எப்போதும் விளையாட்டுச்செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காகாத என் கண்களை ஈர்த்தது தினமணியின் 13 ஆம் பக்க செய்தி. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் என்ற செய்தி. தமிழகத்தின் முன்னணி தடகள வீராங்கனை காயத்ரி பற்றிய செய்திதான் அது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழோசையில் காயத்ரி பற்றி நான் எழுதிய கட்டுரையை இங்கே மீண்டும் பதிவுசெகிறேன்.
விளையாட்டுப் போட்டிகளில் உலக அளவில் சாதனை புரிந்தவர்களுக்கு நம் நாட்டு அரசு ஊக்கப்பரிசு வழங்கி அந்த சாதனையைப் பாராட்டுவது நடைமுறை. அதன் மூலம் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் ஊக்கம் பெறுவதோடு மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை ஈட்டி நம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பார். ஒலிம்பிக் போட்டியிலோ ஆசிய விளையாட்டுப் போட்டியிலோ தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ஒரு கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ஐம்பது லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு இருபத்தைந்து லட்சமும் ஊக்கப் பரிசு வழங்குவதற்கு அரசு ஆணையே உள்ளது. அது போலவே காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்றவர்களுக்கு இருபது லட்சமும், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றவர்களுக்கு முறையே பதினைந்து லட்சமும் பத்து லட்சமும் வழங்குவதற்கும் அதே அரசு ஆணை வழிகாட்டுகிறது. காமன் வெல்த் போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கம் வாங்கியதற்காக கேரள மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சுஜார்ஜுக்கு தமிழக அரசு பதினைந்து லட்சம் வழங்கியுள்ளது.ஆனால் சென்ற ஆண்டு (2008) அக்டோபர் மாதம் பூனாவில் நடைபெற்ற இளையோருக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு 4 ஙீ 100 மீ தொடர் ஒட்டத்தில் தங்கப் பதக்கமும், தடைதாண்டும் ஓட்டத்தில் ஒரு வெள்ளிப் பதக்கமும் ட்ரிபிள் ஜம்ப்பில் ஒரு வெள்ளிப் பதக்ககமும் வென்று நம் தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திருக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இது வரை தமிழக அரசு எந்த நிதியும் வழங்கவில்லை, ஏன் என்ற காரணமும் தெரியவில்லை. தற்போது சென்னை புனித வளனார் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு கணினித் தொழில் நுட்பம் பயிலும் காயத்ரிதான் அந்தப் பெண். தடைதாண்டும் போட்டியில் காயத்ரியின் சாதனையை முறியடிக்க இதுவரை இந்தியாவிலேயே யாராலும் முடியவில்லை. 2007 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய தடை தாண்டும் போட்டியில் 100 மீட்டர் பிரிவில் 14.40 நிமிடங்களில் இலக்கை எட்டி பூனம் பெல்லியப்பாவின் 11 ஆண்டு கால (14.50) சாதனையை முறியடித்ததோடு மட்டுமல்லாமல் 2008 ஆம் ஆண்டு ஜாம்செட்பூரில் நடைபெற்ற தேசியப் போட்டியில் 14.04 நிமிடங்களிலும் அதே ஆண்டில் மைசூரில் நடைபெற்ற போட்டியில் 14.02 நிமிடங்களிலும் இலக்கை எட்டி இவரது முந்தைய சாதனைகளை இவரேதான் முறியடித்திருக்கிறார். இதுவரை இவரின் இந்த சாதனைகளை யாரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.
