தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Tuesday, September 9, 2025

அந்தமான் ஜராவா பழங்குடிமக்களின் வாழ்க்கை முறைகள்

 

முனைவர் இரத்தின புகழேந்தி

விருத்தாசலம், தமிழ்நாடு

முன்னுரை:

 அந்தமான் தீவில் வசிக்கும் மண்ணின் மைந்தர்களான ஜராவா பழங்குடி மக்கள் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றனர். அம்மக்களைக் காப்பாற்ற 1957 இல் ஜராவா பழங்குடியினர் காப்பகம் உருவாக்கப்பட்டது. ஆனாலும் ஜாரவா பழங்குடியினர் வாழும் பகுதிகளைக் கடக்கும் சுற்றுலா பயணிகளிடமிருந்தும், வேட்டைக்காரர்களிடமிருந்தும், இம்மக்கள் வாழும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைத்த தொழிலாளர்களிடமிருந்தும் பரவிய தொற்று நோய்களால் ஜாராவா மக்கள் பலர் இறந்துவிட்டதாக யுனெஸ்கோ நடத்திய ஆய்வின் மூலம் தெரியவருகிறது.எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் இம் மக்களின் வாழ்க்கை முறைகளைப்பற்றி சுருக்கமாக விளக்குகிறது இக்கட்டுரை. 

 யுனெஸ்கோ நிறுவனம் 2010 ஆம் ஆண்டு வெளியிட்ட “அந்தமான் தீவுகளில் ஜராவா பழங்குடியினரின் பண்பாடு மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை” என்னும் ஆய்வு நூலின் கருத்துகள் இக்கட்டுரைக்கு முதன்மை ஆதாராமக அமைந்துள்ளன.

 ஜராவா பழங்குடிகள் எங்கு வசிக்கின்றனர், அவர்களுக்கு கிடைக்கக் கூடிய உள்ளூர் வளங்கள் எவை, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மேற்கொள்ளும் நாவடிக்கைகள், அவர்களின் உணவு முறைகள், உணவுப்பொருள்களை எவ்வாறு பதப்படுத்தி சேமித்து வைக்கின்றனர், பருவமாற்றங்களை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் ஆகியன குறித்து இக்கட்டுரை விளக்குகிறது. 

இருவகைப் பழ்ங்குடிகள்:

 அந்தமான் தீவில் வசிக்கும் பழங்குடி மக்கள் இரு வகைப்படுவர். 

கடற்கரையில் வசிப்பவர்கள் (அர்-யோட்டோ)

காட்டில் வசிப்பவர்கள் (எரெம்-டகா) 

இவற்றுள் இரண்டாவது பிரிவினரான எரெம்-டகா வகையைச் சேர்ந்தவர்களே ஜராவா பழங்குடிகள்.


வாழ்விடங்கள்:

ஜராவா மக்களின் வாழ்விடங்களான காடுகளில் 11 வகைகள் உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.அவை 1. ராட்சத பசுமைக் காடு, 2. வெப்பமண்டல பசுமைக்காடு, 3. தெற்கு மலை உச்சி வெப்பமண்டல பசுமைக்கடு, 4. கரும்பு புற் புதர்கள், 5. மூங்கில் புதற் காடு, 6. அரை பசுங்காடுகள், 7. இலையுதிர்க் காடு, 8.ஈரமான இலையுதிர்க் காடு, 9. கடற்கரைக் காடு, 10. அலை சதுப்புக் காடு, 11. சப்மண்டேன் மலைப் பள்ளத்தாக்கு சதுப்புக் காடு என்பனவாகும்.

ஜராவா மக்கள் பயன்படுத்தும் வளங்கள்:

ஜராவாக்கள் நிலத்தை ஐந்து வகைகளாகப் பிரிக்கின்றனர் அவை

1.பில்லே (கடற்கரைப் பகுதி), 2.தகித் (சதுப்பு நிலப் பகுதி), 3.சன்ஹன்னாப் (வெற்று வன நிலம்), 4.டினான் (மலைக் காடு) 5. வா (ஸ்ட்ரீம்கள், நுழைவாயில்கள்). இந்த ஐவகை நிலங்களும் பல்வேறு வளங்களை மக்களுக்கு வழங்கும் மண்டலங்கள் ஆகும்.

கடற்கரையும் சதுப்பு நிலப்பகுதியும் நீர் வாழ் வளங்களைக் கொண்ட பகுதிகளாகும். தரை மற்றும் மலைக்காடுகள் விலங்குகள், தாவரங்கள், விதைகள், பழங்கள், கிழங்குகள் ஆகிய ஆதாரங்களை வழங்குகின்றன. 


ஜராவா பழங்குடிகளின் உணவு முறை:

 இம் மக்கள் வாழும் நிலப்பகுதியில் கிடைக்கும் காட்டுப் பன்றி, பல்லி, தேன், தாவரங்களின் வேர்கள், பழங்கள், தளிர்கள் ஆகியவற்றையும் நீர்வாழ் உயிரிகளான மீன், நண்டு, நத்தை, ஆமை, ஆமை முட்டை ஆகியவற்றை உணவுக்குப் பயன்படுத்துகின்றனர். 

 பருவ காலங்களுக்கு ஏற்ற உணவுப் பழக்கம் இவர்களிடம் காணப்படுகிறது. இங்கு மூன்று பருவங்கள் உள்ளன. 1. மார்ச் முதல் மே வரை (குறைவாக மழை பெய்யும் காலம்) மிகுதியாகக் கிடைக்கும் பலாப்பழம், தேன் ஆகியவற்றை சேகரித்து வைக்கின்றனர்.

 2.ஜூன் முதல் நவம்பர் வரை (தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைக் காலம்) இந்த மழைக் காலத்தில் பெரும்பாலும் பன்றி வேட்டை மற்றும் சில தாவர விதைகளை சேகரிக்கிறார்கள். 

3.டிசம்பர் முதல் பிப்ரவரி வரை ( பருவ மழை முடிவுறும் காலம்) இந்த பருவத்தில் ஓமின், கினி, ஈமல், டங்கல் போன்ற சில பழங்களை பச்சையாகவும் பதப்படுத்தியும் உண்ணுகின்றனர். இவர்கள் பலாப்பழங்களை அதிகமாக உண்பர்.


உணவுப் பொருள்களைப் பதப்படுத்தும் முறை:

 ஒரு பருவத்தில் மிகுதியாகக் கிடைக்கும் உணவுப்பொருள்களை பதப்படுத்தி சேமிக்கும் பழக்கம் இம்மக்களிடம் காணப்படுகிறது. ஆலாவ் எனப்படும் குழி அடுப்பில் சமைக்கும் வழக்கம் இவர்களிடம் உண்டு. சில வகை உணவுகளை சமைத்த உடன் உண்கின்றனர். சில வகை உணவுகளை பதப்படுத்தி சேமித்து வைக்கின்றனர். கோடைக்காலத்தில் அதிக அளவில் கிடைக்கும் பலாப்பழங்களை சமைத்து சாப்பிடுகின்றனர் எஞ்சியுள்ள பலாச்சுளைகளை உலர்த்தியும் பலாக்கொட்டைகளை கூடைகளில் வைத்து மண்ணுக்கு அடியில் இரண்டு வாரங்களுக்கு புதைத்து வைத்து அதன் பின்னர் மேல் தோல் நீக்கப்பட்டு சுட்டு சேமித்து வைத்து மழைக்காலத்தில் உண்பதற்கு பயன்படுத்துகின்றனர். பன்றி இறைச்சியை உலோகப் பாத்திரங்களில் சமைத்து உண்பர். ஒரு சில நேரங்களில் ஆலவ் என்னும் குழி அடுப்பில் சுட்டு உண்பர். பன்றி இறைச்சியை புடம்போட்டு (புகையிலிட்டு) பதப்படுத்தி ஒரு மாதம் வரை வைத்து உண்பதும் உண்டு. பன்றி கொழுப்பும் சேமித்து வைக்கப்படுகிறது.

