தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Wednesday, July 19, 2017

ஆசிரியராகும் மாணவர்கள்! வகுப்பறையில் புதுமை புகுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்! #CelebrateGovtSchools



ஆசிரியராகும் மாணவர்கள்! வகுப்பறையில் புதுமை புகுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்! #CelebrateGovtSchools
வி.எஸ்.சரவணன்
ஆசிரியர் சர்வாதிகாரி. மாணவர் அடிமை. ஆசிரியர் மட்டுமே கேள்வி கேட்க வேண்டும். மாணவர் கேள்வி கேட்கக்கூடாது என்று ஒரு வகுப்பறை இருக்குமானால் அது நிஜமான வகுப்பறை அல்ல. அப்படியான சூழலில் கற்பிக்கப்படுவது கல்வியுமல்ல" என்று எழுத்தாளர் இமையம் ஒரு கட்டுரையில் குறிப்பிடுவார். வகுப்பறையில் ஜனநாயகத்தன்மை நிலவ வேண்டும் என்பதையே இந்த வரிகள் சுட்டுகிறது. அதைத் தன் வகுப்பில் நடைமுறைப் படுத்தியிருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ரத்தின புகழேந்தி
விருத்தாச்சலம் அருகேயுள்ள மன்னம்பாடி கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர்தான் ரத்தின புகழேந்தி. கணக்கு என்றாலே அஞ்சுகிற மாணவர்களையும் விளையாட்டு முறையில் பாடம் நடத்தி, கணக்குப் பாடத்தையும் எளிமையாக்கி விடுபவர்
மதிய உணவுக்குப் பிறகான முதல் வகுப்பு என்றாலே ஆசிரியர் பாடம் நடத்துவது தாலாட்டு பாடுவதுபோல இருக்கும். அதுவும் இவர் கணித ஆசிரியர். ஆனால், இவரின் ஆறாம் வகுப்பில் மாணவர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். வகுப்பறையில் புதிய விஷத்தையும் புகுத்தியிருக்கிறார். அதுகுறித்து ஆசிரியர் புகழேந்தியிடம் கேட்டோம்


ஆசிரியர் சர்வாதிகாரி. மாணவர் அடிமை. ஆசிரியர் மட்டுமே கேள்வி கேட்க வேண்டும். மாணவர் கேள்வி கேட்கக்கூடாது என்று ஒரு வகுப்பறை இருக்குமானால் அது நிஜமான வகுப்பறை அல்ல. அப்படியான சூழலில் கற்பிக்கப்படுவது கல்வியுமல்ல" என்று எழுத்தாளர் இமையம் ஒரு கட்டுரையில் குறிப்பிடுவார். வகுப்பறையில் ஜனநாயகத்தன்மை நிலவ வேண்டும் என்பதையே இந்த வரிகள் சுட்டுகிறது. அதைத் தன் வகுப்பில் நடைமுறைப் படுத்தியிருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ரத்தின புகழேந்தி.

விருத்தாச்சலம் அருகேயுள்ள மன்னம்பாடி கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர்தான் ரத்தின புகழேந்தி. கணக்கு என்றாலே அஞ்சுகிற மாணவர்களையும் விளையாட்டு முறையில் பாடம் நடத்தி, கணக்குப் பாடத்தையும் எளிமையாக்கி விடுபவர்.

மதிய உணவுக்குப் பிறகான முதல் வகுப்பு என்றாலே ஆசிரியர் பாடம் நடத்துவது தாலாட்டு பாடுவதுபோல இருக்கும். அதுவும் இவர் கணித ஆசிரியர். ஆனால், இவரின் ஆறாம் வகுப்பில் மாணவர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். வகுப்பறையில் புதிய விஷத்தையும் புகுத்தியிருக்கிறார். அதுகுறித்து ஆசிரியர் புகழேந்தியிடம் கேட்டோம்.


வகுப்பறை என்பது மாணவர் - ஆசிரியர் உரையாடுவதற்கான இடமாகத்தான் நான் பார்க்கிறேன். அப்படி உரையாடும்போது கற்றல் சீராக நடக்கும். மதிய உணவுக்குப் பிறகு வகுப்பு என்பதால் தொடங்கும்போதே, மாணவர்களுக்குப் பிடித்த வண்ணமாக அந்த வகுப்பு மாறியிருக்க வேண்டும். அப்படி என்ன செய்யலாம் என்பதற்கான யோசனைதான் ஆசிரியராகும் மாணவர்கள்.

