தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Sunday, August 1, 2010

மஞ்சணத்தி நூல் திறனாய்வு

கரிசலில் மஞ்சணத்தியான மருதத்து நுணா






தமிழகத்தின் ஐந்து வகை நிலப்பகுதிகளில் ஒவ்வொனறுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அந்தத் தனித் தன்மைதான் நமது நிலவியல் கோட்பாட்டின் சிறப்பு. வேறுபாடுகளுக்கிடையிலும் மெல்லிய நூலிழைகளாய் சில ஒற்றுமைக் கோடுகள் நம் வாழ்முறையை நெய்து பண்படுத்துகின்றன. தமிழர்களுக்கும் தாவரங்களுக்குமான தொடர்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையுடையது. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பை நமது சங்க புலவர்கள் தொடங்கி இன்றைய இளம் படைப்பாளிகள் வரை தங்கள் படைப்புகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவைப் பேசும் பாடல்கள் குறிப்பிடத்தகுந்தவை. மரத்தைத் தாயாக சகோதரியாக தெய்வமாகக் கொண்டாடுகிற மரபைத் தமிழ் இலக்கியத்தில் தொடர்ச்சியாகக் காணலாம்.

"நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினாள் புன்னையது நலனே"

என்னும் நற்றிணைப் பாடலில் இளம் பெண்ணொருத்தி புன்னை மரத்தைத் தங்கையாகப் பார்க்கிறாள். மேலும் புன்னை மரத்திற்கும் மனிதர்களுக்குமான உறவைப் படம்பிடித்துக்காட்டும் பாடல்கள் கலித்தொகையிலும் குறுந்தொகையிலும் இடம்பெற்றுள்ளன. இவற்றின் தொடர்ச்சியாகத்தான் தமிழச்சிக்கும் மஞ்சணத்தி மரத்திற்குமான உறவு இங்கே நவீன கவிதையாகியிருக்கிறது. சிற்றூரில் பிறந்து சிறார் பருவத்தில் அங்கேயே வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கக் கூடிய ஒரு மரம்தான் மஞ்சணத்தி மரம். எங்கள் மருத நிலத்திலும் இந்த மரம் இருக்கிறது. அதனை நாங்கள் நுணா மரம் என்று குறிப்பிடுவோம். நுணாப்பழத்து ருசிக்கு அடிமையாகாத சிறுவர்கள் இருக்க முடியாது. பள்ளிக்கூடம் செல்லும்போது பையை அந்த மரக்கிளையில் மாட்டிவிட்டு அந்த பழங்களைப் பறித்துத் தின்ற பிறகுதான் பள்ளிக்குச் செல்வோம். நுணாப்பழ ருசிக்காக தன் கல்வியையே பறிகொடுத்த கூத்துக்கலைஞர் நடராசன் இன்றும் எங்கள் ஊரில் வாழ்ந்து வருகிறார். நாங்கள் ஏறி விளையாடிய எங்கள் அம்மன்கோயில் மேட்டு நுணா மரம் எங்கள் பெரியப்பாவின் வீட்டில் இன்றும் நின்றுகொண்டிருக்கிறது நிலைப்பேழையாக. ஊருக்குச்செல்லும் போதெல்லாம் அதனைத் தொட்டு முகர்ந்து என் இளமையை மீட்டெடுப்பேன்.
இதற்கும் தமிழச்சியின் கவிதைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. ஒரு நல்ல கவிதை முடிந்த பின்னே தொடங்குகிறது என்று தமிழச்சி தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட ஒரு கவிதைதான் மஞ்சணத்தி மரம் குறித்த கவிதை அது ஒரு போதும் முடியாத கவிதையாக எனக்குத் தோன்றுகிறது. வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் என்றொரு புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். மலையாளத்தில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையான அந்த புத்தகம் இயற்கையைப் பற்றி குழந்தைகளுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது. வாசித்தாலும் வாசித்தாலும் தீராத கவிதையாக இந்த கவிதை என்னிடத்தில் அந்த மரம் குறித்த சிந்தனைகளை வளர்த்துக்கொண்டே செல்கிறது.