 ஓமின் (சைக்கஸ் ரம்ஃபி) விதைகளின் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு உப்பு நீரில் இரண்டு வாரங்கள் ஊர வைத்து உலர்த்தி பல மாதங்கள் வரை சேமித்து வைக்கின்றனர். தேவைப்படும்போது அவற்றை வேக வைத்து சேமித்து வைத்துள்ள பன்றி கொழுப்பு கலந்து உண்பர்.

நாடோடி மரபு:

 ஜராவா பழங்குடியினர் அடிக்கடி தங்கள் முகாம்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு மாற்றுகிறார்கள். பருவ காலங்களுக்கு ஏற்பவும் உணவுப்பொருள்களின் தேவைக்கேற்பவும் இந்த இடப்பெயர்வுகள் அமையும். மழைக்காலங்களில் கடல் கொந்தளிப்பாக இருக்கும்போது காட்டுப்பகுதிக்கும் காடுகளில் உணவுப்பொருள்கள் அரிதாகும்போது கடற்கரைப் பகுதிக்கும் இடம்பெயர்கின்றனர்.


முடிவுரை:

அழிந்து வரும் ஜரவா பழங்குடி மக்களைப் பாதுக்காக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து அவர்களின் மரபுப் படி வாழவிடுவதன்மூலம் அந்த இனம் காக்கப்பட வேண்டும். அவர்களை எவ்வித இடையூறும் செய்யாமல் காடுகளில் புழங்கிட அவர்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிக்காமல் விட்டுவைக்கவேண்டும். 


ஆதாரம்: அந்தமான் தீவுகளில் ஜராவா பழங்குடி மக்களின்

பண்பாடு மற்றும் உயிரியல் பன்

முகத்தன்மை, யுனெஸ்கோ, 2010


  


  

அந்தமான் பயணம்

 

ஒரு புதிய எண்ணில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தமானில் நடைபெறும் ராஜேந்திர சோழன் கடாரம் கொண்டான் ஆயிரம் ஆண்டு வெற்றி விழாவுக்கு குடும்பத்தோடு கலந்து கொள்ள வருமாறு அழைப்புவிடுத்திருந்தனர் பிரான்ஸில் இயங்கும் உலகத் தமிழ்ச் சிறகம் அமைப்பினர்.அந்த எண்ணைச் சேமிக்கும் போது அது கோபி ரமேஷ் எனும் நெதர்லாந்து தமிழ் உறவின் எண் என்பது தெரிந்தது. 

மேலும் அது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள அண்ணன் ராஜா அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு தனியார் தொலைக்காட்சியில் முதன்மை செய்தி ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் அண்ணன் ராஜா அவர்கள். தமிழகத்தின் அத்தனை அரசியல்வாதிகளுக்கும் தெரிந்த நபர். அவர்களை தொடர்பு கொண்ட போது பயணச்சீட்டு பதிவு செய்துவிட்டு தகவல் தருவதாக கூறினார் அதுபோலவே ஒரு நாள் விமான பயணத்திற்கான முன்பதிவை செய்து அந்தமான் பயணத்தை உறுதி செய்தார். ஆகஸ்டு 15,16 இரு நாட்கள் விழா என்பதால் 14 புறப்பட்டு 17 திரும்புவது பயணத்திட்டம். சென்னை வரை செல்வதற்கு தொடர்வண்டிகளில் முன்பதிவு முடிந்து விட்டது. எனவே ரதிமீனாவில் பதிவு செய்திருந்தேன். அது மாலை 4:40 க்கு புறப்பட்டு 9:10 க்கு பெருங்களத்தூர் சென்றுவிடும். விமானம் அதிகாலை 4:40 என்பதால் 3:40 க்கு விமானநிலையத்தில் இருந்தால் போதும். அதுவரை என்ன செய்வது என்று கடைசிவரை குழப்பமாகவே இருந்தது. பயண நாளன்று முடிவு செய்து கொள்ளலாம் என்று தெளிவடைந்தேன். எங்களோடு முதுகலை ஆசிரியர் சங்கத் தலைவர் அண்ணன் மணிவாசகன் அவர்களுக்கும் பயண முன்பதிவு செய்யப் பட்டிருந்தது. அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் சென்னையில் தலைமை அலுவலகத்தில் இருப்பதாகவும் நானும் அங்கேயே தங்கி கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். எனவே பெருங்களத்தூரில் இறங்கி அங்கிருந்து மின்தொடர்வண்டியில் எழும்பூர் சென்று ஒரு தானியைப் பிடித்து அலுவலகம் சென்றடைந்தேன். இரவு சற்று நேரம் கண்ணயர்ந்து சரியாக 2 மணிக்கு இருவரும் எழுந்து கொண்டோம். காலைக் கடன்களை முடித்து குளித்துவிட்டு ஊபர் ஊர்தியில் புறப்பட்டோம். அண்ணன் எப்போதும் தனித்தமிழில்தான் பேசுவார் கடவுச்சொல்லை சுழி சுழி நான்கு ஐந்து என்று அண்ணன் கூறியதும் அந்த மலையாளி ஓட்டுநர் சாரி சாரி என்று விழித்தார் மீண்டும் அண்ணன் தனித்தமிழில் சொல்ல அவரால் அதற்கான பொருளைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவே நான் சீரோ சீரோ என்றகூற விமான நிலையத்தை அடைந்தோம். விமான நிலையத்தில் இரண்டு குளம்பி கொடுங்கள் என்றார். அந்த காப்பி கடைக்காரர் திருத்திரு என்று விழித்தார். ரெண்டு காஃபி என்று சொன்ன பிறகுதான் அவருக்கு புரிந்தது. இரண்டு காஃபி 300 ரூபாய். விவசாயிலாம் இங்க வந்தா அவ்ளோதான் என்றார் அண்ணன். ஏன் இவ்வளவு விலை என்றால் வாடகை அதிகம் என்றார். ஒருவழியாக சோதனைக்காக வரிசையில் நின்றோம். கைப்பையில் இருந்த மணிபர்ஸ், செல்பேசி, கைக்கடிகாரம், ஷூ எல்லாவற்றையும் ஒரு டிரேவிலும் கைப்பையை ஒரு டிரேவிலும் வைத்து ஸ்கேன் மெஷினுக்குள் அனுப்பினோம் எனது கைப்பை மட்டும் சந்தேகத்திற்குரிய பைகளின் பக்கம் சென்றது. அந்தமானில் விதைப்பதற்காக பள்ளி மாணவர்களிடம் சேகரித்த ஒரு பனை விதையை தூய்மைப்படுத்தி பையில் வைத்திருந்தேன் அதைத்தான் சந்தேகத்திற்குரிய பொருளாக கண்டுபிடித்திருக்குமோ என்று நினைத்து கிட்டே போனால் அங்கிருந்த காவல்துறை அலுவலர் பையில் இருக்கும் டால்கம் பவுடரை வெளியில் எடுங்கள் என்றார். எடுத்துக் கொடுத்ததும் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார். பௌடர் போனால் பரவாயில்லை. பனை விதை தப்பியதே என்ற ஆறுதல் எனக்கு. சோதனைகள் முடிந்து இண்டிகோ நிறுவனத்தின் பேருந்தில் ஏறினோம். விமான நிலையத்தில் பேருந்து நிலையம் போல் அங்கங்கே விமானங்கள் நின்று கொண்டிருந்தன. பத்து நிமிடப் பயணத்தில் எங்கள் விமான படிக்கட்டுக்கு அருகில் பேருந்து நின்றது. விமானப் பணிப்பெண்ணின் வரவேற்பை ஏற்று இருக்கையில் அமர்ந்தோம். எங்களுக்கு முன்பே எழுத்தாளர் தமிழ்மகன் விமானத்துள் அமர்ந்திருந்தார். நான் தான் முன்னாடியே வந்துட்டேன் கொஞ்சம் தூங்கிக்கிறேன் சார் என்று கண்களை கைக்குட்டையால் மூடி தூங்கத் தொடங்கினார். சற்று நேரத்தில் பணிப்பெண் அவரை எழுப்பி சீட் பெல்ட் அணிய வேண்டினார். இது எனக்கு மூன்றாவது விமானப் பயணம் என்றாலும் ஏறும்போதும் இறங்கும் போதும் சற்று பயமாகத்தான் இருக்கிறது. அனைவரும் சற்று கண்ணயர்ந்தோம். சரியாக 6:55 க்கு விமானம் அந்தமானில் தரை இறங்கியது. வெளியில் உலகத் தமிழ்ச் சிறகம் மற்றும் அந்தமான் தமிழர் சங்கப் பொறுப்பாளர்கள் எங்களை வரவேற்க காத்திருந்தனர். அனைவருக்கும் சரிகை துண்டு அணிந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். மகிழுந்தில் தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். வானமும் மெல்லிய தூறலால் எங்களை வரவேற்றது. நிலையத்துக்கு எதிரில் நடந்து வரும் தொலைவில்தான் திவ்யம் விடுதி. தமிழர் சங்கத் தலைவர் திரு.லி.மூர்த்தி அவர்கள்தான் விடுதியின் உரிமையாளர் இரண்டாம் தலைமுறையாக அந்தமானில் வாழ்ந்து வரும் தமிழர் அவர் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டோம். நண்பர் தமிழ்மகனுக்கும் எனக்கும் ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அறைக்கு சென்றதும் கெட்டிலில் வெந்நீர் வைத்து காபி தயாரித்து குடித்தோம். நாளை மாநாடு தொடங்கிவிடும் என்பதால் அருகிலுள்ள இடங்களை இன்றே சுற்றி பார்க்கலாம் என்று திட்டமிட்டோம். அதற்குள் சிற்றுண்டி தயாராக இருக்கிறது சாப்பிட வாங்க என்று விடுதி வரவேற்புக் கூடத்திலிருந்து தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். சாப்பிட மூன்றாம் தளம் சென்றோம். அங்கு சித்த மருத்துவர் வேலாயுதம், பதிப்பாளர் மயிலவேலன் சேலம் நண்பர்கள் உலகத் தமிழ்ச் சிறக பொருளாளர் திரு.கோபிரமேஷ் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அனைவரும் பேசிக்கொண்டே பீங்கான் தட்டில் அவரவர்க்கு தேவையானதை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தோம். நண்பர் கோபி அனைவருக்கும் ஆம்லெட் ஆர்டர் செய்தார். நிறைவாக பழச்சாறு, காபி என அவரவர் விருப்பத்திற்கேற்ப எடுத்துக் கொண்டனர். காலை உணவு சூடாகவும் சுவையாகவும் இருந்தது. 