எங்கள் வகுப்பைத் தொடங்கி வைப்பது மாணவர்கள்தாம். தினமும் ஒரு மாணவர், ஆசிரியராக மாறிவிடுவர். நான் மாணவர்களோடு சேர்ந்து அமர்ந்துகொள்வேன். அன்றைய தினத்திற்கான ஆசிரியராகும் மாணவர் வகுப்புக்குள் வந்ததும் எல்லோரும் எழுந்துநின்று வணக்கம் சொல்வோம். முதன்நாள் நான் நடத்திய பாடத்தின் ஒரு பகுதியை அந்த மாணவர் நடத்துவார். அப்போது மாணவர்கள் சந்தேகங்களை எழுப்புவார்கள். அதற்கு என் உதவியின்றிப் பதில் அளிக்க வேண்டும். சில நேரங்களில் நானும் சந்தேகங்களைக் கேட்பேன். பிறகு, நன்றி கூறி விட்டு தன் இருக்கையில் அமர்வார். தினமும் 10 நிமிடத்துக்கு இது நடக்கும். இதுவும் ஒருவகையில் கற்றலுக்கான பயிற்சிதான்.

இந்தப் பயிற்சி ஏன் செய்ய வேண்டும் எனும் கேள்வி நிச்சயம் எழும். நாளைய ஆசிரியர் இவர்தான். பாடத்தின் இந்தப் பகுதியைத்தான் நடத்தப்போகிறார் என்று சொன்னதுமே அந்த மாணவன் அந்தப் பாடத்தைத் தெளிவாகப் படிப்பதோடு, யாரேனும் சந்தேகம் எழுப்பினால் எப்படி அதைத் தீர்ப்பது என்பதையும் யோசித்து அதற்கான பதில்களையும் தயார் செய்துவருகிறான்.

அடுத்த நாள் வகுப்பில் ஆசிரியர் உள்பட அனைவருமே தன்னைக் கவனிக்கப் போகிறார்கள் என்கிற எண்ணம் அவன் மனதில்  ரத்தின புகழேந்திஉருவாகிறது. அதனால் தன் உடை, பாவனைகளை நேர்த்தியாக்கிக்கொள்கிறான். வார்த்தைகளை நிதானமாக்கிப் பேசுகிறான். பாடத்தில் யாரேனும் சந்தேகம் எழுப்பினால், அதைத் தீர்த்து வைக்கிறபோது அந்தப் பாடம் அவனுக்குள் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. பாடம் அல்லாத கேள்விகளையும் மற்ற மாணவர்கள் அவனிடம் கேட்பதுண்டு. அதைச் சமாளிக்கும் திறனும் அவனுக்கு வளர்கிறது.

ஒரு புதிய விஷயத்தைக் கையாளும்போது, அவனின் ஆளுமைத் திறனும் கூடிக்கொண்டே செல்லும். வகுப்பில் தனித்துத் தெரிய வேண்டும் எனும் ஆவலை அதிகரிக்கச் செய்யும். இவனைப் போலவே தானும் நடந்துகொள்ள வேண்டும் எண்ணம் மற்ற மாணவர்களுக்கும் உருவாகும். அதனால்தான் வகுப்பை முடிக்கும்போது மறக்காமல் அடுத்த நாள் ஆசிரியராகும் மாணவர் யார் என்பதைக் கேட்டுக்கொள்வார்கள். மறுநாள் நானே மறந்தாலும் அந்த மாணவர் எழுந்துவந்து விடுவார்.
வெளிப்படையாகக் கூறுவது என்றால், இந்தப் பயிற்சியின் மூலம் எனக்குப் பல புதிய விஷயங்கள் தெரிந்துள்ளன. முதன்நாள் நான் நடத்திய பாடத்தை அவர்கள் எவ்வளவு தூரம் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்கிறேன். சில பாடப் பகுதிகளை என்னை விட சிறப்பாக அவர்கள் நடத்தும்போது பிரமிப்பாக இருக்கும். அவர்களில் முத்தமிழ் அரசி, அமுல்ராஜ், மானூசா போன்றோர் என்னை ஈர்த்தவர்கள்.
இவை எல்லாவற்றையும் விட, ஒரு வகுப்பின் ஆசிரியர்தான் எனும் பெருமிதம் அவர்களின் முகத்தில் மின்னும். அது அவர்களின் கற்றலை இன்னும் மேம்படுத்தும் என்று நம்புகிறேன். மாவட்ட அளவில் நான் ஆசிரியர் பயிற்சிக்குச் செல்லும்போது அங்கு இந்தப் பயிற்சியைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறேன்." என்று கூறுகிறார் ரத்தின புகழேந்தி. இவர் சிறந்த எழுத்தாளரும்கூட. கவிதை, சிறுகதை, கட்டுரை உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கிராமிய விளையாட்டுகள் பற்றிய இவரின் நூல் சிறப்பான வரவேற்பு பெற்றது. சுட்டி விகடனின் எஃப் பகுதியில் தொடர்ந்து பங்களித்து வருகிறார்.

