தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, June 30, 2012

எழுத்தாளர் விந்தன் நினைவு நாள்


         

தமிழிலக்கிய உலகில் அதிகம் பிரபலமாகாத சிறந்த எழுத்தாளர் விந்தன் நினைவு நாள் இன்று. ஆண்டுதோறும் தினமணியில் ஒரு சிறு விளம்பரம் வரும். அவரது படைப்புகள் ஏழை எளிய மக்களை கதை நாயகர்களாகக்கொண்டவை. அவரின் படைப்பாற்றல் வியப்பானது. அவரைப்பற்றி ஒரு நூலை சாகித்ய அக்கதமி இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் வெளியிட்டுளது. அவரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு இப்பதிவில் இடம்பெறுகிறது.

வாழ்க்கை வரலாறு
             விந்தன் என்னும் கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் வேலை செய்து வந்தார்.
இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார்.
1938ஆம் ஆண்டு லீலாவதி எனும் பெண்மணியை மணந்தார். இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த அம்மையார் இறந்துபோக, பின் சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்தார். ஆறு குழந்தைகள் பிறந்தன.

அச்சகத்தில் பணி

மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். தமிழரசுக்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது.
கல்கி கிருஷ்ணமூர்த்தியால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்கி இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.இராஜா பாதர் என்ற அவரது நண்பர் விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையைப் பாராட்டியதோடு, அவர் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, "கல்கி" இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) "விஜி" என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை "விந்தன்" என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் "கல்கி" கிருஷ்ணமூர்த்தி தான்.

எழுத்தாளராக

1946 இல் விந்தன் எழுதிய "முல்லைக் கொடியாள்" என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்தது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தத் தொகுதிக்கு முதல் பரிசை அளித்தது. விந்தனின் எழுத்துக்குத் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு ஏற்பட்டதால், "பொன்னி" மாத இதழ் ஆசிரியர், விந்தனைத் தொடர்களை எழுதுமாறு வேண்டினார்.
"கண் திறக்குமா?" என்ற கதையை 1947இல் "நக்கீரன்" என்ற புனைப்பெயரில் எழுதினார். "பாலும் பாவையும்" என்ற கற்பனையும் கருத்தும் நிறைந்த தொடர் ஒன்றை எழுதினார். "பாலும் பாவையும்" விந்தனுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. ஏவி.எம்.நிறுவனத்தார், "பாலும் பாவை"யும் கதையைத் திரைப்படமாக்க விரும்பியதால், கல்கி அலுவலகத்திலிருந்து பதவி விலகி, திரைப்படம் நோக்கிப் பயணித்தார்.

திரைப்படவுலகில்

ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த வாழப் பிறந்தவள் படத்துக்கு வசனமும், "அன்பு" என்ற படத்துக்கு வசனமும், ஒரு பாடலும், "கூண்டுக்கிளி" என்ற படத்துக்கு வசனமும் எழுதினார். குழந்தைகள் கண்ட குடியரசு, பார்த்திபன் கனவு திரைப்படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதினார்.
கையில் கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டு "புத்தகப் பூங்கா" என்ற பதிப்பகமும் "மனிதன்" என்ற மாத இதழையும் தொடங்கினார் விந்தன். "அன்பு அலறுகிறது", "மனிதன் மாறவில்லை" என்ற இரு நாவல்களை எழுதினார்.
இறுதிக் காலம்

பிரபல எழுத்தாளர் சாவி ஆசிரியராக இருந்த தினமணி கதிர் இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். மக்கள் எழுத்தாளர் விந்தன், 1975ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி காலமானார். அவர் மறைவுக்குப் பிறகு அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
அவர் மகன் திரு கோ. ஜனார்தனன் விந்தன் நினைவு அறக்கட்டளை நடத்தி வருகிறார்.முகவரி : கோவிந்தாலையா 17(7/2) அருணாசலம் தெரு, செனாய்நகர், சென்னை - 600030. பேசி: 9444145275.
இணயம் கீழுள்ள இணைப்பை சொடுக்குக. ஒருங்குறி எழுத்துருவிலிருன்தால் நலம். விந்தன் 

நன்றி: தமிழ்விக்கிப்பீடியா


1 comment:

  1. புதுமை படைப்பாளி விந்தன் அவர்களை பற்றி புதியவர்களுக்கும் தெரிவிக்கும் தங்கள் பணி பாராட்டத்தக்கது.

    ReplyDelete