ஒரு புதிய எண்ணில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தமானில் நடைபெறும் ராஜேந்திர சோழன் கடாரம் கொண்டான் ஆயிரம் ஆண்டு வெற்றி விழாவுக்கு குடும்பத்தோடு கலந்து கொள்ள வருமாறு அழைப்புவிடுத்திருந்தனர் பிரான்ஸில் இயங்கும் உலகத் தமிழ்ச் சிறகம் அமைப்பினர்.அந்த எண்ணைச் சேமிக்கும் போது அது கோபி ரமேஷ் எனும் நெதர்லாந்து தமிழ் உறவின் எண் என்பது தெரிந்தது.
மேலும் அது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அண்ணன் ராஜா அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு தனியார் தொலைக்காட்சியில் முதன்மை செய்தி ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் அண்ணன் ராஜா அவர்கள். தமிழகத்தின் அத்தனை அரசியல்வாதிகளுக்கும் தெரிந்த நபர். அவர்களை தொடர்பு கொண்ட போது பயணச்சீட்டு பதிவு செய்துவிட்டு தகவல் தருவதாக கூறினார் அதுபோலவே ஒரு நாள் விமான பயணத்திற்கான முன்பதிவை செய்து அந்தமான் பயணத்தை உறுதி செய்தார். ஆகஸ்டு 15,16 இரு நாட்கள் விழா என்பதால் 14 புறப்பட்டு 17 திரும்புவது பயணத்திட்டம். சென்னை வரை செல்வதற்கு தொடர்வண்டிகளில் முன்பதிவு முடிந்து விட்டது. எனவே ரதிமீனாவில் பதிவு செய்திருந்தேன். அது மாலை 4:40 க்கு புறப்பட்டு 9:10 க்கு பெருங்களத்தூர் சென்றுவிடும். விமானம் அதிகாலை 4:40 என்பதால் 3:40 க்கு விமானநிலையத்தில் இருந்தால் போதும். அதுவரை என்ன செய்வது என்று கடைசிவரை குழப்பமாகவே இருந்தது. பயண நாளன்று முடிவு செய்து கொள்ளலாம் என்று தெளிவடைந்தேன். எங்களோடு முதுகலை ஆசிரியர் சங்கத் தலைவர் அண்ணன் மணிவாசகன் அவர்களுக்கும் பயண முன்பதிவு செய்யப் பட்டிருந்தது. அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் சென்னையில் தலைமை அலுவலகத்தில் இருப்பதாகவும் நானும் அங்கேயே தங்கி கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். எனவே பெருங்களத்தூரில் இறங்கி அங்கிருந்து மின்தொடர்வண்டியில் எழும்பூர் சென்று ஒரு தானியைப் பிடித்து அலுவலகம் சென்றடைந்தேன். இரவு சற்று நேரம் கண்ணயர்ந்து சரியாக 2 மணிக்கு இருவரும் எழுந்து கொண்டோம். காலைக் கடன்களை முடித்து குளித்துவிட்டு ஊபர் ஊர்தியில் புறப்பட்டோம். அண்ணன் எப்போதும் தனித்தமிழில்தான் பேசுவார் கடவுச்சொல்லை சுழி சுழி நான்கு ஐந்து என்று அண்ணன் கூறியதும் அந்த மலையாளி ஓட்டுநர் சாரி சாரி என்று விழித்தார் மீண்டும் அண்ணன் தனித்தமிழில் சொல்ல அவரால் அதற்கான பொருளைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவே நான் சீரோ சீரோ என்றகூற விமான நிலையத்தை அடைந்தோம். விமான நிலையத்தில் இரண்டு குளம்பி கொடுங்கள் என்றார். அந்த காப்பி கடைக்காரர் திருத்திரு என்று விழித்தார். ரெண்டு காஃபி என்று சொன்ன பிறகுதான் அவருக்கு புரிந்தது. இரண்டு காஃபி 300 ரூபாய். விவசாயிலாம் இங்க வந்தா அவ்ளோதான் என்றார் அண்ணன். ஏன் இவ்வளவு விலை என்றால் வாடகை அதிகம் என்றார். ஒருவழியாக சோதனைக்காக வரிசையில் நின்றோம். கைப்பையில் இருந்த மணிபர்ஸ், செல்பேசி, கைக்கடிகாரம், ஷூ எல்லாவற்றையும் ஒரு டிரேவிலும் கைப்பையை ஒரு டிரேவிலும் வைத்து ஸ்கேன் மெஷினுக்குள் அனுப்பினோம் எனது கைப்பை