தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, December 30, 2024

பெங்களூரு நினைவுகள்


1988 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்ற போது பெங்களூரு சுற்றுலா சென்று இருக்கிறேன். மகளை மைசூர் அழைத்துச் சென்ற போது ஒரு முறை, இப்போது மகன் இளவேனிலுடன் அரையாண்டு விடுமுறையை செலவிடலாம் என்று மூன்றாவது முறையாக சென்று வந்தோம். ஒவ்வொரு பயணமும் ஏதாவது ஒரு புதிய அனுபவத்தை நமக்கு கற்றுத் தருகிறது. 


தொடர்வண்டிப் பயணம் சில புதிய அனுபவங்கள்:

விருத்தாசலத்தில் இருந்து பெங்களூருக்கு நேரடி தொடர் வண்டி உள்ளது ஆனால் அதிக நேரம் பயணிக்க வேண்டி இருக்கும் என்பதால் சேலம் வரை பயணிகள் தொடர்வண்டியிலும் அங்கிருந்து விரைவு வண்டியிலுமாக பயணத்தை திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதுவும் கால தாமதத்தால் நெடும் பயணமாகவே அமைந்துவிட்டது. நாங்கள் செல்ல வேண்டிய இடம் கே ஆர் புரம். அதைக் கடந்தே நாங்கள் பயணித்த தொடர் வண்டி சென்றது ஆனாலும் அங்கு நிறுத்தம் இல்லை என்பதால். கே எஸ் ஆர் சென்று அங்கிருந்து மெட்ரோவில் கே ஆர் புரம் வந்து சேர்ந்தோம். சேலத்தில் நாங்கள் காத்திருந்த நேரத்தில் இரண்டு வந்தே பாரத் தொடர்வண்டிகள் பெங்களூர் சென்றன அவை இரண்டுமே கே ஆர் புறத்தில் நின்று செல்வதாக அறிவித்தார்கள். வந்தே பாரத்தான் எங்கும் நிக்காது என்று கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் அதுவே நிற்கிறது ஆனால் நாங்கள் சென்ற மும்பை எக்ஸ்பிரஸ் அங்கு நில்லாமல் சென்றது தான் வேடிக்கை. இந்த அனுபவத்தால்

ஊருக்கு திரும்பும் போது 2:20 க்கு தொடர்வண்டி. நாங்கள் கே.ஆர் புரத்திலிருந்து மெட்ரோவில் கே எஸ் ஆர் வரவேண்டும் என்பதால் பெங்களூர் டிராஃபிக்கை கருத்தில் கொண்டு 12 30 க்கு வீட்டில் இருந்து கிளம்பி விட்டோம். 