வரவேற்புக் குழுவில் இடம் பெற்றிருந்த நண்பர் மயிலவேலன் அவர்களிடம் கூறி ஒரு மகிழுந்தில் வேலாயுதம் தமிழ் மகன் நான் மயிலவேலன் ஆகிய நால்வரும் அருகில் உள்ள செல்லுலார் சிறையைப் பார்க்க புறப்பட்டோம். மழை சன்னமாக தூறிக்கொண்டிருந்தது. ஆகஸ்டு 15 விடுதலை நாள் என்பதால் பார்வையாளர்களுக்கு கட்டணமில்லாமல் அனுமதித்தனர். படங்களில் மட்டுமே பார்த்த அந்தமான் சிறையை நேரில் பார்க்கப் போகிறோம் என்கிற எண்ணம் என்றாலும் ஒரு இனம்புரியாத சோகம் உள்ளுக்குள் இருந்தது. எத்தனைப் போராளிகளை கொடுமைப் படுத்தி அடைத்து வைத்த இடம் என்கிற கோபம். ஒவ்வொரு செல்லிலும் உள்ளே சென்று பார்த்தோம். விடுதலை நாளில் சிறைக்குள் கைதிகளாக நின்று படங்கள் எடுத்துக் கொண்டோம். தூக்கு மேடையைப் பார்க்க இன்று அனுமதி இல்லை என்றார்கள். சின்னஞ்சிறு கொட்டடியில் இரு சிறு பள்ளங்கள் அருகருகே இருந்தன. ஒன்று சாப்பிடுவதற்கு மற்றொன்று கழிவறைக்காகவாம் நினைக்கவே மனம் கொதித்தது. கழிவறை பள்ளங்கள் வெளியிலுள்ள கழிவுநீர் கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ளதை வெளியில் வந்தபோது பார்க்க முடிந்தது. கைதி தப்பி விடாமல் இருப்பதற்காக நீளமான தாழ்ப்பாளில் பூட்டும் இடம் கைதி பார்க்கமுடியாதவாறு கதவை விட்டு ஒரு அடி தள்ளி சுவரில் வைக்கப்பட்டிருந்தது. வெளியிலிருந்து மட்டுமே திறக்க முடியும். உள்ளிருந்தபடி திறப்பதற்கு முயற்சி கூட செய்யமுடியாது. நடுவில் வட்டவடிவ அலுவலக கட்டடத்திலிருந்து ஏழு ஆரங்கள் வடிவில் கட்டப்பட்ட சிறை ஐந்து ஆரங்கள் இடிக்கப்பட்டு இரண்டு ஆரங்கள் மட்டுமே இன்று சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு பாதுகாக்கப் படுகிறது. அதனைத் தொடர்ந்து திரங்கா நினைவு கொடி முனைக்குச் சென்றோம். இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்ட முதல் பிரதேசமாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்தான் விளங்கியது. அதனைக் குறிக்கும் வகையில், டிசம்பர் 30, 1943 அன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இங்குதான் இந்திய தேசியக் கொடியை முதன்முதலில் ஏற்றினாராம். அந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில் இந்த இடம் இன்று, நினைவுத் தளமாகவும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகவும் அமைந்துரள்ளது, சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவிக்கும் வகையில் இந்திய தேசியக் கொடி மலரவிடப் பட்டுள்ளது. அங்கு நின்று படங்கள் எடுத்துக் கொண்டோம். மழை தூறிக்கொண்டே இருந்தது. அடுத்து அருகிலுள்ள நேவல் மரைன் சாமுத்ரிகா அருங்காட்சியகம் சென்றோம். அந்தமான் பழங்குடி மக்கள் வாழ்க்கை முறைகள் வரலாற்று ஆவணங்கள் அந்தமான் தொடர்புடைய முக்கிய ஆளுமைகள் போன்றவை காட்சிப் படுத்தப் பட்டிருந்தன. ராசேந்திர சோழன் 1025 ஆம் ஆண்டு கடற்படை போரில் வெற்றி பெற்று கடாரத்தை கைப்பற்றினார் என்ற குறிப்பு இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு பெரிய பெரிஸ்கோப் இருந்தது அதனை சரியாக இயக்கி பார்க்கத் தெரியாமல் படம் மட்டும் எடுத்துக் கொண்டோம்.செல்லுலார் சிறையின் முழு அமைப்பின் மாதிரி கட்டடம் அங்கு வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அடுத்த விமானம் வந்தது. அதில் வரும் விருந்தினர்களை வரவேற்க செல்லவேண்டி இருந்ததால் முழுமையாக பார்க்க இயலவில்லை.  