மட்டும் சந்தேகத்திற்குரிய பைகளின் பக்கம் சென்றது. அந்தமானில் விதைப்பதற்காக பள்ளி மாணவர்களிடம் சேகரித்த ஒரு பனை விதையை தூய்மைப்படுத்தி பையில் வைத்திருந்தேன் அதைத்தான் சந்தேகத்திற்குரிய பொருளாக கண்டுபிடித்திருக்குமோ என்று நினைத்து கிட்டே போனால் அங்கிருந்த காவல்துறை அலுவலர் பையில் இருக்கும் டால்கம் பவுடரை வெளியில் எடுங்கள் என்றார். எடுத்துக் கொடுத்ததும் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார். பௌடர் போனால் பரவாயில்லை. பனை விதை தப்பியதே என்ற ஆறுதல் எனக்கு. சோதனைகள் முடிந்து இண்டிகோ நிறுவனத்தின் பேருந்தில் ஏறினோம். விமான நிலையத்தில் பேருந்து நிலையம் போல் அங்கங்கே விமானங்கள் நின்று கொண்டிருந்தன. பத்து நிமிடப் பயணத்தில் எங்கள் விமான படிக்கட்டுக்கு அருகில் பேருந்து நின்றது. விமானப் பணிப்பெண்ணின் வரவேற்பை ஏற்று இருக்கையில் அமர்ந்தோம். எங்களுக்கு முன்பே எழுத்தாளர் தமிழ்மகன் விமானத்துள் அமர்ந்திருந்தார். நான் தான் முன்னாடியே வந்துட்டேன் கொஞ்சம் தூங்கிக்கிறேன் சார் என்று கண்களை கைக்குட்டையால் மூடி தூங்கத் தொடங்கினார். சற்று நேரத்தில் பணிப்பெண் அவரை எழுப்பி சீட் பெல்ட் அணிய வேண்டினார். இது எனக்கு மூன்றாவது விமானப் பயணம் என்றாலும் ஏறும்போதும் இறங்கும் போதும் சற்று பயமாகத்தான் இருக்கிறது. அனைவரும் சற்று கண்ணயர்ந்தோம். சரியாக 6:55 க்கு விமானம் அந்தமானில் தரை இறங்கியது. வெளியில் உலகத் தமிழ்ச் சிறகம் மற்றும் அந்தமான் தமிழர் சங்கப் பொறுப்பாளர்கள் எங்களை வரவேற்க காத்திருந்தனர். அனைவருக்கும் சரிகை துண்டு அணிந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். மகிழுந்தில் தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். வானமும் மெல்லிய தூறலால் எங்களை வரவேற்றது. நிலையத்துக்கு எதிரில் நடந்து வரும் தொலைவில்தான் திவ்யம் விடுதி. தமிழர் சங்கத் தலைவர் திரு.லி.மூர்த்தி அவர்கள்தான் விடுதியின் உரிமையாளர் இரண்டாம் தலைமுறையாக அந்தமானில் வாழ்ந்து வரும் தமிழர் அவர் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டோம். நண்பர் தமிழ்மகனுக்கும் எனக்கும் ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அறைக்கு சென்றதும் கெட்டிலில் வெந்நீர் வைத்து காபி தயாரித்து குடித்தோம். நாளை மாநாடு தொடங்கிவிடும் என்பதால் அருகிலுள்ள இடங்களை இன்றே சுற்றி பார்க்கலாம் என்று திட்டமிட்டோம். அதற்குள் சிற்றுண்டி தயாராக இருக்கிறது சாப்பிட வாங்க என்று விடுதி வரவேற்புக் கூடத்திலிருந்து தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். சாப்பிட மூன்றாம் தளம் சென்றோம். அங்கு சித்த மருத்துவர் வேலாயுதம், பதிப்பாளர் மயிலவேலன் சேலம் நண்பர்கள் உலகத் தமிழ்ச் சிறக பொருளாளர் திரு.கோபிரமேஷ் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அனைவரும் பேசிக்கொண்டே பீங்கான் தட்டில் அவரவர்க்கு தேவையானதை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தோம். நண்பர் கோபி அனைவருக்கும் ஆம்லெட் ஆர்டர் செய்தார். நிறைவாக பழச்சாறு, காபி என அவரவர் விருப்பத்திற்கேற்ப எடுத்துக் கொண்டனர். காலை உணவு சூடாகவும் சுவையாகவும் இருந்தது.