மகன் ரேப்பிடோவில் ஆட்டோ பதிவு செய்துவிட்டு எங்களுக்காக கே ஆர் புரம் மெட்ரோவில் காத்திருந்தார். ஆனால் ஆட்டோ அதை என் தாண்டி கே ஆர் புரம் தொடர்வண்டி நிலையத்தில் கொண்டு வந்து விட அப்போதே பி.பி. எகிரத் தொடங்கியது. மீண்டும் எங்களை மெட்ரோவில் விட்டு விடுங்கள் என்று கேட்க அது ஒரு வழி பாதை செல்ல முடியாது என்ற மறுத்துவிட்டார். மகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏனப்பா இவ்வளவு தாமதம் என்று கேட்க தகவலை சொன்னதும் சாலையைக் குறிப்பிட்டு நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். நல்ல வேலையாக தொடர் ஒன்றின் நிலையத்திற்கும் மெட்ரோ நிலையத்திற்கும் இணைப்பு பாதை ஒன்று இருந்தது அது வழியாக நிலையத்தை அடைந்தோம். மெட்ரோவுக்கான பயணச்சீட்டு வாட்ஸப்பில் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தி உள்ளனர். அதில் பதிவு செய்து அந்த க்யூ ஆர் கோடை எனக்கு அனுப்ப அதனைப் பயன்படுத்தி கே எஸ் ஆர் வந்து சரியான நேரத்தில் தொடர் வண்டியில் அமர்ந்தோம். வண்டி காலியாகவே இருந்தது. பிறகு தான் தெரிந்தது இந்த வண்டி கே .ஆர் புறத்தில் நிற்கும் என்பது. இது தெரிந்திருந்தால் இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து பொறுமையாகக் கிளம்பி இருப்போம். தொடர்ச்சியாக ஏமாந்து கொண்டிருக்கிறோமே கொஞ்சம் ஏச்சரிக்கையாக இருப்போம் என்று போகும்போது தொடர்வண்டி தாமதமாக சென்றது போல் இந்த வண்டியின் தாமதமாக சென்றால் நாம் சேலத்திலிருந்து பயணிகள் தொடர்வண்டிக்கு சீட்டு வாங்குவது கடினம் ஆகிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்து யூடிஎஸ் செயலியை பதிவிறக்கம் செய்து பயணிச்சிட்டை பதிவு செய்யலாம் என்று தேடிய போது பயணம் தொடங்குவதற்கு 3 மணி நேரம் முன்பாக மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று தகவல் தந்தது. அந்த நேரத்துக்காக காத்திருந்து பதிவு செய்ய முற்பட்டபோது இரண்டு வகையான பதிவு முறை அதிலுள்ளது. ஒன்று பேப்பர்லெஸ், மற்றொன்று பதிவு செய்து சீட்டை அச்சடித்துக் கொள்ள வேண்டும். சரி நாம் எங்கிருந்து அச்சு எடுப்பது என்று பேப்பர்லெஸ்க்கு முயற்சித்தேன். நீங்கள் தண்டவாளத்திலிருந்து 12 மீட்டர் தொலைவில் தான் பதிவு செய்ய முடியும் என்று தகவல் வந்தது. அச்சடிக்கும் முறை எங்கிருந்து வேண்டாலும் பதிவு செய்யலாம். ஆனால் அச்சடித்த சீட்டை காட்ட வில்லை என்றால் அது பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதற்கு நிகரான தண்டனைக்குரிய குற்றம் என்கிற எச்சரிக்கையும் வழங்கியது. சரி ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்வோம் எப்படியாவது சமாளித்து விடலாம் என்று எண்ணி அந்த முறையில் பதிவு செய்தேன். வழக்கமான முறையில் நாமே அச்சடிக்க வேண்டும் அதை பிடிஎஃப் ஆக சேகரித்து வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணி பதிவு செய்தால் அப்படி ஒரு ஆப்ஷன் வரவே இல்லை. ஒரே ஒரு குறிப்பு எண் மட்டும் வந்தது. இந்த எண்ணை கொண்டு பயணச்சீட்டு வழங்கும் இடத்தில் அச்சடித்துக் கொள்ள வேண்டும் என்று தகவல் குறுஞ்செய்தியாக வந்தது. இதற்கு நேரடியாக சீட்டு வாங்கி இருக்கலாமே என்று நினைத்துக் கொண்டேன். சரி என்ன ஆனாலும் பார்த்துக் கொள்வோம் என்ற குருட்டு தைரியம். ஒரு வழியாக சேலத்தை வந்து அடைந்தோம். எங்கள் வண்டி கிளம்புவதற்கு இன்னும் 20 நிமிடங்கள் இருந்தன. இந்த சீட்டு அச்சடிப்பதை என்ன என்று பார்த்து விடுவோம் என்று ஒரு இயந்திரத்தில் சீட்டு வழங்கிக் கொண்டிருந்தவரை அனுப்பி கேட்டபோது பக்கத்தில் இருந்த இயந்திரத்தை கையைக் காட்டி அதில் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அதில் நமது தொலைபேசி எண்ணையும் நமக்கு குறுஞ்செய்தியாக வந்த குறிப்பு என்னையும் உள்ளீடு செய்தால் நமக்கான சீட்டு அச்சிட்டு கிடைத்தது. உள்ளிருந்த வடிவேல் அண்ணே இது புதுசா இருக்குண்ணே என்றார். பயணிகள் ரயிலில் இரண்டு பேர் அமரும் இருக்கையில் நடுவில் பையை வைத்துக்கொண்டு இரண்டு இரண்டு பேராக அமர்ந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் சண்டை போட்டு இடத்தைப் பிடிக்க வேண்டியதாயிற்று. பெங்களூர் மெட்ரோ விலோ பெரியவர்களுக்கு இளைஞர்கள் எழுந்து இடம் கொடுக்கின்றனர்.