மீண்டும் அறைக்கு வந்து ஓய்வு எடுக்கத் தொடங்கினோம். மழை விடாமல் தூறிக் கொண்டிருந்ததால் வேறு எங்கும் செல்ல இயலவில்லை. காலை 11 மணிக்கு அந்தமான் வந்த விமானம் மழையின் காரணமாக தரையிறங்க இல்லாமல் அரைமணி நேரம் வானத்தில் வட்டமடித்து மீண்டும் தரைக்கு வர அப்போதும் இறங்க இயலாமல் மீண்டும் சென்னைக்கு சென்று பிறகு மாலை 4:00 மணிக்கு வந்து சேர்ந்ததாக அவ்விமானத்தில் வந்த சித்தமருத்துவர் திரு தணிகாசலம் கூறினார். அனைவரும் பயந்த படியே பயணம் செய்ததோடு மதிய உணவும் சாப்பிட முடியாமல் விமான நிறுவனம் வழங்கிய ஒரு பாக்கெட் பிஸ்கட்டை மட்டும் சாப்பிட்டு பசியோடு வந்து சேர்ந்துள்ளனர்.மாலை 5 மணிக்கே இருட்டத் தொடங்கிவிட்டது.

மறுநாள் காலை வழக்கம் போல் 4: 45 க்கு அலாரம் அடிக்க தொடங்கியது. எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு நடைப் பயிற்சி செல்லலாம் என்று புறப்பட்டேன். அதிகாலை 5 மணிக்கே நம் ஊரில் ஆறு மணிக்கு இருப்பது போல் பளிச்சென்று வெளிச்சம் இருந்தது. உள்ளூர் நண்பர்கள் காலை 5 மணிக்கு பொழுது விடிந்து மாலை 5 மணிக்கு பொழுது போகும் அழகிய தீவு அந்தமான் என்று தெரிவித்தனர். அந்த நேரத்திலும் சன்னமாக தூறிக் கொண்டிருந்தது. சற்று தூரம் நடந்ததும் தூறல் வலுக்கத் தொடங்கியது. ஒரு கடையில் ஒதுங்கி நின்றேன் அப்போது மழையில் நனைந்தபடி இரண்டு சைக்ளிஸ்ட்கள் ரைடு சென்று கொண்டிருந்தனர். ஆஹா என்று இருந்தது எனக்கு. நண்பர் சிவக்குமார் டெல்லி சென்றபோது சைக்கிள் ஓட்டியது போல் நமக்கு அந்தமானில் யாராவது நண்பர்கள் கிடைப்பார்களா என்று ஸ்ட்ராவாவில் முன்பே தேடிப் பார்த்தேன். யாரும் சிக்கவில்லை. இன்று சற்றும் எதிர் பாராமல் நேரிலேயே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடைப்பயிற்சி முடிந்து திரும்பும் போது கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தின் முன் அந்த நண்பர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை அணுகி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களைப் பற்றி கேட்டேன். கல்வித்துறையில் இயக்குனராகப் பணியாற்றும் லக்ஷ்மண் கல்கத்தாவிலிருந்து வந்திருப்பதாக தெரிவித்தார். இருவரும் தொலைபேசி எண்களையும் ஸ்ட்ராவா ஐ.டி.யையும் பரிமாறிக் கொண்டோம். அறைக்கு வந்து குளித்து சிற்றுண்டி உண்டு மாநாட்டுக்கு புறப்பட்டோம். உலக தமிழ்ச் சிறகம் அமைப்பினரும் அந்தமான் தமிழர் சங்கத்தினரும் மாநாட்டு ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக கடாரம் கொண்டான் ஆயிரம் ஆண்டு வெற்றி விழா வளைவினை திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக அந்தமான் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு பிஷ்ணு பதாரே கலந்துகொண்டு மாநாட்டுக்கு வந்திருந்தவர்களோடு ஒவ்வொருவரையும் எந்த மாநிலம் எந்த நாடு என்று விசாரித்தபடி ஹவ் ஈஸ் மோடி கவர்ன்மென்ட் என்று ஒவ்வொருத்தரிடமும் கட்டைவிரலை உயர்த்தியபடி கேட்டுக் கொண்டே வந்தார் எங்களிடமும் அதே கேள்வியை கேட்டார் எங்கள் அருகில் அமர்ந்திருந்த நண்பர் “அத எங்க வாயால எப்படி சொல்றது” என்று மெதுவாக நகைச்சுவை உணர்வோடு கூற அனைவரும் சிரித்தோம் அவரும் சிரித்தார். மழை விட்டு விட்டு பெய்தபடியே இருந்தது. மழைக்காக அந்தமானில் எந்த வேலையும் தடைபடவில்லை. மாநாடு முடிந்து அறைக்குத் திரும்பி சற்று நேரம் ஓய்வெடுத்து மீண்டும் மாலை அம்பேத்கர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற லக்ஷ்மன் ஸ்ருதி இன்னிசைக் குழுவினரின் மெல்லிசை விருந்து நிகழ்ச்சிக்கு புறப்பட்டோம்.

அந்தமானில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இசைப்பாடல் நிகழ்வு நடப்பதாக தெரிவித்தனர். மக்கள் திரளாக வந்து கண்டு ரசித்தனர் சிறுவர்கள் நடனம் ஆடினார்கள் இளைஞர்கள் பாடல்களை விரும்பி கேட்டார்கள். முத்த மழை பாடலையும் பாடினார்கள்.

நாங்கள் இடையிலே விடுதிக்கு வந்துவிட்டோம்.

மறுநாள் காலையும் நடைப்பயிற்சி சென்றேன் இன்றாவது லட்சுமண் அவர்களிடம் சைக்கிள் வாங்கி ஒரு ரைடு போகலாம் என்று எண்ணினேன் அவரைப் பார்க்க முடியவில்லை. இன்று வேறு சாலையில் நடந்து கடற்கரை அருகில் செல்ல நினைத்தேன் அது துறைமுகப் பகுதி என்பதால் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே அருகில் உள்ள காய்கறி சந்தையைப் பார்த்தபடி நடக்கத் தொடங்கினேன். பெரிய சைஸ் கத்தரிக்காய்கள் புதுமையாக இருந்தது. நம் ஊர் புளிச்ச கீரையைப் போலவும் இன்னும் சில புதிய வகை கீரைகளையும் வைத்திருந்தனர். கீரைகளும் காய்கறிகளும் மட்டுமே சிறிய அளவில் அங்கு உற்பத்தி செய்கின்றனர் மற்றபடி அரிசி பருப்பு சமையலுக்கு தேவையான அனைத்து பொருள்களும் சென்னையிலிருந்துதான் வருகின்றனவாம். அதே போல் கல்கத்தாவிலிருந்தும் சில பொருள்கள் வருகின்றன. பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதுவும் பெரும்பாலும் கண்ணாடி பாட்டில்கள். மின்சார உற்பத்தியும் அங்கு இல்லை. ஆங்காங்கே பவர் ஹவுஸ் அமைத்து ஜெனரேட்டர் மூலமே மின்சாரம் வழங்கப்படுகிறது.கடல் அலையிலிருந்தும் காற்றாலை மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்ய ஏன் அரசு முன்வர வில்லை என்று தெரியவில்லை. சூரிய ஒளி மின்சாரம் பலனளிக்கவில்லை யாம்.