வரவேற்புக் குழுவில் இடம் பெற்றிருந்த நண்பர் மயிலவேலன் அவர்களிடம் கூறி ஒரு மகிழுந்தில் வேலாயுதம் தமிழ் மகன் நான் மயிலவேலன் ஆகிய நால்வரும் அருகில் உள்ள செல்லுலார் சிறையைப் பார்க்க புறப்பட்டோம். மழை சன்னமாக தூறிக்கொண்டிருந்தது. ஆகஸ்டு 15 விடுதலை நாள் என்பதால் பார்வையாளர்களுக்கு கட்டணமில்லாமல் அனுமதித்தனர். படங்களில் மட்டுமே பார்த்த அந்தமான் சிறையை நேரில் பார்க்கப் போகிறோம் என்கிற எண்ணம் என்றாலும் ஒரு இனம்புரியாத சோகம் உள்ளுக்குள் இருந்தது. எத்தனைப் போராளிகளை கொடுமைப் படுத்தி அடைத்து வைத்த இடம் என்கிற கோபம். ஒவ்வொரு செல்லிலும் உள்ளே சென்று பார்த்தோம். விடுதலை நாளில் சிறைக்குள் கைதிகளாக நின்று படங்கள் எடுத்துக் கொண்டோம். தூக்கு மேடையைப் பார்க்க இன்று அனுமதி இல்லை என்றார்கள். சின்னஞ்சிறு கொட்டடியில் இரு சிறு பள்ளங்கள் அருகருகே இருந்தன. ஒன்று சாப்பிடுவதற்கு மற்றொன்று கழிவறைக்காகவாம் நினைக்கவே மனம் கொதித்தது. கழிவறை பள்ளங்கள் வெளியிலுள்ள கழிவுநீர் கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ளதை வெளியில் வந்தபோது பார்க்க முடிந்தது. கைதி தப்பி விடாமல் இருப்பதற்காக நீளமான தாழ்ப்பாளில் பூட்டும் இடம் கைதி பார்க்கமுடியாதவாறு கதவை விட்டு ஒரு அடி தள்ளி சுவரில் வைக்கப்பட்டிருந்தது. வெளியிலிருந்து மட்டுமே திறக்க முடியும். உள்ளிருந்தபடி திறப்பதற்கு முயற்சி கூட செய்யமுடியாது. நடுவில் வட்டவடிவ அலுவலக கட்டடத்திலிருந்து ஏழு ஆரங்கள் வடிவில் கட்டப்பட்ட சிறை ஐந்து ஆரங்கள் இடிக்கப்பட்டு இரண்டு ஆரங்கள் மட்டுமே இன்று சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு பாதுகாக்கப் படுகிறது. அதனைத் தொடர்ந்து திரங்கா நினைவு கொடி முனைக்குச் சென்றோம். இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்ட முதல் பிரதேசமாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்தான் விளங்கியது. அதனைக் குறிக்கும் வகையில், டிசம்பர் 30, 1943 அன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இங்குதான் இந்திய தேசியக் கொடியை முதன்முதலில் ஏற்றினாராம். அந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில் இந்த இடம் இன்று, நினைவுத் தளமாகவும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகவும் அமைந்துரள்ளது, சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவிக்கும் வகையில் இந்திய தேசியக் கொடி மலரவிடப் பட்டுள்ளது. அங்கு நின்று படங்கள் எடுத்துக் கொண்டோம். மழை தூறிக்கொண்டே இருந்தது. அடுத்து அருகிலுள்ள நேவல் மரைன் சாமுத்ரிகா அருங்காட்சியகம் சென்றோம். அந்தமான் பழங்குடி மக்கள் வாழ்க்கை முறைகள் வரலாற்று ஆவணங்கள் அந்தமான் தொடர்புடைய முக்கிய ஆளுமைகள் போன்றவை காட்சிப் படுத்தப் பட்டிருந்தன. ராசேந்திர சோழன் 1025 ஆம் ஆண்டு கடற்படை போரில் வெற்றி பெற்று கடாரத்தை கைப்பற்றினார் என்ற குறிப்பு இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஒரு பெரிய பெரிஸ்கோப் இருந்தது அதனை சரியாக இயக்கி பார்க்கத் தெரியாமல் படம் மட்டும் எடுத்துக் கொண்டோம்.செல்லுலார் சிறையின் முழு அமைப்பின் மாதிரி கட்டடம் அங்கு வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அடுத்த விமானம் வந்தது. அதில் வரும் விருந்தினர்களை வரவேற்க செல்லவேண்டி இருந்ததால் முழுமையாக பார்க்க இயலவில்லை.