பணியாளர் நேய ஜுனிப்பர் அலுவலகம்: 

மாலை 3:40 க்கு செல்ல வேண்டிய பெங்களூர் தொடர்வண்டி 3 மணி நேரம் தாமதமாக 7: 40க்கு சென்றதால் முதல் நாள் எங்கும் வெளியில் செல்ல இயலவில்லை. மறுநாள் காலை மகன் பணியாற்றும் ஜூனிப்பர் இந்தியா நெட்வொர்க் அலுவலகத்திற்கு சென்றோம். எங்களைப் பார்வையாளராக பதிவு செய்து அடையாள அட்டை பெற்றால் தான் அலுவலகத்தினுள் செல்ல இயலும். அங்கு பார்வையாளராக பதிவு செய்ய வேண்டும் என்றால் முன்பே மின்னஞ்சல் அனுப்பி ஒப்புதல் பெற வேண்டுமாம். ஆனால் மகனின் மேலாளர் வந்ததும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார். ஆனால் அவர் அன்று விடுப்பில் சென்றுவிட்டார். அப்போதே அவருக்கு மின்னஞ்சல் அனுப்பி தொலைபேசியில் அழைத்து அந்த மின்னஞ்சலை ஏற்கும்படி கேட்க அவர் ஒப்புதல் கிடைத்ததும் தொடுதிரை கணினியில் விசிட்டர்ஸ் பாஸ்க்கான விண்ணப்பத்தை நிரப்பினோம். அடுத்த வினாடியில் எங்கள் பெயர் அச்சிடப்பட்ட இரண்டு ஸ்டிக்கர்கள் வழங்கினார்கள். அந்த சட்டையில் ஒட்டிக்கொண்டு அலுவலகத்தை சென்றடைந்தோம். அங்கிருக்கும் கேண்டினில் காலை உணவை முடித்தோம். மகன் பணியாற்றும் இடம், அவர் அணியினர் பணியாற்றும் இடம் ,அலுவலகத்தில் உள்ள விளையாடும் இடம், ஓய்வெடுக்கும் இடம் 

( பணியின் போது களைப்பாக இருந்தால் படுத்து உறங்கும் வகையில் கட்டில் மெத்தைகள் குளிரூட்டப்பட்ட அறையில் அமைத்திருந்தனர்) பணியாற்றும் பெண்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் இடம் அனைத்தையும் சுற்றி காட்டினார். மாலையில் பெங்களூருவில் புகழ் பெற்ற உணவு தெருவுக்கு சென்றோம்.

விழாக்கோலம் கொண்ட உணவுச் சாலை: பசவனகுடி விஸ்வேஸ்வர புரா வில் அமைந்துள்ள இந்த உணவுத் தெருவில் தென்னிந்திய வட இந்திய உணவுகள் உள்ளூர் சிறப்பு உணவுகள் சீன உணவுகள் என அனைத்து வகையான உணவுகளும் விற்கப்படுகிறது. மாலை 6:00 மணிக்கு திருவிழா போல் மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக வந்து அவரவர்க்கு பிடித்த உணவை வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். கோயிலுக்கு சென்று வழிபடுவதைப் போல கன்னட மக்கள் இதனை கருதுவதாக விக்கிபீடியா குறிப்பிடுகிறது. ஸ்மோக்கிங் ஐஸ்கிரீமும் பொட்டேட்டோ டிவிஸ்ட்டும் சாப்பிட்டு அந்த தெருவை வலம் வந்தோம். 