நன்றி: ஆனந்தவிகடன்
http://www.vikatan.com/news/tamilnadu/96039-students-are-becoming-teachers-a-government-school-teacher-s-new-perspective.html#vuukle_div

Thursday, July 13, 2017

ஓவியப்போராளி வீரசந்தானம்



ஓவியர் வீர சந்தானம் மறைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இரு மாதங்களுக்கு முன் அண்ணன் அறிவுமதி அவர்களின் இல்லத் திருமண விழாவில் பார்த்தேன். தமிழர் ஓவியம் கருத்தரங்கு நடந்ததைப்பற்றிக் கூறியதோடு அந்த ஆய்வுக்கோவையில் உங்களைப்பற்றிதான் கட்டுரை எழுதியுள்ளேன் நூல் அனுப்பி வைக்கிறேன் என்று கூறியபோது மிகவும் மகிழ்ந்தார் அவசியம் அனுப்புங்கள் நான் இணையத்தில் பதிவிடுகிறேன் என்றார். இன்னும் அனுப்பவில்லை. அந்த குற்ற உணர்வில் தவிக்கிறது மனசு இதோ அவரைப்பற்றிய கட்டுரை.


முன்னுரை:
ஓவியம் என்பது ஒரு கலைமட்டும் அல்ல அது ஒரு போராட்டவடிவமாகவும் திகழ்கிறது. ஓவியத்தின் மூலமும் போராடமுடியும் என்பதை நம் தமிழக ஓவியர்கள் பலர் நிரூபித்துள்ளனர். அப்படிப்பட்ட ஓவியர்களில் மிகவும் முக்கியமானவராக ஓவியர் வீரசந்தானம் அவர்களைக் குறிப்பிடலாம். தமிழ்ச் சமூகம் சந்தித்த பல இன்னல்களை தன் ஓவியத்தின் மூலம் மீட்டெடுக்க முயன்ற சமகால ஓவியர்தான் வீர சந்தானம். ஓவியத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் தன் திறமையை வெளிப்படுத்தியவர். அவரது ஓவியச் செயல்பாடுகளையும் போராட்டங்களையும் இக்கட்டுரை ஆய்வுசெய்கிறது.
வீரசந்தானம்:
நம் நாடு விடுதலைபெற்ற ஆண்டான 1947 இல் கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் என்னும் ஊரில் வீரமுத்து பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர் வீரசந்தானம். 1966 – 72 இல் ஓவியக் கல்லூரி படிப்பை முடித்து நடுவணரசின் நெசவாளர் சேவை மையத்தில் பதினாறு ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். இவரின் பணியைப்பாராட்டி குடியரசுத்தலைவர் சித்ரகலா விருது வழங்கியுள்ளார். சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள். இருவரும் அயல்நாடுகளில் உள்ளனர்.
இளமையில் வருமை:
தன் இளமைக் காலத்தில் தனக்கு உதவிய நல் உள்ளங்களை நினைவு கூறும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார் ஓவியர்,”நான் கோயில் சோற்றைத் தின்னு வளர்ந்தவன். எங்க ஊர் உப்பிலியப்பன் கோயில்ல இருந்து அஞ்சு மைல் தூரம் நடந்து போய், கும்பகோணம் ஓவியப் பள்ளியில் ஓவியம் கத்துக்கிட்டேன். என் கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு ரலே சைக்கிள் வாங்கிக் கொடுத்த கோயில் செயல் அலுவலர் மீசை சீனிவாசன், நான் பசியோடு வருவேன்னு, தன் காலை உணவுல எனக்கும் பங்குவெச்ச ஓவியப் பள்ளி முதல்வர் கிருஷ்ணராவ், சென்னையில் என்னை ஒரு வருஷம் தங்கவெச்சு, மதிய உணவும் போட்டு சிற்பம் செய்யக் கத்துக்கொடுத்த என் குருநாதர் தனபால் சார், எனக்குத் திருமணம் செய்துவைத்த ஓவியர் ஆதிமூலம்... இப்படி எத்தனையோ பேரால்தான் இந்த சந்தானம் உருவானான்.”
ஓவியப்போராளி:
இயல்பிலேயே போர்க்குணம் உடையவர் வீரசந்தானம். குறிப்பாக ஈழத்தமிழர்களுக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டவர். அவரே ஒரு நேர்காணலில்,” என் இனத்துக்காகப் போராடணும், என் மக்கள் துன்பப்படுறாங்க, அவங்களுக்காகப் போராடணும்னு விருப்ப ஓய்வு கொடுத்துட்டு வந்துட்டேன். இன்னைக்கு வரைக்கும் ஈழத்துக்கு ஆதரவா, தமிழ் இனத்துக்கு ஆதரவா எங்கே கூட்டம், போராட்டம் நடந்தாலும் நான்தான் முதல் ஆளா நின்னு குரல் கொடுத்திருக்கேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அணு உலை எதிர்ப்பு:
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தன் ஓவியங்களைப் பயன்படுத்தியுள்ளார்.  கலைஞன் தான் உலகின் முதல் கலகக்காரனாக இருந்திருக்க வேண்டும் என்ற கலகக்குரலோடு தனது தாடியையும் தூரிகையையும் நீவிவிட்டவாறு, முதல் அணு உலை எதிர்ப்பு வண்ணத்தை பதிவு செய்ய தொடங்கினார் ஓவியர் வீரசந்தானம். அருகிலிருந்தவரின் கைரேகைகளை தனது ஓவியத்திற்காக கவர்ந்து கொண்டார். அனைவரது வண்ணங்களிலும் எதிர்ப்பும் இரத்தமும் வாழ்வும் சாவும் ஏகாதிபத்தியமும் சுரண்டலும் வறட்சியும் மலர்ச்சியும் சுடுகாடுகளும் கல்லறைகளும் மற்றும் அணு உலைகளும் குழைத்து குழைத்து நிறைந்திருந்தன. என்று அணு உலை எதிர்ப்பு ஓவியங்களைப் பற்றி பத்திரிகைச் செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓவியக்கொள்கை:
வீரசந்தானம் அவர்களின் ஓவியங்கள் சில கொள்கைகளை முன்வைத்தே தீட்டப்படுகின்றன. அந்த நோக்கத்தை நிறைவேற்றும்பொருட்டு பல ஓவியக் கண்காட்சிகளை நிகழ்த்தியுள்ளார். அது பற்றி குறிப்பிடும்போது,”தனி ஆளாகவும் குழுவாகவும் நிறைய ஓவிய கண்காட்சிகளும் நடத்தியிருக்கிறேன். ஓவியம் தொடர்பாக சில வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். தொடர்ச்சியாக நம் மரபுசார்ந்த ஓவியங்களை வரைகிறேன். அதற்காக நாடு முழுவதும் சுற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறேன். இது நான் எடுத்துகொண்டிருக்கும் (மரபு சார்ந்த ஓவிய பாணி) ஒரு கலையை அழியாமல் பாதுகாக்க என்னாலான முயற்சி, பங்களிப்பு. இந்த ஆராய்ச்சி என் ஓவிய பாணியை பின்தொடர நினைக்கும் இளைஞர்களுக்கு நிச்சயம் பயன்படும். நான் ஒரு சமூகப் போராளி. தமிழ் கலாசாரத்தை பாதிக்கும் எந்த சக்தியாக இருந்தாலும் எதிர்த்து போராடிக் கொண்டு இருக்கிறேன்.” என்று குறிப்பிடுகிறார்.
’தானே’ துயர் துடைத்த ஓவியங்கள்:
விகடன் நிகழ்த்திய ’தானே’(புயல்) துயர் நீக்கும் திட்டத்தில் ஓவியங்களை வரைந்து தானமாகக் கொடுத்து அதன்மூலம் கிடைத்த தொகையை தானே துயர்துடைப்புப் பணிக்குப் பயன்படுத்தினர். அப்பணியில் முதல் கலைஞராக நம் ஓவியர் கலந்துகொண்டு ஓவியம் வரைந்து கொடுத்துள்ளார். தானே புயல் பதிப்புகளைப் பற்றிய விகடன் ஓவியக்கண்காட்சியில்,''எவ்வளவோ ஓவியக் கண்காட்சி களுக்குப் போய் இருக்கிறேன். ஆனால், இதுதான் சாதனை!'' என்று தொடங்கினார் ஓவியர் வீரசந்தானம். இப்படி ஒரு கண் காட்சியை விகடன் நடத்தலாமே... ஓவியர்கள் நாங்கள் ஒரே குடையின் கீழ் நின்று உதவுகிறோமே என்று இந்த எண்ணத்தை விதைத்தவரே வீரசந்தானம்தான். ''தேசிய அளவிலான கண்காட்சிகளில்கூட இவ்வளவு ஓவியங்கள் வைக்கப்பட்டது  இல்லை. ஒரு சமூகத்தில் மக்கள் வளமாக இருக்கும்போது, கலைஞர்களை அவர்கள் பாதுகாக்க வேண்டும்; அதேபோல, மக்கள் சோதனையை எதிர்கொள்ளும்போது அவர்களை அரவணைக்க கலைஞர்கள் முன்நிற்க வேண்டும். அந்த வகையில் தமிழக ஓவியர்கள் எங்கள் கடமையைச் செய்திருக்கிறோம். கலைத் துறையைச் சேர்ந்த ஏனையோரும் இதை முன்மாதிரியாகக்கொண்டு 'தானே’ துயர் துடைக்க முன்வர வேண்டும்!'' என்றார் வீரசந்தானம் கூறியதாக விகடன் குறிப்பிடுகிறது.
இசைக்கருவி ஓவியங்கள்:
நம் பழந்தமிழ் இசைக்கருவிகளை ஓவியங்களாகத் தீட்டியுள்ளார். மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டு யாழ் போன்ற யாழிசைக் கருவிகளின் கம்பீரமான அழகை இவரது ஓவியங்கள் பறைசாற்றுகின்றன. “யாழிசைக்கும் பாணர்கள் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் உலகம் முழுவதும் யாழ் கருவியை இசைத்துப் பரப்பிவந்தார்கள். யாழ்தேவிக்குக் கோயில் இருந்ததாகவும், பின்னாளில் அது காணக் கிடைக்காமல் போய்விட்டதாகவும் ஒரு செய்தி இருக்கிறது. எனவே அச்சில் இருந்த யாழ் ஓவியங்களை அருங்காட்சியகம், நூலகம் போன்றவற்றில் தேடிப் பார்த்து, படித்துத் தெரிந்து கொண்டு அவற்றை ஓவியங்களாக்கினேன். திருவாரூர் கோயிலில் இருக்கும் தோற்கருவியான பஞ்சமுக வாத்தியத்தையும் என் ஓவியத்தில் கொண்டுவந்திருக்கிறேன். தற்போது, பறையாட்டத்தின் பல கூறுகளை ஓவியங்களாக்க முயன்றுவருகிறேன். எந்தக் கலையாக இருந்தாலும் மானுட மேம்பாட்டுக்காகப் படைக்கப்பட வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அதை நோக்கித்தான் என்
பயணம்” என்கிறார் வீரசந்தானம்.
நடிகர் வீரசந்தானம்:
ஓவியராக மட்டுமின்றி நடிகராகவும் தன் கலைப் பணியைச் சிறப்பாகச் செய்தவர் வீரசந்தானம். பாலுமகேந்திராவின் சந்தியாராகம் படத்தில் கதை நாயகனாக நடித்துள்ளார். மீரா கதிரவனின் அவள் பெயர் தமிழரசி என்ற படத்திலும், கௌதமனின் மகிழ்ச்சி படத்திலும் ஓவியர் வீரசந்தானம் நடித்துள்ளார்.
முடிவுரை:

பணியாளராக, குடும்பத்தலைவராக, ஓவியராக, சமூகப்போராளியாக, நடிகராக என தான் வகித்த அனைத்து பொருப்புகளிலும் தலை சிறந்து விளங்கிய சமகால பன்முகக் கலைஞராகத்திகழ்கிறார் ஓவியர் வீர சந்தானம். இவரது ஓவியங்கள் சமூக மேம்பாட்டுக்காகவும், இயற்கைச் சீற்றங்களினால் மக்களுக்கு ஏற்படும் துயரங்களைக் களையவும், இழந்த பண்பட்டுக் கூறுகளை மீட்டெடுக்கவும், பழமையான இசைக்கருவிகளை எதிர்கால சந்ததியினருக்குத் தெரிவிக்கவும் பயன்படுகின்றன. கலைஞர்களின் பணி கலையைக் காப்பதோடு முடிந்துவிடுவதில்லை சமூக மேம்பாட்டுக்கான களப்பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்னும் கொள்கையாளராக வாழும்  இவரைப் போன்ற கலைஞர்களால்தான் இம்மண்ணில் கலைகள் இன்னும் விளைந்துகொண்டிருக்கின்றன. 

Tuesday, July 4, 2017

கல்வி நிறுவனக்களை அரசுடமையாக்குவதில் என்ன தயக்கம்?