மீண்டும் அறைக்கு வந்து ஓய்வு எடுக்கத் தொடங்கினோம். மழை விடாமல் தூறிக் கொண்டிருந்ததால் வேறு எங்கும் செல்ல இயலவில்லை. காலை 11 மணிக்கு அந்தமான் வந்த விமானம் மழையின் காரணமாக தரையிறங்க இல்லாமல் அரைமணி நேரம் வானத்தில் வட்டமடித்து மீண்டும் தரைக்கு வர அப்போதும் இறங்க இயலாமல் மீண்டும் சென்னைக்கு சென்று பிறகு மாலை 4:00 மணிக்கு வந்து சேர்ந்ததாக அவ்விமானத்தில் வந்த சித்தமருத்துவர் திரு தணிகாசலம் கூறினார். அனைவரும் பயந்த படியே பயணம் செய்ததோடு மதிய உணவும் சாப்பிட முடியாமல் விமான நிறுவனம் வழங்கிய ஒரு பாக்கெட் பிஸ்கட்டை மட்டும் சாப்பிட்டு பசியோடு வந்து சேர்ந்துள்ளனர்.மாலை 5 மணிக்கே இருட்டத் தொடங்கிவிட்டது.
மறுநாள் காலை வழக்கம் போல் 4: 45 க்கு அலாரம் அடிக்க தொடங்கியது. எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு நடைப் பயிற்சி செல்லலாம் என்று புறப்பட்டேன். அதிகாலை 5 மணிக்கே நம் ஊரில் ஆறு மணிக்கு இருப்பது போல் பளிச்சென்று வெளிச்சம் இருந்தது. உள்ளூர் நண்பர்கள் காலை 5 மணிக்கு பொழுது விடிந்து மாலை 5 மணிக்கு பொழுது போகும் அழகிய தீவு அந்தமான் என்று தெரிவித்தனர். அந்த நேரத்திலும் சன்னமாக தூறிக் கொண்டிருந்தது. சற்று தூரம் நடந்ததும் தூறல் வலுக்கத் தொடங்கியது. ஒரு கடையில் ஒதுங்கி நின்றேன் அப்போது மழையில் நனைந்தபடி இரண்டு சைக்ளிஸ்ட்கள் ரைடு சென்று கொண்டிருந்தனர். ஆஹா என்று இருந்தது எனக்கு. நண்பர் சிவக்குமார் டெல்லி சென்றபோது சைக்கிள் ஓட்டியது போல் நமக்கு அந்தமானில் யாராவது நண்பர்கள் கிடைப்பார்களா என்று ஸ்ட்ராவாவில் முன்பே தேடிப் பார்த்தேன். யாரும் சிக்கவில்லை. இன்று சற்றும் எதிர் பாராமல் நேரிலேயே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடைப்பயிற்சி முடிந்து திரும்பும் போது கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தின் முன் அந்த நண்பர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை அணுகி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களைப் பற்றி கேட்டேன். கல்வித்துறையில் இயக்குனராகப் பணியாற்றும் லக்ஷ்மண் கல்கத்தாவிலிருந்து வந்திருப்பதாக தெரிவித்தார். இருவரும் தொலைபேசி எண்களையும் ஸ்ட்ராவா ஐ.டி.