பெங்களூரு புத்தகத் திருவிழா: 

கர்நாடக மாநில பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் பெங்களூரு புத்தகத் திருவிழாவில் என் கெழுதகை நண்பர் கவிஞர் தமிழ் இயலன் அவர்களின் “சங்க காலக்குரல்கள்” நூல் வெளியீட்டு விழாவில் குடும்பத்தோடு கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினேன். கலந்துரையாடுவோம் பேரவை வாயிலாக அறிமுகமாகி இருந்த நண்பர் ஜானகிராமன் அவர்களைச் சந்தித்தோம். அவர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நூல்களைப் பரிசாக வழங்கி மகிழ்ந்தார். 


மறுநாள் மகள் பரிந்துரைத்த இஸ்கான் டெம்பிள் (ISKCON)International Society for Krishna Consciousness சென்றோம்.

கர்நாடகத்தில் ஒரு திருப்பதி:

இந்த வளாகத்தில் ஆறு கோயில்கள் அமைந்துள்ளன. இராமர், ராதாகிருஷ்ணர், வெங்கடாஜலபதி ஆகிய மூன்றும் முக்கியமான தெய்வங்களாக மக்களால் பார்க்கப்படுகிறது. திருப்பதியில் அமைந்துள்ளது போலவே வெங்கடாசலபதி திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகம் மிகவும் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது. சிறிய மலை மீது கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு என்று ஒரு குளம் சுற்றிலும் மரங்கள் என்ற இயற்கை சூழ கண்ணுக்கு குளிர்ச்சியாக அமைந்திருந்தது. அங்கிருந்து அடுத்தது கப்பன் பார்க் சென்றோம். 


154 வயது பூங்கா:

1870 ஆம் ஆண்டு 100 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட இந்த பூங்கா இன்று 200 ஏக்கர் பரப்பளவாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பூங்காவாக மட்டுமல்லாமல் பல தரப்பு மக்களின் ஒன்று கூடும் இடமாகவும் அமைந்துள்ளது. இசைக் கலைஞர்கள் நடன கலைஞர்கள் எழுத்தாளர்கள் விலங்கு பிரியர்கள் பறவை பிரியர்கள் மரத்தை பற்றிய ஆய்வாளர்கள் என அனைவருக்கும் இந்த பூங்கா புகலிடமாக அமைந்துள்ளது. பூங்கா 19 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முக்கியமான கட்டடங்கள் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. 196 வகையான தாவரங்களும் மரங்களும் இந்த பூங்காவில் உள்ளன. இந்த பூங்காவுக்கு என்று ஒரு கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது பூங்காவை பற்றிய முழு விவரங்களும் அந்த செயல் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம். 

https://play.google.com/store/apps/details?id=com.flipp

ar.cubbonpark





Monday, October 2, 2023

மகாத்மா காந்தியின் பொருளாதாரக் கொள்கைகள்

 

மகாத்மா காந்தி ஒரு பன்முக ஆளுமை. அவர் பலதுறைகளிலும் தனது பங்களிப்பை செய்திருப்பது இன்றும் வியப்புக்கு உரியதாக உள்ளது. அவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்த்போதிலும் ஒவ்வொரு துறையிலும் அவர் ஆற்றிய பணியை இன்று யாராலும் செய்ய இயலவில்லை என்பதே உண்மை.

நாட்டு விடுதலைப்போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதோடு   விடுதலை பெற்ற பிறகு நம் நாட்டுக்கான கல்வி முறையை உருவாக்குவதில் அவருக்கு மாபெரும் கனவு இருந்தது. அது போலவே நம் நாட்டின் பொருளாதாரத்தை எந்த வழியில் மேம்படுத்த வேண்டும் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான செயல் திட்டங்களையும் உருவாக்கினார்.

