தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Friday, November 1, 2013

சுழியான் சிறுகதை




               
                உருண்டி வைத்திருந்த சுழியான் உருண்டையை மைதாவில் நனைத்து எண்ணெயில்  போட்டபடி ,”தீவாளிக்காவது தலையில எண்ணெய் தேச்சு குளிக்கக் கூடாதா?” என்றாள்.
இதைக்கேட்ட அவள் கணவனுக்கு அவன் எட்டாவது படிக்கும் போது அவன் ஆசிரியர் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. என் மருமொவ இருக்காள தீவுளிக்கு தீவுளி எண்ண தேச்சு குளிப்பா. என் மொவ இருக்காளே  சனியோ... சனி தான்  எண்ண தேச்சு குளிப்பா.  (அந்த தீவுளிக்கு தீவுளி என்று சொல்லும்போது தீபாவளி வாரம் ஒரு முறை வருவது போலவும் சனியோட சனி என்பது சனிக்கிழமை ஆண்டுக்கு ஒரு முறை வருவது போலவுமிருக்கும்) அவன் சிறு வயது நினைவுகளில் மூழ்கினான்.
அப்பா அதிகாலையிலேயே கீரனூர் செட்டியாரிடம் வாங்கிய நல்லெண்ணெயை தலையில் வழிய வழிய தேய்த்துவிட்டு புலிமார்க் சீயக்காயை டபராவில் கொட்டி வடிகஞ்சியை ஊற்றி களிம்பு போல் குழைத்து வென்னீரை தலையில் ஊற்றி ஒருமுறைக்கு இரு முறை சீயக்காயை நுரை வரும்படி தேய்த்து அலசி விடுவார். தலையோடு உடலும் மனமும் புத்துணர்வாயிருக்கும். (தீபவளியென்றில்லை ஒவ்வொரு சனிக்கிழமையும் எண்ணெய்க் குளியல்தான்)
மகன் , அம்மா  சொலவதைக் காதில் வாங்கிக்கொள்ளாதவனாய் ஷாம்ப்பு சாஷேயை எடுத்துக்கொண்டு குளிக்கக் கிளம்பினான்.
நான் சொல்றது காதுல விழலையா?
ஏம்மா  எதுக்கும்மா எண்ணெய் தேய்க்கணும் ஷாம்ப் போட்டு குளிச்சா என்ன?
அதிகாலை நல்லெண்ணெய் தேய்ச்சு குளிச்சா கங்கையில் குளிச்ச மாதிரி
அப்போ கடலை எண்ணெய் தேச்சு குளிச்சா காவிரியில குளிச்ச மாதிரியா? போம்மா என்று கூறிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் குளியலறைக்குள் நுழைந்தான்.
அவன் அப்பாவுக்கு மகனின் பகுத்தறிவை எண்ணி மனதுக்குள் மகிழ்ச்சி.
மகன் குளிக்கச்சென்றதும் மீண்டும் இவன் சிறுவனானான். அம்மா  எப்போது எழுவாள் என்று தெரியாது. இவனை அதிகாலை ஐந்து மணிக்கு எழுப்புவார்கள் அப்போது அம்மா சுழியான் செய்துகொண்டிருப்பாள். அவள் செய்யும் சுழியான்  நாவில் நீர் சுரக்கச்செய்யும். படைக்காமல் உண்ணக்கூடாது என்பதால் எப்போது படைப்பார்கள் என்று காத்துக் கொண்டிருப்பான். படைத்து முடித்ததும் புதுசட்டையைக் கூட சட்டைபண்ணாமல் சுழியானை எடுத்து சுவைப்பான். அது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் பலகாரம் என்பதால் எல்லோருக்குமே சுழியான் மீது ஒரு ஈர்ப்பு. ஏன் மற்ற நாட்களில் சுழியான் செய்வதில்லை என்பது இன்று வரை புரியாத புதிராய் உளது. வித விதமாய் கொல்லையில் என்ன விளைகிறதோ அதிலிருந்து தின் பண்டங்களை செய்து கொடுப்பாள் அம்மா. கம்பு அவல், சோளப்பொரி, அவிச்ச தட்டைப் பயிர், பச்சைப்பயிர் பால் கொழுக்கட்டை, வறுத்த கொள்ளு, எள்ளுருண்டை என்று செய்யும் அம்மா சுழியானை  ஏன் தீபாவளிக்கு மட்டுமே செய்கிறாள்என எண்ணிக்கொண்டிருந்தவனை  நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தான் மகன்.
குளித்து தலையை துவட்டியபடி அடுப்பறையில் நுழைந்து சுழியானை எடுத்ததும் அம்மா பதறினாள். அய்யைய்யோ படைக்காம சாபிடக்கூடாதுடா என்று செல்லம் கொஞ்சினாள்.
யாருக்கு படைக்கணும் ? என்று கேட்டதும்
அவளுக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வதென்று புரியவில்லை நரகாசுரனுக்கா? கிருஷ்ணனுக்கா? என்று சந்தேகம். பொதுவாக சொல்லிவைப்போம் என்று சாமிக்குதான் என்றாள்.
சாமிக்குதான... அப்ப சரி என்று சுழியானைக்கையிலெடுத்தான்.
என்ன... தம்பி? என்று செல்லமாகக் கடிந்துகொண்டாள்.
ஏம்மா ,”நீதான என் சாமி சாப்புடுப்பான்னுகொஞ்சுவ. அப்ப நாந்தான ஒனக்கு சாமி என்றவன்
இந்த சுழியான் எப்படிம்மா செய்றீங்க?
இனிப்புப் பூரணத்த உள்ள வச்சு மைதாவக் கரைச்சு அதுல பூரணத்த முக்கிஎடுத்து எண்ணெயில போட்டா சுழியான் ரெடி”, என்றாள் உற்சாகமாக. இந்த மைதா மாவு ,உருண்டைய உடையாம கெட்டியா புடிச்சுக்கும்.
இந்த உருண்டையைப் பாத்தா மைதாமவுல சிக்கிகிட்டு முழிக்கிற மாதிரியே இருக்கு. நீ அப்பாகிட்ட மாட்டிகிட்டு முழிக்கிற மாதிரி” .
அவளுக்கு திக்கென்று ஆனது நம்ம மகனா இப்படி பேசுகிறான் என்று. சற்று சுதாரித்துக்கொண்டு ருசியா இருக்கா இல்லையா?
இருக்கு.. இருக்கு.. என்று வெளியில் வந்தான்.
பட்டாசு சத்தமும் புகை மூட்டமும் காதையும் மூக்கையும் அடைத்தன.
பட்டாசு வெடிக்கிற பழக்கம் சீனாவுல இருந்து நாம கத்துகிட்டதுன்னு யாரோ சொல்லக் கேட்டதா ஞாபகம். இந்த மக்கள் பழக்கங்கள் என்னும் மைதாவுக்குள் சிக்கிக்கொண்டு விழிக்கிறார்களோ என்று தோன்றியது.