இரண்டாம் நாள் மாநாட்டில் அந்தமான் துணை நிலை ஆளுநர் டி.கே.ஜோஷி அவர்கள் கலந்து கொள்ள வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தது. மாநாட்டு அரங்கத்தின் முதன்மை நுழைவாயிலை ஆளுநர் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. எனவே எங்கள் வண்டியை பின்பக்க வாசல் வழியாக செல்லும்படி காவலர்கள் அறிவுறுத்தினர். அங்கு மெட்டல் டிடெக்டர் நுழைவாயில் அமைத்து அதன்வழியாக ஒவ்வொருவரையும் சோதனை செய்து அனுப்பி வைத்தனர். குறித்த நேரத்தில் ஆளுநர் வந்து சேர்ந்தார். கருத்தரங்க மலரை வெளியிட்டு சைதை துரைசாமி அவர்களுக்கு செந்நாப் போதர் விருதும் தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன் அவர்களுக்கு கடாரம் கொண்டான் விருதும் ஆளுநரால் வழங்கப்பட்டது. இருவருமே வர இயலாத சூழல் எனவே கிருஷ்ணபிரியாவும் மயிலவேலனும் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். ஆளுநர் சென்றதும் நான் தமிழ் மகன் அவரின் நண்பர்கள் கோபி பிரசன்னா உதை ஆகிய நால்வரும் அருகில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் தீவுக்கு செல்வதற்காக புறப்பட்டோம். உள்ளூர் நண்பர் ஒருவர் ஆட்டோவில் அழைத்துச் சென்று மெரினா பூங்காவுக்கு அருகில் தீவுக்கு செல்வதற்கான படகுக்கு பதிவு செய்து காத்திருந்தோம். ஒரு படகுக்கு தேவையான நபர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரு வழியாக ஆட்கள் சேர்ந்ததும் எங்கள் படகு புறப்பட்டது. முதல் முறையாக கடலில் படகுப் பயணம். சிறுவயதில் வீராணம் ஏரியில் படகு சவாரி செய்து தாத்தா வீட்டுக்கு செல்வோம். கடல் அவைக்கு ஏற்ப படகு ஊஞ்சல் போல் தாலாட்டிச் சென்றது சுகமான அனுபவம். தீவை அடைந்ததும் நிறைய மான்களும் மயில்களும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அந்த வெட்ட வெளியில் நான் கொண்டு சென்ற பனை விதையை ஊன்றி வைத்தோம். அனைவரும் பேட்டரி வண்டியில் சென்றனர். நாங்கள் நடந்தே சென்றோம். அந்தத் தீவு முன்பு ராஸ் தீவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது மோடி அரசாங்கம் அந்த தீவுக்கு சுபாஷ் சந்திர போஸ் தீவு என்று பெயர் மாற்றம் செய்துள்ளது.

தற்போது முழுவதுமாக சிதைந்த நிலையிலுள்ள பழைய கட்டடங்களை மட்டுமே கொண்டிருக்கும் இத்தீவு 1941 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு முன்புவரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டத்தின் நிர்வாக தலைமையகமாய் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு போர்ட் பிளேருக்குத் தலைமையகம் மாற்றப்பட்டது. இத்தீவு தற்போது இந்தியக் கடற்படையால் நிர்வகிக்கப்படுகிறது. அந்தமானுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பலரும் பார்க்கும் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக இத்தீவு விளங்குகிறது.

அக்கால கட்டத்தில் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்திற்கும் தங்கியிருப்பதற்கும் இத்தீவு பயன்படுத்தப்பட்டது. பிரமாண்டமான கட்டங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. நீச்சல் குளம் நீர் சுத்திகரிப்பு நிலையம் என எல்லாம் சிதைந்து கிடக்கின்றன. இந்த தீவில் இவ்வளவு கட்டுமானங்களை எப்படி செய்திருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்கவே வியப்பாக இருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது 1942-இல் இருந்து 1945 வரை சப்பானியர் வசம் அந்தமான் தீவு வந்தது. இந்தக் காலகட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசு இத்தீவில் இந்தியக் கொடியேற்றினார். அதன் நினைவாக 2018-ஆம் ஆண்டு திசம்பர் 30-ஆம் நாள் இதன் பெயர் ராஸ் தீவு என்பதில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோசு தீவு என்று மாற்றப்பட்டது.


தற்போது இது இந்தியக் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பொதுமக்கள் குடியேற அனுமதி இல்லை.

ராஸ் தீவில் பல திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு நடந்துள்ளது. சில திரைப்படங்கள் மற்றம் விவரங்கள்,


காக்க காக்க திரைப்படத்தில் வரும் உயிரின் உயிரே பாடல் முழுவதும் இந்த தீவில்தான் படமாக்கப்பட்டது.

கடல் திரைப்படத்தின் சில காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள கலங்கரை விளக்கைப் பார்க்க விரும்பியும் நேரமில்லாமல் திரும்பினோம். 

வழியில் அன்னப் பூர்ணா உணவு விடுதியில் மதிய உணவை முடித்துக் கொண்டு அறைக்கு சென்றோம். மாலை 6 மணிக்கு தமிழர் சங்கத்தில் மீண்டும் ஒன்றுகூடி ஒருவரை ஒருவர் முறையாக அறிமுகம் செய்து கொண்டு இனிய விருந்தோடு விடைபெற்றோம்.

மறுநாள் காலை 7:30 க்கு விமானம் நிலையத்திற்கு 6:30 க்கு செல்ல வேண்டும் என்பதால் காலை உணவாக சேண்ட்விச்சும் பழச்சாறும் கொடுத்தனுப் பினர். விமான நிலையத்தில் சாப்பிட்டு புறப்பட தயாரானோம். அண்ணன் மணிவாசகன் 300 ரூபாயை மிச்சப்படுத்திவிட்டேன் என்று கூற எப்படிண்ணா என்று நான் கேட்க அறையிலேயே காஃபி தயாரித்து குடித்து விட்டு வந்தேன் என்று கூற அனைவரும் சிரித்தோம். எங்கள் சுமைகளை எடை போட்டு அனுப்புவதில் இரண்டு விமானப் பணிப்பெண்கள் உதவினர். எங்களோடு படம் எடுத்துக் கொள்ள விரும்பினர். ஒரு பணிப்பெண் செல் போனை கையில் வைத்துக் கொண்டு சிரிங்க என்று தமிழில் கூற எல்லாரும் புன்னகை பூக்க படத்தை எடுத்தார். அண்ணன் ராஜா அவர்கள் தனது பணி அனுபவங்களை ஒரு சுயசரிதை போல “நியாயத்தின் பக்கம்” என்று புனைகதை யாக 500 பக்கங்களில் எழுதியுள்ளார். பிழைத் திருத்தும் பொருட்டு கையிலேயே வைத்திருந்தார். அதை வாங்கி நான் படிக்கத் தொடங்கினேன். சென்னை வரும் வரை கீழே வைக்க மனமில்லாமல் புத்தகத்தில் மூழ்கிவிட்டேன். அருமையான படைப்பாக வந்துள்ளது. விமானம் தரை இறங்கியபோது சரியாக 9:30 மணி. நாங்கள் இறங்கி பேருந்திலிருந்து வெளியேறும் இடத்திற்கு வர 10:30 ஆகிவிட்டது அனைவரும் பெட்டிகளைச் சேகரிக்க நின்றுகொண்டிருந்தனர். 11:40 க்கு விருத்தாசலம் செல்ல தொடர்வண்டி இருப்பதாலும் என் பெட்டி கையில் இருந்ததாலும் அனைவரிடமும் விடை பெற்று வெளியில் வந்தேன். கிளாம் பாக்கம் பேருந்து நின்றது பணியைப் பார்த்தேன் 11:10 இன்னும் அரை மணி நேரத்தில் தாம்பரம் சென்றால் தொடர்வண்டியைப் பிடித்துவிடலாம். தாம்பரம் டிக்கெட் வாங்கி அமர்ந்தேன். சரியாக 11:40க்கு தாம்பரம் வந்தது. நான் இறங்கி நிலையத்திற்கு சென்று டிக்கெட் வாங்குவதற்குள் வண்டி புறப்பட்டு விடும் என்பதால் கிளம்பாக்கம் டிக்கெட் எடுத்து பேருந்தில் செல்ல முடிவெடுத்தேன். பேருந்தை பிடித்து ஒரு வழியாக மாலை 5 மணிக்கு வீடு வந்தேன். இந்த பயணம் பல்வேறு புதிய மனிதர்களின் அறிமுகத்தையும் புதிய அனுபவங்களையும் தந்தது. 

