தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, December 16, 2019

நூறு ஆண்டுகளுக்குப்பிறகு நடைபெற்ற முதலாவது உலகத் தமிழ் இசை மாநாடு


















உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் மதுரை உலகத் தமிழ் சங்கமும் இணைந்து முதலாவது உலகத் தமிழிசை மாநாட்டினை மதுரையில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 14 15 சனி ஞாயிறு ஆகிய இரு நாட்களில் நடத்தின.
100 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அளவில் நடைபெறும் முதல் தமிழிசை மாநாடு என்பது இந்த மாநாட்டின் சிறப்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் கோ.விசயராகவன், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டு தமிழர் புலம் துறையின் பேராசிரியர் கு.சிதம்பரம், உலகத்தமிழ்ச்சாங்கத்தின் இயக்குநர் முனைவர் ப.அன்புச்செழியன் ஆகியோர் மாநாட்டுப்பணிகளை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார்கள்.
இந்த மாநாடு மூன்று இணை அமர்வுகளாக நடத்தப்பட்டது ஒரு அரங்கத்தில் பன்னாட்டு தமிழிசை கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்கள். மதுரை இசைக் கல்லூரி குழுவினரின் இசைக் கச்சேரியோடு தொடங்கியது இசை அரங்கம்.   குரு ஆத்மநாதன் அவர்களின் தேமதுரத் தமிழோசை என்னும் நிகழ்ச்சியில் சிலப்பதிகாரம் புறநானூறு வள்ளலார் பாடல்கள் என சங்க இலக்கியங்களை இசை வழியாக மக்களிடம் கொண்டு சேர்த்தார். உலகத் தமிழிசை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் அமெரிக்கா விலிருந்து வந்திருந்த பாபு விநாயகம் அவர்களின் இசை நிகழ்ச்சி, இலங்கை அவை காற்று குழுவினர் நிஷாந்த ராகினி திருக்குமரன் அவர்களின் தலைமையில் தமிழர் நாமும் நவரச வாழ்வும் எனும் தமிழ் இசை நடன நிகழ்ச்சி நடத்தினர்.  திரிகோணமலை வில்லூன்றி குறவஞ்சி என்னும் இசை நாடகத்தை மிகச் சிறப்பாக இலங்கை தியாகராஜர் கலைக்கோயில் குழுவினர் நிகழ்த்தினார். குறத்தியாக நடனமாடிய சிறுமி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தஞ்சாவூர் நல்லசிவம் குழுவினரின் திருமுறை பண்ணிசை நிகழ்ச்சியும் திண்டிவனம் வேட்டவராயன் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. சென்னை சாகித்ய நாட்டியாலயா குழுவினர் பாரதியார் பாடல்களை தமிழிசையின் துணைகொண்டு  நடனமாகக் காட்சிப்படுத்தினார். மதுரை இசைக் கல்லூரி முதல்வர் டேவிட் அவர்களின் இசை நிகழ்ச்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறை பேராசிரியர் முனைவர் சித்ரா அவர்களின் சிலப்பதிகார நடனம், சேலம் பிரபந்த மாலா இசைக் குழுவினரின் திவ்ய பிரபந்த இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கோவை சங்கரா நாட்டியப்பள்ளி அரோரா குழுவினர் நிகழ்த்திய வள்ளுவம் வாழ்க்கையானால் என்னும் இசை நிகழ்ச்சியும் திருவண்ணாமலை சிவ தென்றல் நாடனாலயா குழுவினரின் திருவாசக இசை நடனநிகழ்ச்சி நடைபெற்றது.
நிறைவாக மதுரை தங்கவேல் குழுவினரின் பறையிசை ஆட்டம், பெண்களின் தப்பாட்டம் என நிறைவு விழாவில் தமிழரின் தொல்லிசைகள் இசைக்கப்பட்டன. நாட்டுப்புற நடன கலைஞர்களின் பொய்க்கால் குதிரை ஆட்டம் கட்டைக்கால் ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் தமிழ் இசைக்கருவிகள் முழங்க நடந்தேறின.
இன்னொரு அரங்கத்தில் பன்னாட்டு தமிழிசை ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை அளித்தார்கள். 25 அமர்வுகளில் ஆய்வுக்கட்டுரைகள் அளிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆய்வாளர்கள் 500க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பியிருந்தனர் அவற்றுள் மாநாட்டு அறிஞர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 250 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு1800 பக்கங்களில் நூல்களாக 3 தொகுதிகள் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டன. மேலும் மாநாட்டு நிகழ்வுகள். தொகுக்கப்பட்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட உள்ளது.  மூன்றாவது அரங்கில் தொல்லிசைக் கருவிகள் கண்காட்சி நடைபெற்றது. சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள கோசை நகரான் இசைக்கருவி காட்சிக்கூடத்தினர் பழமையான பல இசைக்கருவிகளை காட்சிப்படுத்தி இருந்தனர். தண்ணுமை, சிறுபறை, முழவு, முரசு, துடி, தமருகம், உறுமி, துடும்பு, கொட்டு தவில்,  மொடா மத்தளம், சேமக்கலம், சங்கு, கொம்பு, நகரா, பாங்கா, போன்ற பல்வேறு வகையான பழங்கால இசைக்கருவிகளைக் காட்சிப்படுத்தி இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த அரங்கில் பார்வையாளர்கள் பழமையான இசைக் கருவிகளை வாசித்து மகிழ்ந்தனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து மலேசியா சிங்கப்பூர் ,சீனா, மொரிஷியஸ், ஹாங்காங் ஆகிய நாடுகளிலிருந்து தமிழ் இசைக் கலைஞர்களும் இசை ஆய்வாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததால்  அமைச்சர்கள் கலந்து கொள்வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை.
மாநாட்டின் தொடக்க விழாவிலும் நிறைவு விழாவிலும் இசைத்துறை வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கும், இந்த மாட்டுக்கு பல்வேறு வகையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் விருதுகளை வழங்கினார்.
இந்த மாநாடு தொடர்ந்து நடைபெறுவதற்காக உலகத் தமிழ் இசை ஆராய்ச்சி சங்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த சங்கத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெற்றனர்.
மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ் இசையை இளைய சமுதாயத்திற்கு கொண்டு சேர்ப்பதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் இசை ஒரு பாடமாக்கப்பட வேண்டும். அதனை பயிற்றுவிப்பதற்கு முறையாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
இசை சார்ந்த நூல்களை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ உலகத் தமிழிசை மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்.
தமிழ் இசை சார்ந்த முயற்சிகளை ஆவணப்படுத்துவதற்கு இசை ஆவண காப்பகம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
பழங்குடி மக்களின் இசை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இசைக் கருவிகளை உருவாக்கும் தொழிலாளர்கள் வாழ்வு மேம்படுவதற்கு ஒரு நல வாரியத்தை ஏற்படுத்த வேண்டும்.
இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இசை அறிஞர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்பட வேண்டும்
என்று தீர்மானிக்கப்பட்டது.
இரண்டாவது உலக தமிழிசை மாநாட்டினை புதுச்சேரியில் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