யையும் பரிமாறிக் கொண்டோம். அறைக்கு வந்து குளித்து சிற்றுண்டி உண்டு மாநாட்டுக்கு புறப்பட்டோம். உலக தமிழ்ச் சிறகம் அமைப்பினரும் அந்தமான் தமிழர் சங்கத்தினரும் மாநாட்டு ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக கடாரம் கொண்டான் ஆயிரம் ஆண்டு வெற்றி விழா வளைவினை திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக அந்தமான் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு பிஷ்ணு பதாரே கலந்துகொண்டு மாநாட்டுக்கு வந்திருந்தவர்களோடு ஒவ்வொருவரையும் எந்த மாநிலம் எந்த நாடு என்று விசாரித்தபடி ஹவ் ஈஸ் மோடி கவர்ன்மென்ட் என்று ஒவ்வொருத்தரிடமும் கட்டைவிரலை உயர்த்தியபடி கேட்டுக் கொண்டே வந்தார் எங்களிடமும் அதே கேள்வியை கேட்டார் எங்கள் அருகில் அமர்ந்திருந்த நண்பர் “அத எங்க வாயால எப்படி சொல்றது” என்று மெதுவாக நகைச்சுவை உணர்வோடு கூற அனைவரும் சிரித்தோம் அவரும் சிரித்தார். மழை விட்டு விட்டு பெய்தபடியே இருந்தது. மழைக்காக அந்தமானில் எந்த வேலையும் தடைபடவில்லை. மாநாடு முடிந்து அறைக்குத் திரும்பி சற்று நேரம் ஓய்வெடுத்து மீண்டும் மாலை அம்பேத்கர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற லக்ஷ்மன் ஸ்ருதி இன்னிசைக் குழுவினரின் மெல்லிசை விருந்து நிகழ்ச்சிக்கு புறப்பட்டோம்.
அந்தமானில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இசைப்பாடல் நிகழ்வு நடப்பதாக தெரிவித்தனர். மக்கள் திரளாக வந்து கண்டு ரசித்தனர் சிறுவர்கள் நடனம் ஆடினார்கள் இளைஞர்கள் பாடல்களை விரும்பி கேட்டார்கள். முத்த மழை பாடலையும் பாடினார்கள்.
நாங்கள் இடையிலே விடுதிக்கு வந்துவிட்டோம்.
மறுநாள் காலையும் நடைப்பயிற்சி சென்றேன் இன்றாவது லட்சுமண் அவர்களிடம் சைக்கிள் வாங்கி ஒரு ரைடு போகலாம் என்று எண்ணினேன் அவரைப் பார்க்க முடியவில்லை. இன்று வேறு சாலையில் நடந்து கடற்கரை அருகில் செல்ல நினைத்தேன் அது துறைமுகப் பகுதி என்பதால் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே அருகில் உள்ள காய்கறி சந்தையைப் பார்த்தபடி நடக்கத் தொடங்கினேன். பெரிய சைஸ் கத்தரிக்காய்கள் புதுமையாக இருந்தது. நம் ஊர் புளிச்ச கீரையைப் போலவும் இன்னும் சில புதிய வகை கீரைகளையும் வைத்திருந்தனர். கீரைகளும் காய்கறிகளும் மட்டுமே சிறிய அளவில் அங்கு உற்பத்தி செய்கின்றனர் மற்றபடி அரிசி பருப்பு சமையலுக்கு தேவையான அனைத்து பொருள்களும் சென்னையிலிருந்துதான் வருகின்றனவாம். அதே போல் கல்கத்தாவிலிருந்தும் சில பொருள்கள் வருகின்றன. பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதுவும் பெரும்பாலும் கண்ணாடி பாட்டில்கள். மின்சார உற்பத்தியும் அங்கு இல்லை. ஆங்காங்கே பவர் ஹவுஸ் அமைத்து ஜெனரேட்டர் மூலமே மின்சாரம் வழங்கப்படுகிறது.கடல் அலையிலிருந்தும் காற்றாலை மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்ய ஏன் அரசு முன்வர வில்லை என்று தெரியவில்லை. சூரிய ஒளி மின்சாரம் பலனளிக்கவில்லை யாம்.