                                  அந்தமான் விமான நிலைய பணிப்பெண்களுடன்
                                                    ராஸ் தீவில் பனை விதைப்பு
            ராஸ் தீவில் மான்கள் கூட்டம் (அந்தமானில் அந்த மான்களுடன்)
                                                    செல்லுலார் சிறை வளாகம்
                                                    அந்தமான் விமான ஓடு தளம்
                                                    ராஸ் தீவின் படகுத்துறை
                                            சுபாஷ் சந்திரபோஸ் தீவில் நங்கூரம்
                        சுபாஷ் சந்திரபோஸ் தீவில் சிதைவடைந்த கட்டுமானம்
                                                நீர் சுத்திகரிப்பு கருவிகள்

                            சிதிலமடைந்த கட்டடங்களில் மரத்தின் வேர்கள்
படகுப்பயணம் இரத்தின புகழேந்தி, தமிழ்மகன், கோபிபிரசன்னா, உதய்
                                        சுபாஷ் சந்திரபோஸ் தீவின் பவர் ஹவுஸ்
                                        கடாரம் கொண்டான் செல்ஃபி முனை
                                        அந்தமான் தமிழர் சங்க வளாகம்
                                                சாமுத்ரிகா அருங்காட்சியகம்
                                                செல்லுலார் சிறையின் மாதிரி
                                                            ஜராவா பழங்குடி

                                                        திரங்கா கொடி முனை

                                    அந்தமான் செல்லுலார் சிறை ( கலா பாணி)



Monday, December 30, 2024

பெங்களூரு நினைவுகள்


1988 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்ற போது பெங்களூரு சுற்றுலா சென்று இருக்கிறேன். மகளை மைசூர் அழைத்துச் சென்ற போது ஒரு முறை, இப்போது மகன் இளவேனிலுடன் அரையாண்டு விடுமுறையை செலவிடலாம் என்று மூன்றாவது முறையாக சென்று வந்தோம். ஒவ்வொரு பயணமும் ஏதாவது ஒரு புதிய அனுபவத்தை நமக்கு கற்றுத் தருகிறது. 


தொடர்வண்டிப் பயணம் சில புதிய அனுபவங்கள்:

விருத்தாசலத்தில் இருந்து பெங்களூருக்கு நேரடி தொடர் வண்டி உள்ளது ஆனால் அதிக நேரம் பயணிக்க வேண்டி இருக்கும் என்பதால் சேலம் வரை பயணிகள் தொடர்வண்டியிலும் அங்கிருந்து விரைவு வண்டியிலுமாக பயணத்தை திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதுவும் கால தாமதத்தால் நெடும் பயணமாகவே அமைந்துவிட்டது. நாங்கள் செல்ல வேண்டிய இடம் கே ஆர் புரம். அதைக் கடந்தே நாங்கள் பயணித்த தொடர் வண்டி சென்றது ஆனாலும் அங்கு நிறுத்தம் இல்லை என்பதால். கே எஸ் ஆர் சென்று அங்கிருந்து மெட்ரோவில் கே ஆர் புரம் வந்து சேர்ந்தோம். சேலத்தில் நாங்கள் காத்திருந்த நேரத்தில் இரண்டு வந்தே பாரத் தொடர்வண்டிகள் பெங்களூர் சென்றன அவை இரண்டுமே கே ஆர் புறத்தில் நின்று செல்வதாக அறிவித்தார்கள். வந்தே பாரத்தான் எங்கும் நிக்காது என்று கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் அதுவே நிற்கிறது ஆனால் நாங்கள் சென்ற மும்பை எக்ஸ்பிரஸ் அங்கு நில்லாமல் சென்றது தான் வேடிக்கை. இந்த அனுபவத்தால்

ஊருக்கு திரும்பும் போது 2:20 க்கு தொடர்வண்டி. நாங்கள் கே.ஆர் புரத்திலிருந்து மெட்ரோவில் கே எஸ் ஆர் வரவேண்டும் என்பதால் பெங்களூர் டிராஃபிக்கை கருத்தில் கொண்டு 12 30 க்கு வீட்டில் இருந்து கிளம்பி விட்டோம். 

மகன் ரேப்பிடோவில் ஆட்டோ பதிவு செய்துவிட்டு எங்களுக்காக கே ஆர் புரம் மெட்ரோவில் காத்திருந்தார். ஆனால் ஆட்டோ அதை என் தாண்டி கே ஆர் புரம் தொடர்வண்டி நிலையத்தில் கொண்டு வந்து விட அப்போதே பி.பி. எகிரத் தொடங்கியது. மீண்டும் எங்களை மெட்ரோவில் விட்டு விடுங்கள் என்று கேட்க அது ஒரு வழி பாதை செல்ல முடியாது என்ற மறுத்துவிட்டார். மகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏனப்பா இவ்வளவு தாமதம் என்று கேட்க தகவலை சொன்னதும் சாலையைக் குறிப்பிட்டு நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். நல்ல வேலையாக தொடர் ஒன்றின் நிலையத்திற்கும் மெட்ரோ நிலையத்திற்கும் இணைப்பு பாதை ஒன்று இருந்தது அது வழியாக நிலையத்தை அடைந்தோம். மெட்ரோவுக்கான பயணச்சீட்டு வாட்ஸப்பில் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தி உள்ளனர். அதில் பதிவு செய்து அந்த க்யூ ஆர் கோடை எனக்கு அனுப்ப அதனைப் பயன்படுத்தி கே எஸ் ஆர் வந்து சரியான நேரத்தில் தொடர் வண்டியில் அமர்ந்தோம். வண்டி காலியாகவே இருந்தது. பிறகு தான் தெரிந்தது இந்த வண்டி கே .ஆர் புறத்தில் நிற்கும் என்பது. இது தெரிந்திருந்தால் இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து பொறுமையாகக் கிளம்பி இருப்போம். தொடர்ச்சியாக ஏமாந்து கொண்டிருக்கிறோமே கொஞ்சம் ஏச்சரிக்கையாக இருப்போம் என்று போகும்போது தொடர்வண்டி தாமதமாக சென்றது போல் இந்த வண்டியின் தாமதமாக சென்றால் நாம் சேலத்திலிருந்து பயணிகள் தொடர்வண்டிக்கு சீட்டு வாங்குவது கடினம் ஆகிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்து யூடிஎஸ் செயலியை பதிவிறக்கம் செய்து பயணிச்சிட்டை பதிவு செய்யலாம் என்று தேடிய போது பயணம் தொடங்குவதற்கு 3 மணி நேரம் முன்பாக மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று தகவல் தந்தது. அந்த நேரத்துக்காக காத்திருந்து பதிவு செய்ய முற்பட்டபோது இரண்டு வகையான பதிவு முறை அதிலுள்ளது. ஒன்று பேப்பர்லெஸ், மற்றொன்று பதிவு செய்து சீட்டை அச்சடித்துக் கொள்ள வேண்டும். சரி நாம் எங்கிருந்து அச்சு எடுப்பது என்று பேப்பர்லெஸ்க்கு முயற்சித்தேன். நீங்கள் தண்டவாளத்திலிருந்து 12 மீட்டர் தொலைவில் தான் பதிவு செய்ய முடியும் என்று தகவல் வந்தது. அச்சடிக்கும் முறை எங்கிருந்து வேண்டாலும் பதிவு செய்யலாம். ஆனால் அச்சடித்த சீட்டை காட்ட வில்லை என்றால் அது பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதற்கு நிகரான தண்டனைக்குரிய குற்றம் என்கிற எச்சரிக்கையும் வழங்கியது. சரி ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்வோம் எப்படியாவது சமாளித்து விடலாம் என்று எண்ணி அந்த முறையில் பதிவு செய்தேன். வழக்கமான முறையில் நாமே அச்சடிக்க வேண்டும் அதை பிடிஎஃப் ஆக சேகரித்து வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணி பதிவு செய்தால் அப்படி ஒரு ஆப்ஷன் வரவே இல்லை. ஒரே ஒரு குறிப்பு எண் மட்டும் வந்தது. இந்த எண்ணை கொண்டு பயணச்சீட்டு வழங்கும் இடத்தில் அச்சடித்துக் கொள்ள வேண்டும் என்று தகவல் குறுஞ்செய்தியாக வந்தது. இதற்கு நேரடியாக சீட்டு வாங்கி இருக்கலாமே என்று நினைத்துக் கொண்டேன். சரி என்ன ஆனாலும் பார்த்துக் கொள்வோம் என்ற குருட்டு தைரியம். ஒரு வழியாக சேலத்தை வந்து அடைந்தோம். எங்கள் வண்டி கிளம்புவதற்கு இன்னும் 20 நிமிடங்கள் இருந்தன. இந்த சீட்டு அச்சடிப்பதை என்ன என்று பார்த்து விடுவோம் என்று ஒரு இயந்திரத்தில் சீட்டு வழங்கிக் கொண்டிருந்தவரை அனுப்பி கேட்டபோது பக்கத்தில் இருந்த இயந்திரத்தை கையைக் காட்டி அதில் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அதில் நமது தொலைபேசி எண்ணையும் நமக்கு குறுஞ்செய்தியாக வந்த குறிப்பு என்னையும் உள்ளீடு செய்தால் நமக்கான சீட்டு அச்சிட்டு கிடைத்தது. உள்ளிருந்த வடிவேல் அண்ணே இது புதுசா இருக்குண்ணே என்றார். பயணிகள் ரயிலில் இரண்டு பேர் அமரும் இருக்கையில் நடுவில் பையை வைத்துக்கொண்டு இரண்டு இரண்டு பேராக அமர்ந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் சண்டை போட்டு இடத்தைப் பிடிக்க வேண்டியதாயிற்று. பெங்களூர் மெட்ரோ விலோ பெரியவர்களுக்கு இளைஞர்கள் எழுந்து இடம் கொடுக்கின்றனர்.