கல்வி மனிதனின் அடிப்படை உரிமை என்பதனால் அதை ஓவொரு மனிதருக்கும் கொண்டு சேர்ப்பது அரசின் கடமை ஆகும். எனவே கல்வியை இலவசமாகக் கொடுத்தாகவேண்டும். அப்போதுதான் சமூகத்தின் கடைக்கோடியில் உள்ள மனிதனுக்கும் கல்வி வாய்ப்பு உறுதிசெய்யப்படும். இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த நாட்டில் இது மிகப்பெரிய சவாலாக உள்ளது.கல்வி குறித்த ஆய்வுகள் அவ்வப்போது நிகழ்ந்தவண்ணம் உள்ளன. அந்த ஆய்வு முடிவுகளுக்கேற்ப புதுப்புது கல்விக்கொள்கைகள் ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. சிலகாலம் சென்றபின் அதன் நிறை குறைகள் ஆராயப்படுவதும் பின்னர் புதியக் கல்விக்கொள்கைகள் அறிமுகமாவதுமாக உள்ளன. கல்வி மேம்பாட்டுக்கான எத்தனையோ திட்டங்களை நம் நாடு கண்டிருக்கிறது, ஆனால் அதனால் ஏற்பட்ட விளைவுகள் பெரிதாகப் பலனளிக்கவில்லை. கல்வியில் வளர்ந்த நாடுகளிடம் நாம் இன்னும் கற்கவேண்டிய பாடங்கள் பல உள்ளன. நம் நாட்டு அரசியலமைப்பு அதற்கு ஏற்றதாக இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
பெறோரின் நோக்கம் மாறவேண்டும்:
கல்வியில் பெற்றோரின் பங்கு மிகவும் குறிப்பிடத்தகுந்தது. ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்கிடவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அதற்காக என்னவிலையையும் கொடுக்கத் தயாராக உள்ளனர். இந்த மனப்போக்கு மாறாமல் கல்வியில் மாற்றம் சாத்தியமில்லை. கல்வி கற்பதற்காக செலவிடும் தொகையைப்போல் பல மடங்கு தொகையை தம் குழந்தை படித்து முடித்து பணிக்கு சென்று ஈட்டவேண்டும் என்கிற மனோபாவம் ஆரோக்கியமானது இல்லை. க்லவியை ஒரு பொருளாதார நடவடிக்கையாகப் பார்க்காமல் சமூக மேம்பாட்டிற்கான ஆயுதமாக மாற்றிட வேண்டும் என்கிற தொலை நோக்கு சிந்தனையை நம் கல்விமுறை இந்த சமூகத்தில் இது வரை ஏற்படுத்தவில்லை. கலவிக்காக செலவிடும் தொகையை விடவும் கூடுதலான தொகையை கல்விக்கூடத்திற்கு செல்லும் வாகனங்களுக்காகவும் விடுதிகளுக்காகவும் செல்விடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்விக்க்கு செலவிடும் தொகையை முதலீடாகப் பார்ப்பதன் விளைவுதான் இந்த நிலைக்குக் காரணம். இத்தகைய செலவுகளைக் குறைக்கவே அருகமை பள்ளிமுறையை ஊக்கப்படுத்தவேண்டும் என்று கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் கோரி வருகின்றனர்.
அருகமைப் பள்ளி முறை
குழந்தைகளுக்கு ஐந்து வயதில்தான் எழுதுவதற்கான விரல் ஒருங்கிணைப்பு ஏற்படும் என்கிற தகவல் எத்தனைப் பெற்றோர்களுக்கு தெரிந்திருக்கும்? எப்போது இரண்டரை வயது ஆகும் எனக் காத்துக்கொண்டிருந்து மிகவும் சிறப்பான ஒரு பள்ளியில் சேர்த்துவிட வேண்டும் என்பதோடு அவர்களின் கடமை முடிந்துவிடுகிறது. அதற்காக தம் குழந்தை எவ்வளவு தூரம் பயணித்தாலும் கவலை இல்லை. கிராமங்களில் வாழும் பெற்றோர்கள் நகரத்து பள்ளிகளுக்கும், நகரங்களில் வாழும் பெற்றோர்கள் வேறு ஒரு நகரத்துப் பள்ளிகளுக்கும் தம் குழந்தைகளை அனுப்பி படிக்க வைப்பதே தன் தகுதிக்கு ஏற்றதாக கருதுகின்றனர். இந்த நோய் எப்படி பரவியது எப்போது பரவியது என்றே