"என் துரோகத்தின் வலி சுமக்கும்
உன் முனை உடைந்த முட்கள்
என் ரகசியங்களின் போதை தரும்
கள் ததும்பும் உன் பூக்கள்
என் ஆசைகளின் ருசி அறியும்
தேன் உதிர்க்கும் உன் பழங்கள்"

நுணாப் பூ வாசனை மல்லிகைக்கு நிகரானது, அந்தப்பழத்தின் சுவைக்கு நிகராக ஒரு சுவையை எழுத்தில் தர இயலாது. அதை சுவைத்து பார்த்துதான் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மருத நிலத்து நுணாவில் முள்ளிருப்பதில்லை. கரிசல் நில நுணாவில் முள்ளிருப்பதாகக் கவிஞர் குறிப்பிடுகிறார். மரத்தின் ஒவ்வொரு பாகமும் கவிஞரின் உணர்வுகளோடு ஒன்று கலந்திருப்பதை மேற்கண்ட அடிகள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த தொகுப்பின் மிகச்சிறந்த கவிதையாக இந்த கவிதையைத்தான் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி போல் தமிழச்சி பாடிய பெரு நகர்ப்பரணியும் ஒரு முக்கியமான கவிதையாக இலக்கிய வரலாற்றில் நாளை நிச்சயம் பதிவாகும். இக்கவிதையில் நாயகியான வனப்பேச்சிதான் தமிழச்சி கண்டுபிடித்த பெரும் படிமம் என்று முன்னுரையில் தமிழவன் குறிப்பிடுகிறார். நகரமயமாதல் இன்று பெரும் பிரச்சினையாகி வருகிறது. நகரங்களின் அபார வளர்ச்சி கிராமங்களை விழுங்கி ஏப்பம் விடுவதாக இருக்கிறது. அதனால்தான் நகரங்களின் வளர்ச்சி இனி, மேல்நோக்கித்தான் அமையவேண்டுமே தவிற பக்கவாட்டில் அல்ல என்று மக்கள் நலனில் அக்கரையுடைய தலைவர்கள் எச்சரிக்கின்றனர். பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு நமது உழவர்களின் உயிர் ஆதாரமான விளை நிலங்கள் தாரைவார்க்கப்பட்டு வணிகம் கொடி கட்டிப்பறக்கிறது. அவர்களிடம் வணிக அறம் துளியும் இல்லை. சங்க காலத்தில் வணிகர்கள் எப்படி அறத்துடன் வாழ்ந்தனர் என்பதைப் பட்டினப் பாலை கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

"நெடு நுகத்துப் பகல்போல
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகை கொளாது
கொடுப்பதூஉம் குறை கொடாது"

