தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Wednesday, August 15, 2018

கல்வித்துறையும் கலைஞரும்.




     கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக ஐந்து முறை பதவியிலிருந்த போதெல்லாம் தமிழக மக்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். என்றாலும் அவர் கல்வித்துறையில் செயல்படுத்திய திட்டங்கள் பல மாநிலங்களுக்கு முன் மாதிரியானவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கல்வித்துறைக்கு இரு அமைச்சகங்கள்:
     நம் நாடு விடுதலை பெற்றதிலிருந்து கல்வித் துறைக்கு என ஒரு அமைச்சகம் மட்டுமே இருந்து வந்த நிலையில் முதல் முறையாக கல்வித்துறையை இரண்டாகப்பிரித்து பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை என இரு அமைச்சகங்களை 2006 ஆம் ஆண்டு உருவாக்கிய பெருமைக் கலைஞரைச் சாரும். அதனால் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு இரு மடங்காக உயர்ந்து கல்வித்துறை வளர்ச்சியடைந்தது. பள்ளிக் கல்வித்துறையின் முதலாவது அமைச்சராக தங்கம் தென்னரசு அவர்களை நியமித்து பள்ளிக்கல்வித்துறையில் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்திட வழி வகுத்தார்.

தமிழ் கட்டாயப் பாடம்:
     தமிழ் நாட்டில் தமிழ் படிக்காமலேயே ஒருவர் பள்ளிக் கல்வியை முடித்துவிடலாம் என்ற நிலையை மாற்றி 2006 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தமிழ் கற்கும் சட்டம் இயற்றப்பட்டு தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் காட்டாயப் பாடமாக்கப்பட்டதும் கலஞரின் முயற்சியால் விளைந்ததுதான்.

சமச்சீர் கல்வி:
     தமிழ்நாட்டில் மாநில அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்ற நான்கு விதமான கல்வி முறை நடைமுறையில் இருந்து வந்தது.  ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பாட திட்டம், இது கல்வியில் ஏற்றத் தாழ்வுகளுக்கு வழி வகுப்பதாகவே அமைந்தது. வசதிபடைத்தவர்களுக்கு ஒரு கல்வி எழ்ழைகளுக்கு ஒரு கல்வி என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் ஒரே சீரான கல்வி கிடைக்க வகை செய்யும் பொருட்டு தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் 2010 இயற்றப்பட்டு 2011 ஆம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. 

நுழைவுத்தேர்வுகள் ரத்து:
      பொறியியல், மருத்துவம் போன்ற உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் அதற்கு உரிய கல்வித்தகுதியைப் பெற்றிருந்தாலும் பொது நுழைவுத்தேர்வு எழுதி அதில் உயர்ந்த மதிப்பெண் பெற்றால் மட்டுமே சேர்க்கை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இதனால் கிராமப்புறத்திலிருந்து படித்து நல்ல மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. இந்த நிலை 1984 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதாவது 23 ஆண்டுகள் தொடர்ந்தது. இதனை மாற்ற விரும்பிய கலைஞர் 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் புதிய சட்டத்தை நிறைவேற்றி அதற்குக் குடியரசுத்தலைவரின் ஒப்புதலையும் பெற்று நுழைவுத்தேர்வை ஒழித்தார். அதனால் பல ஏழை எளிய குடும்பத்திலிருந்து மருத்துவர்கள் உருவாக வாய்ப்பு கிடைத்தது.

கட்டணக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி:
     தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் தங்கள் விருப்பம்போல் கல்விக்கட்டணம் என்ற பெயரில் பெற்றோர்களிடம் நிகழ்த்திய கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் கலைஞர். தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தும் சட்டம் 2009 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதன் படி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு பள்ளிகளுக்கான கட்டணங்கள் முறைப் படுத்தப்பட்டன.


மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி:
      பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் மருத்துவர்களை உருவாக்கும் மருத்துவக் கல்லூரிகளை அதிக அளவில் நிறுவ வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்த கலைஞர் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்குவதற்கான முன் முயற்சியை மேற்கொண்டவர்.


பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகள்:
      அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் வகையில் மாவட்டங்களில் பல்கலைக் கழக பொறியியல் கல்லூரிகளை 12 இடங்களில் நிறுவினார். அதுபோலவே 14 கலை அறிவியல் கல்லூரிகளையும் நிறுவினார்.

பல்கலைக் கழகங்களை உருவாக்கியவர்:
     தமிழகத்தின் அனைத்து மாவட்ட இளைஞர்களுக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்கலைக் கழகங்கள் இல்லாத பகுதிகளில் புதிதாகப் பல்கலைக் கழகங்களை உருவாக்கியவர் கலைஞர். 1990 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தையும், 1997 ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் பல்கலைக் கழ்கத்தையும் உருவாக்கினார்.