ஆனால் அவர் மறைவுக்குப் பிறகு அவரின் பொருளாதார கொளகைகள் ஆட்சியாளர்களால் மறக்கப்பட்டது.

காந்தியின் பொருளாதாரக் கொள்கைகளைக் கட்டமைப்பதில் தமிழரான ஜே.சி.குமரப்பாவின் பணி மகத்தானது. அவரைப்பற்றிய சுருக்கமாக அறிந்துகொள்வோம்.

ஜெ.சி.குமரப்பாவும் காந்தியும்

1926ஆம் ஆண்டு, மும்பையில் பட்டயக்கணக்காளராக இருந்த குமரப்பா, அமெரிக்கா சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் மேலாண்மையும் பொதுநிதியும், கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பொதுநிதி பட்டமும் பெற்றார். “இந்தியாவின் நிதிநிலையும் அரசின் பொதுநிதிக் கொள்கையும்” என்னும் தலைப்பில் தன் பட்டப்படிப்பிற்கான ஆய்வறிக்கையை எழுதினார்.

அந்த அறிக்கை, ஆங்கில அரசாங்கத்தின் வரிவிதிப்புக் கொள்கை எப்படிப் பிற்போக்காக இருக்கிறது என்பதைப் பேசுவதாகும். இந்திய பிரிட்டிஷ் ஆட்சியின் வரிவிதிப்புக் கொள்கை, விவசாய வரியையே முதன்மையாக நம்பியிருந்தது. ஏழைகளுக்கு மிகவும் தேவையான உப்பு போன்ற பொருட்களின் மீதான அதிக வரிகள், இவற்றை வசூலிக்க நியமிக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளுக்கான அதிக ஊதியம் – இதையெல்லாம் அந்த ஆய்வறிக்கை விரிவாகப் பேசியிருந்தது. படிப்பு முடிந்து, இந்தியா திரும்பியதும், இந்த ஆய்வறிக்கையை புத்தகமாக வெளியிடலாமென்று யோசித்தார். அவர் நண்பரின் ஆலோசனைப் படி 1929ஆம் சபர்மதி ஆசிரமத்தில் காந்தியைச் சந்தித்தார் குமரப்பா. 

குமரப்பாவின் ஆய்வறிக்கையைப் பாராட்டிய காந்தி அது யங் இந்தியாவில் தொடராக வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

காந்தி குமரப்பாவிடம், கிராமப்புறப் பொருளாதார ஆய்வு ஒன்றை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறார். அவரின் வேண்டுகோளை ஏற்று குஜராத் மாநில கிராமங்களில் மக்களின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து அறிக்கையாக அளித்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் காந்தியின் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் தொடங்கியது.

இந்த பொருளியல் ஆய்வு மூலம், குமரப்பாவுக்கு, ஊரகச் சூழலின் உண்மையான நிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள், வேளாண்மை, சிறு தொழில் போன்றவற்றைப் பற்றிய நேரடியான அறிதல் ஏற்பட்டது. இந்தத் தரவுகள், காந்திய கிராம மறுசீரமைப்புத் திட்டங்களை உருவாக்க அடிப்படையாக அமைந்தன. நிர்மாணப் பணிகள் (Constructive program) என்னும் மாபெரும் இலட்சியத்தை காங்கிரஸின் முன்வைத்தார் காந்தி.

 காந்தியப் பொருளியல் கொள்கையின் முக்கியக் கூறுகள்:

1. பலகோடி சிறு உற்பத்தியாளர்கள் இணைந்து உருவாக்குவதே காந்தியத் தொழில் முறை. Production by masses and not mass production.

2. பொருளாதார நிலையில் பிந்தங்கி இருப்பவரின் தேவைகளையும் பூர்த்திசெய்ய வேண்டும்.

3. உற்பத்தியாளரும், நுகர்வோரும் எந்த இடைத்தரகரும் இல்லாமல், சந்திக்கும் முறை. இருவர் நலனும் முக்கியம் என எண்ணும் ஒரு தொழில்முறை.