நுகத்தடியின் நடுவில் தைக்கப்பட்டுள்ள பகலாணி போல நடுவு நிலை தவறாத நல்ல உள்ளம் படைத்தவர்களாக வாடிக்கையாளர்களைச் சுரண்டாதவர்களாக ரேசன் கடைக்காரரைப்போல் எடையைக் குறைத்து ஏமாற்றாமல் வாழ்ந்திருக்கின்றனர். இன்றைய வணிகர்களிடம் இதில் ஏதேனும் ஒரு குணத்தை நாம் பார்க்க முடியுமா. குளிரூட்டப்பட்ட வணிக வளாகத்தில் வெற்று பாதங்களோடு நுழையும் வனப்பேச்சி வணிகம் குறித்த சிந்தனையைத் தூண்டுகிறாள். மேலும் அவளுக்கு, அங்கு இருந்தும் இல்லாத மனிதர்கள் அன்னியமாகப் படுகின்றனர்.
அண்மையில் சென்னைக்கு சென்றிருந்த போது என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக நண்பருடன் குளிரூட்டப்பட்ட ஒரு வானுயர்ந்த வணிக வளாகத்தின் உள்ளே சென்றேன் பல தளங்களுக்கும் மின்சார படிக்கட்டுகளில் பயணித்தோம். எங்களால் ஒரு ஐஸ்கிரீம் கூட வாங்க இயலவில்லை . எத்தனை ரூபாயாக இருந்தாலும் வாங்குவதற்குத் தயாராக இருந்தும் நம் ரூபாய் நோட்டுகள் அங்கு செல்லுபடியாகவில்லை. இது என்ன அநியாயம் சிங்கப்பூர் மலேசியாவில் கூட நமது நாட்டு ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து பொருள்கள் வாங்கமுடிகிறது. ஆனால் நமது தலை நகரில் நம் நோட்டுகளைக் கொடுத்து ஒரு ஐஸ்கிரீம் கூட வாங்க இயலவில்லை. அந்த வணிக வளாகத்தில் நுழைந்த உடன் நூறு ரூபாய்க்கு ஒரு அட்டை வாங்கிக்கொள்ள வேண்டும் அந்த அட்டைதான் அங்கு செல்லுபடியாகும். அதற்கு என்ன பொருள், நீங்கள் அந்த நூறு ரூபாயையும் அங்கேயே செலவு செய்து விட்டுதான் வரவேண்டும். நூற்றுக்குக் குறைந்து அட்டைகள் கிடையாது. எங்கள் ஊரில் எங்கள் நிலத்தில் விளைந்த எந்த பொருளையும் கடையில் கொடுத்து எங்களுக்குத் தேவையானதை வாங்கி வருவோம் . அப்படி ஒரு பண்டமாற்று கலாச்சாரம் விளங்கிய நம் மண்ணின் இன்றைய வணிக அறம் இதுதான். வணிகம் குறித்த இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுகின்றன பாலைக்கலி, பெருநகர்ப் பரணி ஆகிய கவிதைகள்.
மழை குறித்த கவிதைகளில் சில கவிதைகள் மட்டுமே குறிப்பிடும் படியாக அமைந்துள்ளன. மழை குழந்தைகளுக்கும் கவிஞர்களுக்கும்தான் ரசிக்கும்படியாக உள்ளது. உழவர்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பினும் மழையில் நனைந்தபடி ஏர் உழுபவனால் மழையை ரசிக்க முடியாது. அது போலத்தான் இருக்கிறது 'இடுகாட்டு மழையை இரசிக்கமுடியமா என்ன' என்கிற கவிதை வரிகள்.
நம்மால் செய்யமுடியாததை நம் குழந்தைகள் செய்யவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நம் எல்லோரிடமும் இருக்கிறது. நமது எதிர்பார்ப்புகளை நம் குழந்தைகள் மீது திணிக்க நினைக்கின்ற நமது மனப்போக்கினை பகடி செய்வதாக அமைந்திருக்கிறது 'பூச்சாண்டி' கவிதை.
பாடுபொருள்களடிப்படையில் சங்க இலக்கிய தொடர்ச்சியினை தமிழச்சியின் பல கவிதைகளில் காண முடிகிறது. ஒரு சிற்றூரில் பிறந்து வளர்ந்த மனுசி நகரத்தில் சந்திக்கும் அத்தனை நெருக்கடிகளையும் இந்த கவிதைகள் படம் பிடிக்கின்றன .ஒரு சில சாதாரண கவிதைகளைத் தவிர்த்திருக்கலாம்.
மூன்று தொகுதிகளை வெளியிட்டிருக்கும் தமிழச்சியின் கவிதை மொழி ஒவ்வொரு தொகுப்பிலும் செழுமையடைந்து வருகிறது. மேலும் செழுமை மிக்கக் கவிதைகளை அவர் தொடர்ந்து எழுதவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

1 comment:

  1. இத்தொகுப்பை

    நானும் படித்துள்ளேன்

    ..திருவண்ணாமலை திறனாய்வுக் கூட்டத்திற்கும்

    சென்றுள்ளேன்...

    கவனிப்பிற்குரிய படைப்பு...

    தமிழ் இயலன்

    ReplyDelete