நூலகத்துறையில் மாற்றங்கள்:
     பள்ளிக் கல்வித்துறையின் ஒரு பிரிவான நூலகத்துறையிலும் பல புதுமைகளையும் ஆக்கப்பூர்வமான பணிகளையும் செய்தவர் கலைஞர். நூலகங்களுக்கு பதிப்பாளர்களிடமிருந்து 750 புத்தகங்கள் மட்டுமே வாங்கிய நிலை இருந்தது. கலைஞர் 1000 நூல்கள் வாங்கிட வழி வகுத்தவர். மேலும் ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாகத் திகழும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கோட்டூர்புறத்தில் உருவாக்கி இன்று போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பினை வழங்கியதோடு அறிவு சார் கருத்தரங்குகள் பயிலரங்குகள் நடைபெற ஓர் சிறந்த இடமாகவும் திகழ்வதற்கு அடிகோலியவர். வாசகர்கள் தம்மிடம் உள்ள சொந்த நூல்களையும் எடுத்துச் சென்று படிக்கவும் அந்த நூலக்த்தில் வாய்ப்பளிக்கப்படுகிறது.

பதிப்பாளர் வாரியம்:
      பதிப்புத் தொழில் நலிவடைந்து விடாமல் காக்கும் பொருட்டு அத்தொழிலில் ஈடுபடும் பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்களை உள்ளடக்கிய நல வாரியம் உருவக்கியவரும் கலைஞரே. அவ்வாரியத்தின் வாயிலாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு நிதி உதவிகள் அளிக்கப்படுகின்றன.
நன்றி: குங்குமச்சிமிழ்
http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=3592&id1=93&issue=20180816


Tuesday, August 14, 2018

தேசிய நூலகர் தினம் உருவானது எப்படி?




தேசிய நூலகர் தினம் உருவானது எப்படி?

இரத்தின புகழேந்தி
 
சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஒரு நூலைத் தேடி எடுக்கவேண்டுமெனில் ஒவ்வொரு தளத்திலும் நுழைவாயிலில் உள்ள கணினியில் நூலின் பெயரையோ ஆசிரியர் பெயரையோ தட்டச்சு செய்தால் எந்த அலமாரியில் எந்த இடத்தில் அந்த நூல் உள்ளது என்பதை கணினியில் பார்த்து எளிதாக எவ்வித அலைச்சலும் இன்றி எடுத்து வரலாம். இது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனால் விளைந்த நன்மை.
     ஆனால் மற்ற நூலகங்களில் நூல்களை இவ்வளவு எளிதாக நாம் தேடி எடுத்துவிட இயலாது. ஒரு நூலைத் தேடி எடுப்பதற்குள் களைப்புதான் மிஞ்சும். நூல்களை அப்படி அடுக்கி வைத்திருப்பார்கள்.
     நூலகங்களில் நூல்களை எவ்வாறு அடுக்கி வைப்பது என்பது மிகப்பெரிய சவாலான பணிதான். அதற்கு ஒரு வழிமுறையை நம் நாட்டுக்கு வழங்கியவர் ஒரு தமிழர் என்பதில் நமக்குப் பெருமைதான். அந்த பெருமைக்குரியவர்தான் இந்திய நூலகத் தந்தை என்று போற்றப்படும் சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன்.

எஸ்.ஆர்.ரங்கநாதன்:
     இவர் சீர்காழிக்கு அருகிலுள்ள வேதாந்தபுரம் என்னும் ஊரில் 1892 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12 ஆம் நாள் ராமாமிர்தம் சீத்தாலட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வியை சீர்காழியிலும் கல்லூரிக் கல்வியை சென்னையிலும் முடித்து கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அதன் பிறகு சென்னை மாநிலக்கல்லூரியில் கணிதவியல் துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றினார். அவரது ஊதியம் குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை என்பதால்

முதல் நூலகர்: 
1924ல் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் முதல் நூலகராக பணியில் சேர்ந்தார். ஊதியம் அதிகம் என்றாலும் கற்பித்தல் பணியில் கிடைத்த மன நிறைவு நூலகர் பணியில் இல்லை. அதனால் அப்பணி அவரைக் கவரவில்லை. எனினும் மாநிலக்கல்லூரி முதல்வரின் ஆலோசனைப் படி, லண்டன் சென்று, நூலக அறிவியலில் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றார்.

அங்கிருந்து நாடு திரும்பியதும், பல்கலைக்கழக நூலகத்தை சீரமைக்கத் தொடங்கினார். அதனை அடுத்து சென்னை நூலகச் சங்கத்தை நிறுவினார். இது நூலக இயக்கத்தின் சின்னமாக மாறியது. அதன் அமைப்பு செயலாளராக 1928 முதல் 1945 வரை செயல்பட்டார்.