நன்றி: இந்து தமிழ்திசை

Sunday, April 28, 2019

சிங்கப்பூர் கோயில்களில் தமிழ் இசை




முன்னுரை
            தமிழர்கள் வாழும் நாடுகளில் குறிப்பிடதகுந்தது சிங்கப்பூர்.  அந்த நாட்டின் அலுவல் மொழிகளில் ஒன்றாகவும் தமிழ் விளங்குகிறது. அரசால் நிறுவப்படும் அறிவிப்பு பலகைகளில் தமிழ் இடம்பெற்றுள்ளது. தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் அங்கு போற்றி வளர்க்கப்படுகிறது. அங்கு இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்க் கோயில்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான நான்கு கோயில்களை நேரடியாக நிர்வகிக்கிறது சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம். அவற்றில் தெற்கு பாலம் சாலையில்    உள்ள மாரியம்மன் கோயிலும், லிட்டில் இந்தியா பகுதி சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் சீனிவாசப் பெருமாள் கோயிலும் சிங்கப்பூரின் தேசியச் சின்னங்களின் பட்டியலில் உள்ளன.  அக்கோயில்களில் தமிழ் இசையின் நிலை பற்றி இக்கட்டுரை ஆய்வுசெய்கிறது.

சிங்கப்பூரில் தமிழ்க் கோயில்கள்
            19 ஆம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தால் தமிழகத்திலிருந்து தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டனர். தாய்நாட்டை விட்டு வெளிநாட்டில் குடியேற வந்த இந்த மக்கள் தங்களது பண்பாட்டு மரபைப் பேணிக்காத்து வந்தனர். அவர்களது வருகை தீவு முழுவதிலும் திராவிட கட்டிடக்கலையின் அடையாளங்களுடன் கோயில்களை எழுப்பக் காரணமாக இருந்தது.
சிங்கப்பூரில் தமிழ்ப் பண்பாட்டைப் பாதுகாத்ததில் தொழிலாளர்கள் பெருமளவு பொறுப்புடையவர்களாக இருந்தபோதிலும், பிற்காலங்களில், வணிகர்களால் வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்புகள் வழிபாட்டுத் தலங்களைக் கட்டவும், புனரமைக்கவும் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட தமிழ்க் கோயில்கள் சமுதாயத்தை ஒற்றுமையுடன் வைக்கவும், தாய்நாட்டைப் பிரிந்து வாழும் மக்களுக்கு அந்நிய நாட்டில் ஒரு பாதுகாப்புணர்வைத் தரும் ஒரு அமைப்பாகவும் உதவின.
கோயிகளில் தமிழ் இசை
            அங்குள்ள பெரும்பாலான கோயில்களில் நாள்தோறும் நடைபெறும் பூசைகளில் தவில் மற்றும் நாகசுரம் இசைக்கப்படுகிறது. இசைக்கலை என்பது கோயில் கலையாகவே தொடக்க காலங்களில் வளர்ந்துவந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தவிலை கோயில் மேளம் என்றே இன்றும் நாட்டுப்புற மக்கள் குறிப்பிடுகின்றனர். மங்கல இசைக்கருவிகளில் தவிலுக்கு தவிர்க்க இயலாத இடமுண்டு. தவில் என்னும் சொல் வழக்கு பிற்காலத்தில் ஏற்பட்டதாகும். இதனை சங்க இலக்கியங்கள் மண முழவு என்று குறிப்பிடுகின்றன.
மணமுழவு