நம் ஊரும் கூந்தன் குளம் போல பட்டாசு சத்தமில்லாமலிருந்தால் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்தான். நினைக்கவே மகிழ்ச்சியாய் இருந்தது .
அப்படி ஒரு தீபாவளிக்காக மனம் ஏங்கியது.

நன்றி : தமிழ்முரசு தீபாவளி சிறப்பிதழ்





2 comments:

  1. ஐயா, வணக்கம்!

    கதை நன்றாயிருக்கிறது.

    தாங்கள் ஒரு இலக்கியவாதியாயிருப்பதால் தமிழை எழுதுவதில் பிழைநேராமலிருக்கவேண்டுமென்பதற்காக இந்தக்கதையிலிருந்தே சில பிழைகளை சுட்டிக்காட்டவிரும்புகிறேன். நான் காட்டவிருப்பவை புணர்ச்சியிலக்கணப்பிழைகளேயன்றி வேறில்லை!

    இக்காலத்தில் தமிழை கற்றோர்கூட புணர்ச்சிப்பிழையில்லாமலெழுதுவதில்லை. என்றாலும் நாம் அந்த பிழைகளை அறிந்து அவற்றை விலக்கியெழுதுவது நாம் எழுதும் தமிழை சிறப்பாக்குமன்றோ?