நூலகத்துறைக்கு ஆற்றிய பணிகள்:
     1948 இல் இவரது முயற்சியால்தான் சென்னை பொது நூலகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படிதான் உள்ளாட்சி நிறுவனங்கள் வசூல் செய்யும் சொத்து வரியில் 10 சதவீதம் நூலகத்துறைக்கு வழங்கப்படுகிறது.

     இந்திய நூலகத் துறைக்கு அவர் அளித்த கொடைதான் கோலன் பகுப்பு முறை. நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையே கோலன் பகுப்பு முறை எனப்படுகிறது. இந்த பகுப்பு முறை இவரால் ஆராய்ந்து கண்டுப்பிடிக்கப்பட்டதாகும். இது நூலகத்துறையைச் சார்ந்த பல மேனாட்டு அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதுவரை கையாளப்பட்டு வந்த பகுப்பு முறையைக் காட்டிலும் கோலன் பகுப்பு முறை மாறுபட்டதாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருந்தது. இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்களும் இக்கோலன் பகுப்பு முறையைத் தான் இன்றும் பயன்படுத்துகின்றன.

நூலக அறிவியல் துறைக்கு வித்திட்டவர்:  
நூலக அறிவியல் பள்ளி என்ற அமைப்பைத் தொடங்கி, 15 ஆண்டுகள் அதன் இயக்குநராகப் பணியாற்றினார். தன் சேமிப்பு முழுவதையும் அதற்காக வழங்கினார்.
1945 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பனாரஸ் பல்கலைக் கழகத்தில் நூலக அமைப்பை மேம்படுத்தும் பணியில் தன்னை அற்பணித்துக்கொண்டு 2 ஆண்டுகள் தனி ஒருவராக அங்கிருந்த ஒரு லட்சம் நூல்களை வகைப்படுத்தினார். மேலும் அங்கு நூலக அறிவியல் பட்டயப்படிப்பை அறிமுகப்படுத்தி அவரே அதற்கான ஆசிரியராகவும் செயல்பட்டார்.
     அதன் பிறகு டெல்லி பல்கலைக்கழக அழைப்பை ஏற்று அங்கு சென்று நூலக் அறிவியல் பாடம் கற்பித்தார். அவர் அங்கு பணியாற்றியபோதுதான் நூலக அறிவியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகள் தொடங்கப் பட்டன,

     இவர் சிறந்த எழுத்தாளரும்கூட. நூலக நிர்வாகம் உள்ளிட்டவை தொடர்பாக 60-க்கு மேற்பட்ட நூல்கள், 2,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். பல நாடுகளுக்குச் சென்று நூலகம் குறித்து உரையாற்றினார். கடுமையாகப் பாடுபட்டு நூலகம் மற்றும் தகவல் அறிவியலுக்கான புதிய, அடிப்படைக் கோட்பாடுகளை நிறுவினார்.
பனாரஸ் பல்கலைகழகத்தில் நூலகராகவும், தில்லி நூலகத்துறையின்  தலைவராகவும் பணியாற்றினார். தில்லியில் உள்ள நூலகத் தரக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.

பதம்ஸ்ரீ ரங்கநாதன்:
1957 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது

நூலகத்துறைக்கு ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்புக்காக எஸ்.ஆர் ரங்கநாதன் “இந்திய நூலகத் தந்தை எனப் போற்றப்படுகிறார். இவருடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 12ம் நாளை நூலகர் தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறந்த நூலகர்களுக்கு நல் நூலகர் விருதும் இந்த நாளில் வழங்கப்படுகிறது.

     நூலக்த்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி ஒரு அறிவார்ந்த சமூகம் உருவாகவேண்டும் என்பதற்கான விழிப்பு உணர்வு மக்களிடம் ஏறபடுவதற்கும் இந்த நாள் பயன்படுகிறது.