4. இயற்கை வளங்களை நீடித்து நிலைக்கும் வகையில் பயன்படுத்திக்கொள்ளும், செயல் திறன் மிக்க ஒரு வழிமுறை.


உற்பத்தியில் அதிக மக்களை ஈடுபடுத்த வேண்டும் மாறாக அதிக பொருள்களை உற்பத்தி செய்தால் அது முதலாளிகளை இலாபம் கொழிக்க வைக்கும் என்பதே காந்தியின் முக்கியமான பொருளாதாரக் கொள்கை ஆகும். இந்தியாவில் அதிகமான கிராமங்கள் உள்ளன அங்குதான் அதிக மக்கள் வாழ்கின்றனர் அவர்களின் பொருளாதார நிலை உயர்ந்தால் நாட்டின் பொருளாதாரம் உயரும் இதுவே கீழிருந்து மேல்நொக்கி வளரும் அறிவியல் பூர்வமான வளர்ச்சி என்று காந்தி கருதினார். ஆனால் நம் ஆட்சியாளர்கள் தொழில் வளர்ச்சியிலும் ஆங்கில மாதிரியைக் கடை பிடிக்கத்தொடங்கினர். பெரிய தொழிற்சாலைகளை உருவாக்கினால் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என நம்பினர். இது மேலிருந்து கீழ் நோக்கி தலைகீழாக இயற்கைக்கு முரணாக செயல்பட்டு நகரங்கள் மட்டுமே வளர்ந்தன கிராமப் பொருளாதாரம் வளரவில்லை.

காந்திய பொருளாதாரக் கொள்கையே இன்றைய தேவை

கிராமங்கள் வளர்ந்தால் தான் நாடு முன்னேறும். அதிக மக்களை உற்பத்தியில் ஈடுபடுத்துவதோடு உற்பத்தி செய்த பொருள்களை இடைத்தர்கர் இல்லாமல் நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதும் காந்திய வழி ஆகும். அதற்கு சரியான எடுத்துக் காட்டு ஆவின் பால் நிறுவனம். பல கிராமங்களில் சேகரிக்கப்பட்ட பால்  பல லட்சம் நுகர்வோரை சென்றடைகிறது இதில் அதிக மக்கள் பங்களிப்பு செய்கின்றனர் இலாபமும் அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. விரைவில் கெட்டுவிடக்கூடிய பாலையே நுகர்வோரிடம் விரைவாக கொண்டு சேர்க்க முடிகிறது என்றால் அதற்கான வலைப்பின்னல் அமைப்பு சிறந்த முறையாகும்.

பாலுக்கு அடுத்தபடி நம் கிராமங்களில் உற்பத்தியாவது நெல் ஆகும். அதனை வியாபாரிகளிடம் அவர்கள் கேட்கும் விலைக்கு விற்க வேண்டிய அவல நிலையில்தான் பல விவசாயிகள் உள்ளனர். ஒரு சிலர் மட்டுமே ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களைப் பயன்படுத்துகிறனர். ஆவின் போன்ற ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி நெல்லை அரிசியாக்கி இடைத் தரகர் இல்லாமல் நேரடியாக நுகர்வோரிடம் சேர்ப்பதன் மூலம் உற்பத்தியாளர்கள் அதிக பயனடைய முடியும்.

எனவே அரசு இது குறித்து சிந்தித்து கிராமப்புற பொருளாதார நிலை உயரும்படியான திட்டங்களை வகுப்பதன் மூலம் கந்தியின் கிராம சுய ராஜ்யம் என்ற கனவை நனவாக்க வேண்டும்.

சீனாவைப் போல் அதிக மக்களை உற்பத்தியில் ஈடு படுத்தி நம் நாட்டுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்துவதே காலத்தின் கட்டாயம்.