            மணமுரசு என்ற சொற்றொடரை விழா முரசு என்று சிலப்பதிகார உரை குறிப்பிடுகின்றது. மணமுழவு என்பதனை மருதநிலப் பறை என்று தொல்காப்பியப் பொருளதிகார உரை குறிப்பிடுகின்றது.
            ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
          ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப (புறநானூறு;194)
என்று புறநானூறு குறிப்பிடும் முழவுஎன்பது, திருமணத்தில் வாசிக்கப்படும் மங்கல இசைக்கருவியான தவிலேயாகும்.
            இன்றும் திருமண விழாக்களின் பொழுது தவில் கருவி பயன்படுத்தப்படுகிறது. திருமாங்கல்யம் திருப்பூட்டுச் செய்யும் பொழுது கெட்டி மேளம் என்ற பெயரில் இசைக்கப்படுகிறது.

தவிலும் நாகசுரமும்
            கோயிலில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளில் ஒவ்வொரு நிலையிலும் மல்லாரி இசைக்கப்படும் வழக்கம் உள்ளது. மல்லாரி என்பது தமிழிசையில் இசைக்கப்படும் ஓர் இசை உருப்படியாகும். மங்கல இசைக் குழுவிற்குரிய நாகசுர இசை உருப்படியாக மல்லாரி அமைந்துள்ளது. இசைப் பரிமாணத்திற்குரிய உருப்படியாக இது அமையும். தவிலின் பங்கு இதில் மிகுதியாக இருக்கும். இறைவன் வீதி உலா எழுந்தருளும் பொழுது மல்லாரியை இசைப்பர். “ மயில்+ ஆரி மயிலாரி என்பது மருவி மல்லாரி என ஆனது. ஆரி என்பது பாடுதல், ஒலியெழுப்புதல் என்ற பொருள்படும்.மயில், தன் கழுத்தை நீட்டிக் கூவுதல்தான் அகவுதல் என்பது. இந்த மயில் அகவுதலும் ஆரியும் சேர்ந்து - மயில் ஆரி - மல்லாரி ஆனது” என்பார் இசை அறிஞர் மம்மது.
கோயில் நிகழ்வுகளில் மல்லாரி 
            இறைவனின் நீராடலுக்கு திருமஞ்சன நீர் கொண்டு வரும் பொழுது திருமஞ்சன மல்லாரி இசைக்கப்படும்.
             தளிகை உணவு தயாரிக்கும் இடமான மடைப்பள்ளியிலிருந்து தளிகை கொண்டு வரும் பொழுது தளிகை மல்லாரி இசைக்கப்படும்.
             திருவிழாக் காலங்களில் இறைவனைத் தேரில் எழுந்தருளச் செய்தல் உண்டு. தொண்டர்கள் தேரின் வடம் பிடித்துத் தேரை இழுப்பர். இவர்களை உற்சாகப்படுத்தும் நிலையில் தேர் மல்லாரி இசைப்பது வழக்கம்.
            இறைவன் வீதியுலா எழுந்தருளும் போது சின்ன மல்லாரி இசைக்கப்படும்.
            சிவன் கோயில்களில் இறைவன் காளை  வாகனத்தில் எழுந்தருளும் பொழுது பெரிய மல்லாரி இசைக்கப்படும். இந்த நிகழ்வுகளை ஆவணப்படமாக லலிதாராம் வெளியிட்டுள்ளார்.
            சிங்கப்பூர் கோயில்களில் தவில் மற்றும் நாகசுர கலைஞர்களைக் கொண்டு மேற்கண்ட முறைப்படி இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதற்காக தமிழகத்திலிருந்து இசைக்கலைஞர்கள் கோயில்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அந்த நாட்டு விதிமுறைப்படி உரிய ஊதியம் வழங்கப்படுகிறது.