நன்றி: தமிழ்முரசு
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=426128

Sunday, August 12, 2018

கடலூர் கலைத்திருவிழா2018




















கடலூர் கலைத்திருவிழா2018
***
இன்று கடலூரில் நடைபெற்ற மாபெரும் ஓவியப்போட்டி நிறைவு விழாவில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வு. ஓவியப்போட்டி என்பதை விட கலைத்திருவிழா என்றுதான் சொல்லவேண்டும். ஓவியக்கலைஞர் ஏ.ஆர். ( கலைப் புரட்சி என்பதன் ஆங்கிலச் சுருக்கம்) ஓவியப் பயிற்சிக் கூட நிறுவனர் ராஜசேகர் 
அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண் துறை பேராசிரியர் சிவசக்திவேலன், குழந்தைகள் நல வல்லுநர் மருத்துவர் இளந்திரையன் ( இவர் குழந்தை மருத்துவர் நமசிவாயம் அவர்களின் உறவினர்) வருமான வரித்துறை அலுவலர் செங்குட்டுவன் என வேவ்வேறு துறை சார்ந்த நண்பர்கள் ஒன்றிணைந்து இதுபோன்ற ஒரு விழாவினை மூன்று ஆண்டுகளாக சிறப்பாக நிகழ்த்தி வருவது பிரமிக்க வைக்கிறது. 700 மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என 1000 பேர் ஒன்றுகூடிய ஒரு திருவிழாவாக நடைபெற்றது. மணற்சிறபம் அட்டைச் சிற்பம் நெகிழி சிற்பம் என ஒவ்வொரு சிற்பமும் காண்போரை சிந்திக்க வைத்தது. குழந்தைகளின் நிம்மதியை மின்னணு சாதனங்கள் எவ்வாறு குலைக்கின்றன என்பதை மணற்சிறபம் உணர்த்தியது. மடியில் உரங்கவேண்டிய குழந்தை மடிக்கணினியில் உரங்கும் அவலத்தை உரத்துச் சொன்னது அருளியின் மணற்சிற்பம். ஒற்றை மரக் கன்றை காப்பாற்ற மழை வராதா என ஏக்கத்தோடு வானத்தை நோக்கும் உயிர்வளி உருளையை முதுகில் சுமந்திருக்கும் மனிதனை அட்டைச் சிற்பமாக அடுத்த நூற்றாண்டுக்கே நம்மை அழைத்துச் செல்லும்படி அமைத்திருந்தார் ஆகாஷ். நெகிழி தண்ணீர் பாட்டில்களால் உருவான நெகிழி மரம் நெஞ்சை பதைக்க வைத்தது. தினேஷின் இந்த முயற்சி பார்ப்போர் மனதில் நிச்சயம் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும். அதற்கு பொருத்தமான கவிதைகளை ஆயுதமொழியன் சீனிவாசன் ஆகிய மாணவர்கள் எழுதி காட்சிப்படுத்தியதும் அருமை.
இந்த நிகழ்வில் கூடுதல் சிறப்பு மரபுவழி சுடுமண் சிற்பக்கலைஞர் யுனெஸ்கோ விருதுபெற்ற சிறப்புக்குறிய வில்லியனூர் முனுசாமி அவர்களின் சிற்பக் காட்சியும் பயிலரங்கும். குழந்தைகளோடு குழந்தையாக அவர்களுக்கு களிமண் சிற்பங்களுக்கான பயிற்சி வழங்கி வீட்டில் செய்து பார்க்க களிமண்ணையும் வழங்கினார். அவரின் வில்லியனூர் பட்டறைக்கு குடியரசு முன்னாள் தலைவர் மேதகு அப்துல்கலாம் அவர்களும் புதுவை துணை நிலை ஆளுநர் மேதகு கிரண்பேடி அவர்களும் சென்று அவரோடு உரையாடி உள்ளனர். சுடுமண் சிற்பங்களோடு அன்றாட பயன்பாட்டுக்கான சுடுமண் கைவினைப் பொருள்களையும் மக்களுக்கு வழங்கி வருவது கூடுதல் சிறப்பு.
போட்டிக்கு நடுவர்களாக ஓவியக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் வந்திருந்து பரிசுக்கு உரிய ஓவியங்களைத் தேர்வு செய்தனர். கலந்துகொண்ட எல்லாருக்கும் பரிசளித்திருக்க வேண்டும். ஆனால் அது இயலாது என்பதால் வேறு வழியின்றி ஒரு சில ஓவியங்களை மட்டுமே தேர்வுசெய்தோம் என நடுவர்களில் ஒருவர் கூறியது பார்வையாளர்களிடம் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
இந்த ஏ.ஆர். ஓவியப் பயிற்சிப் பட்டறை ஒரு ஓவியக்கல்லூரியாக பரிணமிக்க வேண்டும் என்கிற என் அவாவை வெளிப்படுத்தி நண்பர்களிடமிருந்து விடைபெற்றேன்.
என் அழைப்பை ஏற்று என்னுடன் கடலூர் பயணத்தில் உறுதுணையாக வந்த நண்பர் தணிக்கையாளர் ராமச்சந்திரன் அவர்களோடு நிகழ்வின் சிறப்புகளைப் பேசிக்கொண்டே வந்தது பயணக் களைப்பைப் போக்கியது.
இந்த நாளை இனிய நாளாக்கிய நண்பர்களுக்கு நன்றி.
விடுமுறை நாளிலும் தங்கள் பள்ளி மாணவர்களைத் திரளாகப் பங்கேற்கச் செய்த திருவள்ளுவர் பள்ளி மற்றும் எம்.ஜி.ஆர்.நகர் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்.

நன்றி: படங்கள் - பேராசிரியர் சிவசக்திவேலன்.