தெரியவில்லை. நாம் வாழும் ஊரில் நம் வீட்டிற்கு அருகிலுள்ள பள்ளியில் நம் பிள்ளை படிக்கக் கூடாது என்பதில் பெற்றோர்கள் உறுதியாக உள்ளனர். சிற்றூர்களிலும் சிறு நகரங்களிலும் இந்த நிலை என்றால் பெரு நகரங்களில் நல்ல பள்ளிக்கு அருகில் வீடு பிடித்து தங்கி விடுவது அல்லது வீட்டை விலைக்கு வாங்குவது போன்ற போக்குகள் நிலவுகின்றன. பெற்றோர்கள் தம் வீட்டிற்கு அருகிலுள்ள பள்ளியை தொடர்ந்து கண்காணிக்கின்றனர் அந்த பள்ளியின் நடவடிக்கைகள் அவர்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்பதானால் தொலைவில் உள்ள வேறு பள்ளியைத் தெடுகிறார்களா? அல்லது தம் தகுதிக்கு இந்த பள்ளி ஒத்துவராது என்பதாலா?  அவர்கள் எண்ணம் எதுவாக இருந்தாலும் அருகமைப் பள்ளியில் சேர்ப்பதே சிறந்தது. பள்ளி நடவடிக்கைகளைக் கண்காணித்து அதன் வளர்ச்சியில் பெற்றோர்கள் பங்களிப்பதன் மூலமே அருகமைப் பள்ளி முறை சாத்தியமாகும். மேலும் ஐந்து வயதில்தான் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினால் அருகமைப்பள்ளி முறையை செயல்படுத்துவது ஓரளவு எளிதாகும். இரண்டரை வயதிலேயே குழந்தைகளுக்கு குதிரை ஏற்றமும் நீச்சல் பயிற்சியும் தேவைதானா? அந்த சின்னஞ்சிறு குழந்தைக்கு என்ன்வெல்லாம் கற்றுத்தர வாய்ப்பிருக்கிறதோ அத்தனையும் கற்றுக்கொடுக்க ஆசைப்படும் பெற்றோரின் பேராசையை காசாக்க நினைக்கிறார்கள் நம் கல்வித் தந்தைகள்.
கல்வி இனி இலவசம்
ஒரு தனியார் பல்கலைக் கழகத்தில் பல சீர்கேடுகள் நிகழ்ந்த பிறகு அதனை அரசு கையகப் படுத்தி அதற்கான சட்டம் இயற்றி முழுவதுமாக அரசுக் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகும் மாணவர்களுக்கான கட்டணத்தை குறைக்க இயலாத அரசுதான் நம்மை ஆண்டுகொண்டிருக்கிறது. இவர்களால் தனியார் பள்ளிகளை முழுதுமாக ஒழித்துவிட முடியும் என்று குழந்தை கூட நம்பாது. ஆனால் இதற்கு மேலும் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கமாட்டோம் என்கிற உறுதியையாவது இவர்களால் வழங்க முடியுமா? கல்வியை இலவசமாக வழங்கிட வேண்டுமெனில் அது அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். அதற்கான முயற்சியை எந்த அரசும் மேற்கொள்ளவில்லை. அப்புறம் எப்படி இலசக்கல்வி சாத்தியமாகும். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் இடை நிலைக்கல்வி என்பதற்காக பல்வேறு திட்டங்களைத்தீட்டும் அதே வேளையில் குழந்தைத் தொழிலாளர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். நம் கல்வி அனைவருக்குமானது என்றால் குழந்தைகள் பள்ளிகளை விட்டு வெளியேறுவது ஏன்? இடை நிற்றல் விகிதம் நாம் எதிர்பார்த்த அளவு குறையவில்லை. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு நமக்கான கல்வி முறையை அதிலும் இலவசமாகக் கல்வி கற்கும் ஒரு திட்டத்தை வடிவமைக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். ஒவ்வொரு குடும்பமும் கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் கணிசமான தொகையை செலவிடும் அவல நிலையை நம் ஆட்சியாளர்கள் மாற்றிட வேண்டும். கல்வி இனி இலவசம் என்ற நிலை உருவாகவேண்டும். 