பணியாளர் நேய ஜுனிப்பர் அலுவலகம்: 

மாலை 3:40 க்கு செல்ல வேண்டிய பெங்களூர் தொடர்வண்டி 3 மணி நேரம் தாமதமாக 7: 40க்கு சென்றதால் முதல் நாள் எங்கும் வெளியில் செல்ல இயலவில்லை. மறுநாள் காலை மகன் பணியாற்றும் ஜூனிப்பர் இந்தியா நெட்வொர்க் அலுவலகத்திற்கு சென்றோம். எங்களைப் பார்வையாளராக பதிவு செய்து அடையாள அட்டை பெற்றால் தான் அலுவலகத்தினுள் செல்ல இயலும். அங்கு பார்வையாளராக பதிவு செய்ய வேண்டும் என்றால் முன்பே மின்னஞ்சல் அனுப்பி ஒப்புதல் பெற வேண்டுமாம். ஆனால் மகனின் மேலாளர் வந்ததும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார். ஆனால் அவர் அன்று விடுப்பில் சென்றுவிட்டார். அப்போதே அவருக்கு மின்னஞ்சல் அனுப்பி தொலைபேசியில் அழைத்து அந்த மின்னஞ்சலை ஏற்கும்படி கேட்க அவர் ஒப்புதல் கிடைத்ததும் தொடுதிரை கணினியில் விசிட்டர்ஸ் பாஸ்க்கான விண்ணப்பத்தை நிரப்பினோம். அடுத்த வினாடியில் எங்கள் பெயர் அச்சிடப்பட்ட இரண்டு ஸ்டிக்கர்கள் வழங்கினார்கள். அந்த சட்டையில் ஒட்டிக்கொண்டு அலுவலகத்தை சென்றடைந்தோம். அங்கிருக்கும் கேண்டினில் காலை உணவை முடித்தோம். மகன் பணியாற்றும் இடம், அவர் அணியினர் பணியாற்றும் இடம் ,அலுவலகத்தில் உள்ள விளையாடும் இடம், ஓய்வெடுக்கும் இடம் 

( பணியின் போது களைப்பாக இருந்தால் படுத்து உறங்கும் வகையில் கட்டில் மெத்தைகள் குளிரூட்டப்பட்ட அறையில் அமைத்திருந்தனர்) பணியாற்றும் பெண்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் இடம் அனைத்தையும் சுற்றி காட்டினார். மாலையில் பெங்களூருவில் புகழ் பெற்ற உணவு தெருவுக்கு சென்றோம்.

விழாக்கோலம் கொண்ட உணவுச் சாலை: பசவனகுடி விஸ்வேஸ்வர புரா வில் அமைந்துள்ள இந்த உணவுத் தெருவில் தென்னிந்திய வட இந்திய உணவுகள் உள்ளூர் சிறப்பு உணவுகள் சீன உணவுகள் என அனைத்து வகையான உணவுகளும் விற்கப்படுகிறது. மாலை 6:00 மணிக்கு திருவிழா போல் மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக வந்து அவரவர்க்கு பிடித்த உணவை வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். கோயிலுக்கு சென்று வழிபடுவதைப் போல கன்னட மக்கள் இதனை கருதுவதாக விக்கிபீடியா குறிப்பிடுகிறது. ஸ்மோக்கிங் ஐஸ்கிரீமும் பொட்டேட்டோ டிவிஸ்ட்டும் சாப்பிட்டு அந்த தெருவை வலம் வந்தோம். 


பெங்களூரு புத்தகத் திருவிழா: 

கர்நாடக மாநில பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் பெங்களூரு புத்தகத் திருவிழாவில் என் கெழுதகை நண்பர் கவிஞர் தமிழ் இயலன் அவர்களின் “சங்க காலக்குரல்கள்” நூல் வெளியீட்டு விழாவில் குடும்பத்தோடு கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினேன். கலந்துரையாடுவோம் பேரவை வாயிலாக அறிமுகமாகி இருந்த நண்பர் ஜானகிராமன் அவர்களைச் சந்தித்தோம். அவர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நூல்களைப் பரிசாக வழங்கி மகிழ்ந்தார். 


மறுநாள் மகள் பரிந்துரைத்த இஸ்கான் டெம்பிள் (ISKCON)International Society for Krishna Consciousness சென்றோம்.

கர்நாடகத்தில் ஒரு திருப்பதி:

இந்த வளாகத்தில் ஆறு கோயில்கள் அமைந்துள்ளன. இராமர், ராதாகிருஷ்ணர், வெங்கடாஜலபதி ஆகிய மூன்றும் முக்கியமான தெய்வங்களாக மக்களால் பார்க்கப்படுகிறது. திருப்பதியில் அமைந்துள்ளது போலவே வெங்கடாசலபதி திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகம் மிகவும் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது. சிறிய மலை மீது கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு என்று ஒரு குளம் சுற்றிலும் மரங்கள் என்ற இயற்கை சூழ கண்ணுக்கு குளிர்ச்சியாக அமைந்திருந்தது. அங்கிருந்து அடுத்தது கப்பன் பார்க் சென்றோம். 


154 வயது பூங்கா:

1870 ஆம் ஆண்டு 100 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட இந்த பூங்கா இன்று 200 ஏக்கர் பரப்பளவாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பூங்காவாக மட்டுமல்லாமல் பல தரப்பு மக்களின் ஒன்று கூடும் இடமாகவும் அமைந்துள்ளது. இசைக் கலைஞர்கள் நடன கலைஞர்கள் எழுத்தாளர்கள் விலங்கு பிரியர்கள் பறவை பிரியர்கள் மரத்தை பற்றிய ஆய்வாளர்கள் என அனைவருக்கும் இந்த பூங்கா புகலிடமாக அமைந்துள்ளது. பூங்கா 19 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முக்கியமான கட்டடங்கள் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. 196 வகையான தாவரங்களும் மரங்களும் இந்த பூங்காவில் உள்ளன. இந்த பூங்காவுக்கு என்று ஒரு கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது பூங்காவை பற்றிய முழு விவரங்களும் அந்த செயல் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம். 

https://play.google.com/store/apps/details?id=com.flipp

ar.cubbonpark





Monday, October 2, 2023

மகாத்மா காந்தியின் பொருளாதாரக் கொள்கைகள்

 

மகாத்மா காந்தி ஒரு பன்முக ஆளுமை. அவர் பலதுறைகளிலும் தனது பங்களிப்பை செய்திருப்பது இன்றும் வியப்புக்கு உரியதாக உள்ளது. அவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்த்போதிலும் ஒவ்வொரு துறையிலும் அவர் ஆற்றிய பணியை இன்று யாராலும் செய்ய இயலவில்லை என்பதே உண்மை.