நன்றி: தினகரன் நாளிதழ்




Saturday, May 20, 2023

தொலைவுச் சவால் 2023


***
சென்னை சைக்கிள் குழுவினரின் தொலைவு சவாலில் பங்கேற்பதற்காக மருத்துவர் பார்த்திபன் அழைப்பு விடுத்தார். அப்போதுதான் இப்படி ஒரு குழு (WCCG) இருப்பது எனக்கு தெரியவந்தது. விதிமுறைகளைக் கேட்ட போது கொஞ்சம் தயக்கமாகத் தான் இருந்தது. ஐந்து பேர் சேர்ந்து ஒரு மாதத்தில் 5000 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்ட வேண்டும். அப்படி எனில் ஒருவர் ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டினால் தான் சரியாக இருக்கும். என்னால் ஒரு மாதத்தில் ஆயிரம் கிலோமீட்டர் ஓட்ட முடியாது என்று கூறி மறுத்து விட்டேன். நீங்கள் 500 கிலோ மீட்டர் ஓட்டினால் போதும் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து 4500 கிலோமீட்டர் ஓட்டிக் கொள்கிறோம், ஒரு குழுவுக்கு ஐந்து பேர் தேவை நான்கு பேர் தயாராக இருக்கிறோம் ஐந்தாவதாக நீங்களும் இணைந்தால் பதிவு செய்யலாம் என்றார். (மருத்துவர் நவீன், மருத்துவர் விஜய், திரு. சுதாகர் ஆகியோர் இக்குழுவில் உள்ளதால் நானும் சம்மதித்தேன். நவீன் சுதாகர் இருவரும் சைக்கிள் பேய்கள் 100 கி.மீ.க்கு குறைவாக ஓட்டுவதே இல்லை சுதாகர் சார் 600 கி.மீ. பி.ஆர்.எம். செல்கிறார் எனவே இந்த சவாலை எளிதாக எதிர்கொள்ளலாம் என்று ஆசையைத் தூண்டினார்) பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் இன்று மாலை ஆறு மணியுடன் கால அவகாசம் முடிவடைகிறது என்றார். அந்த நேரத்தில் எனது கைபேசி முடங்கிப் போனது. மருத்துவர் விஜயோ துபாய் விமான நிலையத்தில் இருக்கிறார். அவருக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு என்னை அழைத்து சலித்து எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டார். அப்போது தான் என் கைபேசிக்கு உயிர் வந்தது. மணியோ ஏழு ஆகியிருந்தது. பதிவு செய்வதற்காக காலக்கெடு முடிந்து விட்டது. எங்களுக்காக மருத்துவர் நவீன் சென்னையில் பேசி கால அவகாசத்தை நீட்டிக்கச் செய்திருந்தார். என்னால் இணைய வழியில் தொகையை செலுத்த இயலவில்லை எனவே பார்த்திபன் எனக்காக தொகையை செலுத்தினார். இப்படியாக அந்த சவாலில் பதிவு செய்வது மிக பெரிய சாவலாக இருந்தது எங்களுக்கு.
ஒரு வழியாக டாக்டர்ஸ் ஸ்ட்ரேஞ்ச் குழு டைட்டன்ஸ் சவாலில் இணைக்கப்பட்டது.
24 நாட்களில் 2868 கி.மீ. தான் ஓட்டினோம் இன்னும் ஆறு நாட்களில் 2132 கி.மீ. ஓட்ட வேண்டும். மாதம் முடிந்தது வாட்சப் குழுவில் நாங்கள் ஓட்டிய தூரத்தை மருத்துவர் விஜய் இப்படி பதிவுசெய்தார்.
Vijay 1066
Parthiban sir. 1002
Sudhakar sir 782
Rathna pugazh sir. 705
Naveen sir 669
Total 4225 / 5000
ஒரு மாதம் முடிந்தது நாங்கள் நினைத்தபடி சவாலை முடிக்க இயலவில்லை. இருந்தாலும் 4000 கி.மீ.க்கு மேல் ஓட்டியதால் டைட்டன்ஸ் க்கு பதில் வைக்கிங் வகையில் நாம் வருவோம் என்று ஆறுதல் கூறினார் பார்த்திபன். ஒரு வழியாக சென்னையிலிருந்து எங்கள் குழுவினருக்கான மெடல் களை பெற்றோம். இன்று குழுவினர் அனைவரும் வடலூரில் சந்தித்து பதக்கங்களை பகிர்ந்து கொண்டோம். மருத்துவர் நவீன் புதுவையில் இருந்தும் திரு. சுதாகர் கடலூரில் இருந்தும் மிதிவண்டியில்தான் வந்தனர் நாங்கள் மூவரும் வடலூர் சென்றோம். மீண்டும் அவர்களை விருத்தாசலம் அழைத்து வந்து காலை சிற்றுண்டியை முடித்து அவரவர் இல்லம் திரும்பினோம்.
PC: Dr. Navin , Dr. Parthiban Allimuthu
See Insights
Boost a Post
All reactions:
Pa U Thendral, Thanga Velmurugan and 106 others