காலத்திற்கேற்ற கல்வி
மெக்காலே கால கல்விக்கு விடுதலை அளித்து காலத்திற்கேற்ற கல்வி முறையை உருவாக்கிடவேண்டும். கல்வி சமூக மாற்றத்திற்கு வித்திடவேண்டும். வளர்ந்த நாடுகளில் அவர்களுக்கான கல்வியை எப்படி வடிவமைத்தனர் என்று நாம் பாடம் கற்கவேண்டுமேயன்றி அதேப்போன்று கல்விமுறையை நாம் உருவாக்கக் கூடாது. நமக்கான கல்வியை நாமே உருவாக்கவேண்டும். கல்வியின் வாயிலாக ஒவ்வொரு மனிதனும் தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் மேம்படுத்திக்கொள்ள வழி வகுக்கவேண்டும். வேலை வாய்ப்புக்காக பிறரிடம் கையேந்தாமல் தானே வேலை வாய்ப்பை ஏற்படுத்துபவனாக நம் மாணவர்களை உருவாக்கும் ஒரு கல்வி முறையை உருவாக்கிடவேண்டும். தகவல் தொழில் நுட்பங்களால் மட்டுமே ஒரு நாடு முன்னேறிவிட முடியாது. நமக்கான உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைய வேண்டும் அதனை நம் கல்வி முறை ஊக்கப்படுத்த வேண்டும். வெள்ளை சட்டைப் பணிகளுக்கு அளிக்கும் அதே முக்கியத்துவம் உழைப்பு சார்ந்த உற்பத்தி சார்ந்த பணிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும். கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும் சமச்சீரான கல்வி வழங்கப்பட வேண்டும். மரபான தொழில் நுட்பங்கள் நம் கல்விக்கு எதிரானவை அல்ல அவற்றையெல்லாம் நம் கல்வி ஆதரித்துப் போற்றவேண்டும். மரபு வழி வேளாண்மை, மரபுவழி மருத்துவம், மரபுவழி கட்டடக்கலை, மரபு வழி அறிவியல் தொழில் நுட்பம் போன்றவை நவீன அறிவுக்கு எதிரானவை அல்ல நவீன அறிவை மேம்படுத்த மரபு வழி அறிவு துணை நிற்கும் என்பதை மறந்து விடலாகாது.
வளர்ச்சியை நோகிய கல்வி

நம் நாட்டின வளர்ச்சிக்கு வித்திடும் கல்வி முறையை உருவாக்கி அத்னை நடைமுரைப்படுத்தும் முழுப் பொருப்பையும் அரசே ஏற்க வேண்டும். கல்வியை இனி அரசு மட்டுமே அளிக்கும் என்ற நிலையைப் படிப்படியாக ஏற்படுத்த வேண்டும். அதற்காக இன்னும் ஐம்பது ஆண்டுகள் வேண்டுமானாலும் அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள். கல்வி நிறுவனக்கள் அனைத்தும் அரசே நடத்தினால் அரசு பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க விழிப்புணர்வுப் பேரணியும் அவசியமில்லை. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்கவேண்டும் என்று சட்டம் இயற்றவேண்டியதுமில்லை. நாட்டின வளர்ச்சி கல்வியின் மூலம்தான் சாத்தியமென்றால் கல்விக்கூடங்களை அரசே நடத்துவதில் என்ன தயக்கம். நாடு வளர்ந்து விட்டால் அரசியல் செய்யமுடியாது அன்கிற அச்சமா? அச்சத்தைத் தவிருங்கள் நாட்டை வளர்ப்போம். 

நன்றி: தமிழ்முரசு கல்விமலர்