சிங்கப்பூரில் தமிழிசைக்கலைஞர்கள்
            சிங்கப்பூர் கோயில்களில் தவில் மற்றும் நாகசுரம் வாசிக்கும் இசைக்கலைஞர்கள் கோயில்களிலேயே தங்கியுள்ளனர். அங்கு அவர்களுக்கு உரிய வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. கோயிலில் சமைக்கும் உணவு அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இறை பணி என்பதால் அந்த இசைக்கலைஞர்கள் அப்பணியை பக்தியோடு மேற்கொள்கின்றனர்.
உறுமிமேளம்
            சிங்கப்பூரில் புகழ்பெற்றுத் திகழும் உறுமிமேளக் குழு ‘சிவசக்தி முனியாண்டி உறுமிமேளக் குழு’ ஆகும். அக்குழு, தைப்பூசத் திரு விழாவில் சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் காலை 7 மணியிலிருந்தே உறுமி மேளம் இசைக்கத் தொடங்கி விடும்.
            ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று வாசித்துள்ள இந்த 16 பேர் கொண்ட இசைக்குழு, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முதன்மையான விழாக்களில் வாசிப்பது தம் குழுவினருக்கு கிடைத்த பெருமையாகக் கருதுவதாக இக்குழுவின் தலைவர் திரு நவின் குமார் இளங்கோவன் தெரிவித்தார்.
            தைப்பூசத் திருநாளில் உறுமி மேளம் வாசிப்பது குறித்து அங்குள்ள உறுமிமேளக் குழுக்கள் ஒரு சந்திப்புக் கூட்டத்தை நடத்தி அதில் தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொள்வதற்கான விதி முறைகளுக்கு கட்டுப்படுவதென உறுதியளித்துள்ளனர். இந்து அறக்கட்டளை வாரியம் கொடுத்த தகவல்படி   11 உறுமிமேளக் குழுக்கள் தைப்பூசத் திருநாளில் வாசிக்க அனுமதி பெற்றுள்ளன.
கோயில்களில் திருமுறை இசை
            சிங்கப்பூரின் பல்வேறு கோயில்களில் திருமுறை இசை தினமும் ஒலிக்கக் கேட்கலாம். இவற்றைப் பாடுவோர் தமிழ் நாட்டிலிருந்து சென்ற கலைஞர்கள் ஆவர். மேலும், தேவார இசை நிகழ்ச்சிகள் பல அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவற்றில் தமிழகத்திலிருந்து வரும் ஓதுவார்கள் முதல் உள்ளூர் திருமுறை மாணவர்கள் வரை பலரும் பாடக் கேட்கலாம். பெரும்பாலும் இவை, நவராத்திரி, புத்தாண்டு, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் நடைபெறும். மேலும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்  உட்பட பல கலை அமைப்புகள் தமிழ் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
முடிவுரை
சிங்கப்பூரில் அமைந்துள்ள கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி தமிழ் இசையைப் போற்றிப்பாதுகாக்கும் நிறுவங்களாகவும் விளங்குகின்றன.
கோயில் இசை மரபுகளின்படி அன்றாட வழிபாடுகளிலும் திருவிழாக் காலங்களிலும் உரிய முறையில் இசைக்கருவிகள் இசைக்கப் படுவதன் மூலம்  தமிழிசைக் கலைஞர்களுக்கு வாழ்வதாரம் அளிக்கப்படுகிறது.
மேலும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் மற்றும் தஞ்சாவூர் மரபு இசைப் பள்ளி, சிங்கப்பூர் ஆகிய அமைப்புகள் தமிழ் இசையை மக்களிடம் கொண்டுசேர்க்க பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
துணைநூற் பட்டியல்
1.தொல்காப்பியம் பொருளதிகாரம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2007
2.புறநானூறு,நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்,சென்னை,2007
3.சிலப்பதிகாரம், வர்த்தமானன் பதிப்பகம்,சென்னை,2000
இணையதளங்கள்
1.தமிழ் இணையக் கல்விக்கழகம்
2. தமிழ் விக்கிப் பீடியா
3.கீற்று/செம்மலர்
தகவலாளர்கள்
1.கவிஞர் தியாக ரமேஷ், செயலாளர், கவிமாலை, சிங்கப்பூர்
2.திரு. நவீன்குமார் இளங்கோவன், தலைவர், சிவசக்தி முனியாண்டி உறுமிமேளக் குழு, சிங்கப்பூர்