    சில எடுத்துக்காட்டுகளும் விளக்கங்களும்:

    "நல்லெண்ணெயை தலையில் வழிய வழிய தேய்த்துவிட்டு"

    'வழியவழிய' என்பது அடுக்குத்தொடர். இது உங்களுக்கு தெரிந்திருக்கும். இதை பிரித்தெழுதலாகாது.

    "நுரை வரும்படி தேய்த்து அலசி விடுவார்"

    'நுரைவரும்படி' என்பது எழுவாய்த்தொடர். இதை 'நுரை வரும்படி' என்று பிரித்துமெழுதலாம், தேவைப்பட்டால்.

    தேவையென்றால், 'வரும்படி' என்பதை குறிப்பிட்டுச்சொல்லவேண்டியிருந்தால் அங்கே அப்படி பிரிக்கலாம். இங்கே சேர்த்தெழுதுவதுதான் பொருந்தும்.

    'அலசி விடுவார்' என்பதையும் சேர்த்தெழுதியிருக்கலாம். சேர்த்தால் அது ஒரு வினையெச்சத்தொடர். முன்புசொன்னதுபோல் 'விடுவார்' என்பதை சிறப்பித்துச்சொல்லவேண்டுமானால், இப்படி இதையும் பிரித்தெழுதுவது பிழையன்று.

    'அம்மா சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளாதவனாய்'

    'சொல்வதைக் காதில்' என்பதில் வலி மிகுந்ததால் புணர்ந்தது தெரிகிறது. புணர்த்தியபின் சொற்களை பிரித்தலாகாது!
    'சொல்வதைக்' என்பதில் ஈற்றெழுத்தாயிருப்பது ஒரு வல்லினமெய். வல்லினமெய் தமிழ்ச்சொல்லுக்கு ஈற்றெழுத்தாயாகாதென்பது தொல்காப்பியருக்குமுன்பிருந்தேவுள்ளது.

    இதில் புணர்ந்ததே பிழைதான்! ஏனெனில், 'ஐ' என்னும் இரண்டாம்வேற்றுமையுருபின்முன் ஒரு வினைச்சொல்வந்துதான்புணரும். பெயர்ச்சொல்வந்தால் அது புணராமலேநிற்குமேயன்றி புணர்ந்துநிற்காது!

    'சுழியான் நாவில் நீர் சுரக்கச்செய்யும்'

    'நீர் சுரக்கச்செய்யும்'

    சொற்கள் இதில் புணராதிருப்பது பிழை.
    இதுவும் இரண்டாம்வேற்றுமைப்புணர்ச்சிதான், ஆனால் இதில் உருபானது மறைந்துவந்தது. இப்படி மறைந்துவருவதை தொகைநிலையென்கிறது, இலக்கணம்.

    'நீர்சுரக்கச்செய்யும்' என்பதும்
    'நீர் சுரக்கச்செய்யும்' என்பதும் ஒரேபொருளைத்தருவனவல்லவென்பதை எண்ணிப்பாருங்கள்!

    'மாடுபிடி!' என்றால், 'மாட்டைப்பிடி!' என்பது பொருள். இது இரண்டாம்வேற்றுமையின் தொகைநிலைத்தொடர்.

    'மாடு பிடி!' என்றால் பொருள் மாறிவிடும். ஒருவனை மாடென்றழைத்து பிடியென்றதாகும்!
    (இடையில் காற்புள்ளியில்லையேயென்கிறார்கள். தமிழுக்கு புள்ளியேதேவையில்லையென்பது அவர்கள் அறியாதது.)

    புணர்ச்சியிலக்கணத்தில் தெளிவடையாமல் தமிழை பிழையின்றியெழுதுவது இயலாது.

    புணர்ச்சியை கற்போம், தமிழை காப்போம்!

    ReplyDelete
  2. ஐயா இன்றுதான் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். மிக்க நன்றி இவ்வளவு நுட்பமாக பிழைகளைச்சுட்டியமைக்கு. தட்டச்சில் சில அவசரத்தில் சில என பல பிழைகள் வந்துவிடுகின்றன. த்விர்ப்பேன். மிக்க நன்றி.

    ReplyDelete