இரண்டாம் நாள் மாநாட்டில் அந்தமான் துணை நிலை ஆளுநர் டி.கே.ஜோஷி அவர்கள் கலந்து கொள்ள வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தது. மாநாட்டு அரங்கத்தின் முதன்மை நுழைவாயிலை ஆளுநர் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. எனவே எங்கள் வண்டியை பின்பக்க வாசல் வழியாக செல்லும்படி காவலர்கள் அறிவுறுத்தினர். அங்கு மெட்டல் டிடெக்டர் நுழைவாயில் அமைத்து அதன்வழியாக ஒவ்வொருவரையும் சோதனை செய்து அனுப்பி வைத்தனர். குறித்த நேரத்தில் ஆளுநர் வந்து சேர்ந்தார். கருத்தரங்க மலரை வெளியிட்டு சைதை துரைசாமி அவர்களுக்கு செந்நாப் போதர் விருதும் தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன் அவர்களுக்கு கடாரம் கொண்டான் விருதும் ஆளுநரால் வழங்கப்பட்டது. இருவருமே வர இயலாத சூழல் எனவே கிருஷ்ணபிரியாவும் மயிலவேலனும் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். ஆளுநர் சென்றதும் நான் தமிழ் மகன் அவரின் நண்பர்கள் கோபி பிரசன்னா உதை ஆகிய நால்வரும் அருகில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் தீவுக்கு செல்வதற்காக புறப்பட்டோம். உள்ளூர் நண்பர் ஒருவர் ஆட்டோவில் அழைத்துச் சென்று மெரினா பூங்காவுக்கு அருகில் தீவுக்கு செல்வதற்கான படகுக்கு பதிவு செய்து காத்திருந்தோம். ஒரு படகுக்கு தேவையான நபர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரு வழியாக ஆட்கள் சேர்ந்ததும் எங்கள் படகு புறப்பட்டது. முதல் முறையாக கடலில் படகுப் பயணம். சிறுவயதில் வீராணம் ஏரியில் படகு சவாரி செய்து தாத்தா வீட்டுக்கு செல்வோம். கடல் அவைக்கு ஏற்ப படகு ஊஞ்சல் போல் தாலாட்டிச் சென்றது சுகமான அனுபவம். தீவை அடைந்ததும் நிறைய மான்களும் மயில்களும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அந்த வெட்ட வெளியில் நான் கொண்டு சென்ற பனை விதையை ஊன்றி வைத்தோம். அனைவரும் பேட்டரி வண்டியில் சென்றனர். நாங்கள் நடந்தே சென்றோம். அந்தத் தீவு முன்பு ராஸ் தீவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது மோடி அரசாங்கம் அந்த தீவுக்கு சுபாஷ் சந்திர போஸ் தீவு என்று பெயர் மாற்றம் செய்துள்ளது.
தற்போது முழுவதுமாக சிதைந்த நிலையிலுள்ள பழைய கட்டடங்களை மட்டுமே கொண்டிருக்கும் இத்தீவு 1941 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு முன்புவரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டத்தின் நிர்வாக தலைமையகமாய் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு போர்ட் பிளேருக்குத் தலைமையகம் மாற்றப்பட்டது. இத்தீவு தற்போது இந்தியக் கடற்படையால் நிர்வகிக்கப்படுகிறது. அந்தமானுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பலரும் பார்க்கும் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக இத்தீவு விளங்குகிறது.
அக்கால கட்டத்தில் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்திற்கும் தங்கியிருப்பதற்கும் இத்தீவு பயன்படுத்தப்பட்டது. பிரமாண்டமான கட்டங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. நீச்சல் குளம் நீர் சுத்திகரிப்பு நிலையம் என எல்லாம் சிதைந்து கிடக்கின்றன. இந்த தீவில் இவ்வளவு கட்டுமானங்களை எப்படி செய்திருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்கவே வியப்பாக இருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது 1942-இல் இருந்து 1945 வரை சப்பானியர் வசம் அந்தமான் தீவு வந்தது. இந்தக் காலகட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசு இத்தீவில் இந்தியக் கொடியேற்றினார். அதன் நினைவாக 2018-ஆம் ஆண்டு திசம்பர் 30-ஆம் நாள் இதன் பெயர் ராஸ் தீவு என்பதில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோசு தீவு என்று மாற்றப்பட்டது.
தற்போது இது இந்தியக் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பொதுமக்கள் குடியேற அனுமதி இல்லை.
ராஸ் தீவில் பல திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு நடந்துள்ளது. சில திரைப்படங்கள் மற்றம் விவரங்கள்,
காக்க காக்க திரைப்படத்தில் வரும் உயிரின் உயிரே பாடல் முழுவதும் இந்த தீவில்தான் படமாக்கப்பட்டது.