2013 அண்மையில் சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கிடையிலான தடகளப்போட்டியில் 13.97 விந்நடிகளில் இலக்கை எட்டியுள்ளார். காயத்ரி 14 வினாடிகளுக்குள் இலக்கை எட்டி மீண்டும் அவர் சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
மேலும் 2007 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், அதே ஆண்டில் தென்கொரியாவில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் தடைதாண்டுதலில் ஒரு வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார். இவரது சாதனைகளைப் பாராட்டாத பத்திரிகைகள் இல்லை.இவரது அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்று நம் நாட்டிற்குப் பெறுமை சேர்க்கவேண்டும் என்பதுதான். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த காயத்ரி விளையாட்டு வீராங்கனையானது சுவையான நிகழ்வாகும். இவரது சொந்த ஊர் அரியலூருக்கு அருகிலுள்ள இலந்தங்குழி. தந்தை கோவிந்தராசு, தாய் நவமணி, அக்காள் கயல்விழி, தங்கை கிருத்திகாவோடு தற்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவர் இரண்டாம் வகுப்பு படித்த போது வட்டார விளையாட்டுப் போட்டி ஒன்றை வேடிக்கை பார்க்கச் சென்றிருக்கிறார் அப்போது விளையாட்டுத் திடலின் ஒரு மூலையில் தாண்டிக் குதித்துக்கொண்டிருந்த இவரை உற்று நோக்கிய பயிற்சியாளர் முனைவர் நாகராஜன் இவரிடமுள்ள திறமையைக் கண்டு கொண்டதோடு காயத்ரியின் பெற்றோரை அணுகி காயத்ரிக்கு உரியமுறையில் பயிற்சி கொடுத்தால் எதிர்காலத்தில் பெரிய விளையாட்டு வீராங்கனையாவார் என்று கூறி அன்று முதல் காயத்ரிக்கு இலவசமாகவே பயிற்சி கொடுத்து வளர்த்தெடுத்திருக்கிறார். இவரின் விளையாட்டுத் திறமைக்காகவே சர்ச்பார்க் ஆங்கிலப் பள்ளி கட்டணமில்லாமல் சேர்த்துக்கொண்டது. பள்ளிக்கல்வியை முடித்ததும் புனிதவளனார் கல்லூரி இலவசக் கல்வியும் விளையாட்டுப் பயிற்சியும் காயத்ரிக்கு வழங்கி வருகிறது. ஒரு அரசு செய்ய வேண்டிய பணியைத் தனியார் நிறுவனம் செய்கிறது.இதற்கு உறுதுணையாக இக்கல்லூரியின் இயக்குநர் பாபுமனோகரன் விளங்குகிறார்.ஆனால் வழங்க வேண்டிய ஊக்கப் பெரும் நிதியைக்கூட வழங்காமல் அரசு காலம் கடத்தி வருவது இவரது ஒலிம்பிக் கனவுகளுக்குத் தடைக்கல்லாக உள்ளது. ஆம் ஒலிம்பிக்கில் சாதிக்கவேண்டும் என்பதுதான் காயத்ரியின் அடுத்த இலக்கு. ஒலிம்பிக்கில் வெற்றி பெறவேண்டுமென்றால் குறைந்தது மூன்றாண்டுகளுக்கு வெளிநாடுகளில் தங்கி பயிற்சி பெற வேண்டும் உணவு, உடல் திறன், விளையாட்டுப் பயிற்சி என ஒவ்வொன்றுக்கும் ஒரு வல்லுனரின் கண்காணிப்பில் தயாரானால்தான் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்குத் தகுதியுடையவராகலாம் அதற்கு ஒரு கோடி செலவாகும். தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தற்போதுள்ள அரசாணைப் படி காயத்ரி இதுவரை செய்த சாதனைகளுக்காக வழங்க வேண்டிய ஊக்கத்தொகையே 62 லட்சத்து 15 ஆயிரம். இந்தத்தொ தொகையை உடனே வழங்கினால் கூட காயத்ரி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட உதவியாக இருக்கும். காயத்ரிக்கு ஊக்கப் பெரும் நிதியை உடனே வழங்கவேண்டுமென்று அச்சமில்லை பத்திரிகை ஆசிரியர் இறைவன் தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். முதல்வரின் தனிக்கவனத்திற்குக் கொண்டு சென்றால் காயத்ரியின் ஒலிம்பிக் கனவு நிறைவேறும். தொடர்புடைய அதிகாரிகள் கவனிப்பார்களா?
இது 2009 இல் எழுதியது இன்ரைய நிலவரம் என்ன என்று தெரியவில்லை. ஆனால் இந்தியாவிலிருந்து ஆசிய தடகளப்போட்டியில் பதக்கம் வெல்லக்கூடியவர்கள் என்று எதிர்பார்க்கப்படுபவர்களில் காயத்ரியும் ஒருவர் என்று இன்றைய திணமணியில் செய்தி வெளியாகி உள்ளது. காயத்ரிக்கு வாழ்த்துகள். பதக்கத்தோடு வருக. உங்கள் ஒலிம்பிக் கனவு நிறைவேறும் நேரம் நெருங்கி விட்டது. வாழ்த்துகள் காயத்ரி.
நன்றி : தினமணி, தமிழ் ஓசை
வணக்கம்
ReplyDeleteவலைச்சர அறிமுகத்துக்கு எனது வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/08/2.html?showComment=1376968367370#c5655263963894551701
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-