லை.
     ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் பின் தொடர மன்னர் போருக்கு ஆயத்தமாகிறார் அதற்குள் இல்லத்தரசியின் குரல் கனவைக் கலைக்கிறது. கவிஞர்கள் எப்போதும் கற்பனை உலகில் வாழ்பவர்கள். எதார்த்த உலகை விட்டு அவ்வப்போது வெளியேறி விடுவார்கள் அவர்களை இப்படி ஏதேனும் ஒரு அன்றாட நிகழ்வுதான் மீண்டும் எதார்த்தத்தை நோக்கி இழுத்து வருகிறது.
     பால் வாங்கி வரலையா
     என்ற விளித்தலில்
     விழித்தேன்
என்றுதான் கவிஞர் குறிப்பிடுகிறார். அது யாருடைய விளித்தல் என்பது படிக்கும் குழந்தைக்குக்கூட தெரிந்திருக்கும். அந்த மந்திரக் குரல்தான் கவிஞரை கனவுலகிலிருந்து அசல் உலகத்திற்கு அழைத்து வருகிறது.
அடுத்த வரியிலேயே ”ஆரம்பமாகிவிட்டது சமர்”. கனவில் சென்றதோ வேறு ஒரு போருக்கு அது உயர்ந்த நோக்கமுடைய போராகவும் இருக்கலாம். எதிரிகளை வீழ்த்தும் போர், நாட்டைப் பிடிக்கும் போர், அணு ஆயுதங்களை அழிக்கும் போர், சொந்த நாட்டு மக்களையே சுட்டுக்கொல்லும் போர், போர் அறங்களை மீறி ஆயுதங்களை ஏவும் போர் என ஏதோ ஒரு போருக்கு செல்ல கனவுகண்ட மன்னன் ஒருவனை வாழ்க்கை பால் வாங்கி வருவதற்கு விரட்டுகிறது.
     சுற்றம் சூழ வாழ்ந்த மனிதன் தனித்து விடப்படுகிறான். என் சேனைகள் எங்கே என கேவி அழும் மன்னனாக இனி அவன் தனியாகத்தான் வாளைச் சுழற்ற வேண்டும்.
                ஆரம்பமாகிவிட்டது
                சமர்
                இனி
                நான் தனியாகத்தான்
                வாளைச் சுழற்ற வேண்டும்
என்னும் முடிவு நம் நெஞ்சைப் பிசைகிறது. இது யார் செய்த குற்றம். இன்றைய பொருளாதார சூழல் விலை ஏற்றம் என ஒவ்வொரு நாளும் போராட்டமாகவே சென்றால் என்னதான் செய்ய  இயலும் தனி மனிதன்.
ஒரு பெரும் கூட்டத்திலிருந்து தனித்து விடப்பட்ட செம்மரி ஆட்டைப்போல் மனிதர்கள் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் தனித்து வாள் சுழற்றும் சோகம் மாறுமா? என்ற ஏக்கத்தை நம்மிடம் ஏற்படுத்திவிடுகிறது இக்கவிதை.
புனலில் மிதக்கும் முகம்
சூர்யநிலா
எழுத்துக்களம் வெளியீடு 2017
22/07/18
மணிமுத்தாறு இலக்கியவட்டம் நிகழ்த்திய கவிஞர் சூர்யநிலாவின் புனலில் மிதக்கும் முகம் நூல் திறனாய்வுக் கூட்டத்தில் வாசித்த விமர்சனக் கட்டுரை.