கடல் திரைப்படத்தின் சில காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள கலங்கரை விளக்கைப் பார்க்க விரும்பியும் நேரமில்லாமல் திரும்பினோம்.
வழியில் அன்னப் பூர்ணா உணவு விடுதியில் மதிய உணவை முடித்துக் கொண்டு அறைக்கு சென்றோம். மாலை 6 மணிக்கு தமிழர் சங்கத்தில் மீண்டும் ஒன்றுகூடி ஒருவரை ஒருவர் முறையாக அறிமுகம் செய்து கொண்டு இனிய விருந்தோடு விடைபெற்றோம்.
மறுநாள் காலை 7:30 க்கு விமானம் நிலையத்திற்கு 6:30 க்கு செல்ல வேண்டும் என்பதால் காலை உணவாக சேண்ட்விச்சும் பழச்சாறும் கொடுத்தனுப் பினர். விமான நிலையத்தில் சாப்பிட்டு புறப்பட தயாரானோம். அண்ணன் மணிவாசகன் 300 ரூபாயை மிச்சப்படுத்திவிட்டேன் என்று கூற எப்படிண்ணா என்று நான் கேட்க அறையிலேயே காஃபி தயாரித்து குடித்து விட்டு வந்தேன் என்று கூற அனைவரும் சிரித்தோம். எங்கள் சுமைகளை எடை போட்டு அனுப்புவதில் இரண்டு விமானப் பணிப்பெண்கள் உதவினர். எங்களோடு படம் எடுத்துக் கொள்ள விரும்பினர். ஒரு பணிப்பெண் செல் போனை கையில் வைத்துக் கொண்டு சிரிங்க என்று தமிழில் கூற எல்லாரும் புன்னகை பூக்க படத்தை எடுத்தார். அண்ணன் ராஜா அவர்கள் தனது பணி அனுபவங்களை ஒரு சுயசரிதை போல “நியாயத்தின் பக்கம்” என்று புனைகதை யாக 500 பக்கங்களில் எழுதியுள்ளார். பிழைத் திருத்தும் பொருட்டு கையிலேயே வைத்திருந்தார். அதை வாங்கி நான் படிக்கத் தொடங்கினேன். சென்னை வரும் வரை கீழே வைக்க மனமில்லாமல் புத்தகத்தில் மூழ்கிவிட்டேன். அருமையான படைப்பாக வந்துள்ளது. விமானம் தரை இறங்கியபோது சரியாக 9:30 மணி. நாங்கள் இறங்கி பேருந்திலிருந்து வெளியேறும் இடத்திற்கு வர 10:30 ஆகிவிட்டது அனைவரும் பெட்டிகளைச் சேகரிக்க நின்றுகொண்டிருந்தனர். 11:40 க்கு விருத்தாசலம் செல்ல தொடர்வண்டி இருப்பதாலும் என் பெட்டி கையில் இருந்ததாலும் அனைவரிடமும் விடை பெற்று வெளியில் வந்தேன். கிளாம் பாக்கம் பேருந்து நின்றது பணியைப் பார்த்தேன் 11:10 இன்னும் அரை மணி நேரத்தில் தாம்பரம் சென்றால் தொடர்வண்டியைப் பிடித்துவிடலாம். தாம்பரம் டிக்கெட் வாங்கி அமர்ந்தேன். சரியாக 11:40க்கு தாம்பரம் வந்தது. நான் இறங்கி நிலையத்திற்கு சென்று டிக்கெட் வாங்குவதற்குள் வண்டி புறப்பட்டு விடும் என்பதால் கிளம்பாக்கம் டிக்கெட் எடுத்து பேருந்தில் செல்ல முடிவெடுத்தேன். பேருந்தை பிடித்து ஒரு வழியாக மாலை 5 மணிக்கு வீடு வந்தேன். இந்த பயணம் பல்வேறு புதிய மனிதர்களின் அறிமுகத்தையும் புதிய அனுபவங்களையும் தந்தது.
படிப்பவருக்கும் நேரில் சென்றதுபோல உணரும் வகையில் தங்களின் சுற்றுலா அனுபவம் சுவையானதாக உள்ளது. அருமை சார்.
ReplyDelete