மீண்டும் மிதிவண்டி


***
கீரனூர், கருவேப்பிலங்குறிச்சி, பள்ளிகளில் படித்த போது மிதிவண்டியில்தான் தினசரி செல்வோம். பேருந்து வராத நாட்களில் விருத்தாசலம் பள்ளிக்கும் மிதிவண்டியில் சென்றதுண்டு. தொழூர் பள்ளியில் பணியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் சைக்கிளில்தான் சென்றேன்.
மோட்டார் சைக்கிள் ஓட்டத் தொடங்கிய பிறகு சைக்கிள் துருப்பிடித்துப் போனது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மீண்டும் மிதிவண்டி ஓட்டத் தொடங்கி பல சவால்களில் பங்கேற்று வெற்றி பெற்றது ஊக்கம் அளித்து வருகிறது. "நாங்கள் சென்னை மிதிவண்டி குழுவில்" ( WCCG -  We are Chennai Cycling group) இணைந்து இரண்டு சவால்களில் கலந்து கொண்டோம். இதற்கு தூண்டியவர்கள் மருத்துவர்கள் நவீன், பார்த்திபன், விஜய் மற்றும் திரு. சுதாகர். ஐந்து பேரும் சேர்ந்து ஒரு மாதத்தில் 5000 கி.மீ. ஓட்ட வேண்டும். மற்றொரு சவால், பணி நிமித்தம் வெளியில் செல்லும்போது சைக்கிளில் செல்ல வேண்டும். கடைக்கோ நண்பர்களை சந்திக்கவோ அலுவலகத்திற்கோ செல்லும் போது மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக சைக்கிளைப் பயன்படுத்துவது. இது எனக்கு மிகவும் விருப்பமான சவாலாக இருந்தது. வீட்டிலிருந்து கடைகள் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளன. தினம் ஒரு முறையாவது கடைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு கி.மீ. என்றால் ஓராண்டுக்கு 730 கி.மீ. ஓராண்டுக்கு 20 லி. பெட்ரோலை சேமிக்க வாய்ப்பு. எனவே இந்த சவாலில் கலந்துகொண்டு கடைகளுக்கு சைக்கிளில் செல்லத் தொடங்கியுள்ளேன். இதனைப் பாராட்டி சென்னை குழுவினரின் அன்பளிப்பு அழகான டி-சர்ட் மற்றும் நினைவுப் பரிசு. இவற்றை பொறுப்பாக அனுப்பி வைத்த சகோதரி பிரியங்கா அவர்களுக்கு நன்றி.
மீண்டும் மிதிவண்டி ஓட்டத் தொடங்குவோம் நம்மால் இயன்ற வரை சுற்றுச் சூழலை பாதுகாப்போம்.
நன்றி:WCCG
Pc:Dr.G.Sundaraselvan
See Insights and Ads
All reactions:
Pa U Thendral, Thiyaga Sekar and 79 others