நாட்டு விடுதலைப்போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதோடு   விடுதலை பெற்ற பிறகு நம் நாட்டுக்கான கல்வி முறையை உருவாக்குவதில் அவருக்கு மாபெரும் கனவு இருந்தது. அது போலவே நம் நாட்டின் பொருளாதாரத்தை எந்த வழியில் மேம்படுத்த வேண்டும் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான செயல் திட்டங்களையும் உருவாக்கினார்.

ஆனால் அவர் மறைவுக்குப் பிறகு அவரின் பொருளாதார கொளகைகள் ஆட்சியாளர்களால் மறக்கப்பட்டது.

காந்தியின் பொருளாதாரக் கொள்கைகளைக் கட்டமைப்பதில் தமிழரான ஜே.சி.குமரப்பாவின் பணி மகத்தானது. அவரைப்பற்றிய சுருக்கமாக அறிந்துகொள்வோம்.

ஜெ.சி.குமரப்பாவும் காந்தியும்

1926ஆம் ஆண்டு, மும்பையில் பட்டயக்கணக்காளராக இருந்த குமரப்பா, அமெரிக்கா சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் மேலாண்மையும் பொதுநிதியும், கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பொதுநிதி பட்டமும் பெற்றார். “இந்தியாவின் நிதிநிலையும் அரசின் பொதுநிதிக் கொள்கையும்” என்னும் தலைப்பில் தன் பட்டப்படிப்பிற்கான ஆய்வறிக்கையை எழுதினார்.

அந்த அறிக்கை, ஆங்கில அரசாங்கத்தின் வரிவிதிப்புக் கொள்கை எப்படிப் பிற்போக்காக இருக்கிறது என்பதைப் பேசுவதாகும். இந்திய பிரிட்டிஷ் ஆட்சியின் வரிவிதிப்புக் கொள்கை, விவசாய வரியையே முதன்மையாக நம்பியிருந்தது. ஏழைகளுக்கு மிகவும் தேவையான உப்பு போன்ற பொருட்களின் மீதான அதிக வரிகள், இவற்றை வசூலிக்க நியமிக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளுக்கான அதிக ஊதியம் – இதையெல்லாம் அந்த ஆய்வறிக்கை விரிவாகப் பேசியிருந்தது. படிப்பு முடிந்து, இந்தியா திரும்பியதும், இந்த ஆய்வறிக்கையை புத்தகமாக வெளியிடலாமென்று யோசித்தார். அவர் நண்பரின் ஆலோசனைப் படி 1929ஆம் சபர்மதி ஆசிரமத்தில் காந்தியைச் சந்தித்தார் குமரப்பா. 

குமரப்பாவின் ஆய்வறிக்கையைப் பாராட்டிய காந்தி அது யங் இந்தியாவில் தொடராக வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

காந்தி குமரப்பாவிடம், கிராமப்புறப் பொருளாதார ஆய்வு ஒன்றை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறார். அவரின் வேண்டுகோளை ஏற்று குஜராத் மாநில கிராமங்களில் மக்களின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து அறிக்கையாக அளித்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் காந்தியின் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் தொடங்கியது.

இந்த பொருளியல் ஆய்வு மூலம், குமரப்பாவுக்கு, ஊரகச் சூழலின் உண்மையான நிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள், வேளாண்மை, சிறு தொழில் போன்றவற்றைப் பற்றிய நேரடியான அறிதல் ஏற்பட்டது. இந்தத் தரவுகள், காந்திய கிராம மறுசீரமைப்புத் திட்டங்களை உருவாக்க அடிப்படையாக அமைந்தன. நிர்மாணப் பணிகள் (Constructive program) என்னும் மாபெரும் இலட்சியத்தை காங்கிரஸின் முன்வைத்தார் காந்தி.

 காந்தியப் பொருளியல் கொள்கையின் முக்கியக் கூறுகள்:

1. பலகோடி சிறு உற்பத்தியாளர்கள் இணைந்து உருவாக்குவதே காந்தியத் தொழில் முறை. Production by masses and not mass production.

2. பொருளாதார நிலையில் பிந்தங்கி இருப்பவரின் தேவைகளையும் பூர்த்திசெய்ய வேண்டும்.

3. உற்பத்தியாளரும், நுகர்வோரும் எந்த இடைத்தரகரும் இல்லாமல், சந்திக்கும் முறை. இருவர் நலனும் முக்கியம் என எண்ணும் ஒரு தொழில்முறை.

4. இயற்கை வளங்களை நீடித்து நிலைக்கும் வகையில் பயன்படுத்திக்கொள்ளும், செயல் திறன் மிக்க ஒரு வழிமுறை.


உற்பத்தியில் அதிக மக்களை ஈடுபடுத்த வேண்டும் மாறாக அதிக பொருள்களை உற்பத்தி செய்தால் அது முதலாளிகளை இலாபம் கொழிக்க வைக்கும் என்பதே காந்தியின் முக்கியமான பொருளாதாரக் கொள்கை ஆகும். இந்தியாவில் அதிகமான கிராமங்கள் உள்ளன அங்குதான் அதிக மக்கள் வாழ்கின்றனர் அவர்களின் பொருளாதார நிலை உயர்ந்தால் நாட்டின் பொருளாதாரம் உயரும் இதுவே கீழிருந்து மேல்நொக்கி வளரும் அறிவியல் பூர்வமான வளர்ச்சி என்று காந்தி கருதினார். ஆனால் நம் ஆட்சியாளர்கள் தொழில் வளர்ச்சியிலும் ஆங்கில மாதிரியைக் கடை பிடிக்கத்தொடங்கினர். பெரிய தொழிற்சாலைகளை உருவாக்கினால் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என நம்பினர். இது மேலிருந்து கீழ் நோக்கி தலைகீழாக இயற்கைக்கு முரணாக செயல்பட்டு நகரங்கள் மட்டுமே வளர்ந்தன கிராமப் பொருளாதாரம் வளரவில்லை.

காந்திய பொருளாதாரக் கொள்கையே இன்றைய தேவை

கிராமங்கள் வளர்ந்தால் தான் நாடு முன்னேறும். அதிக மக்களை உற்பத்தியில் ஈடுபடுத்துவதோடு உற்பத்தி செய்த பொருள்களை இடைத்தர்கர் இல்லாமல் நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதும் காந்திய வழி ஆகும். அதற்கு சரியான எடுத்துக் காட்டு ஆவின் பால் நிறுவனம். பல கிராமங்களில் சேகரிக்கப்பட்ட பால்  பல லட்சம் நுகர்வோரை சென்றடைகிறது இதில் அதிக மக்கள் பங்களிப்பு செய்கின்றனர் இலாபமும் அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. விரைவில் கெட்டுவிடக்கூடிய பாலையே நுகர்வோரிடம் விரைவாக கொண்டு சேர்க்க முடிகிறது என்றால் அதற்கான வலைப்பின்னல் அமைப்பு சிறந்த முறையாகும்.

பாலுக்கு அடுத்தபடி நம் கிராமங்களில் உற்பத்தியாவது நெல் ஆகும். அதனை வியாபாரிகளிடம் அவர்கள் கேட்கும் விலைக்கு விற்க வேண்டிய அவல நிலையில்தான் பல விவசாயிகள் உள்ளனர். ஒரு சிலர் மட்டுமே ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களைப் பயன்படுத்துகிறனர். ஆவின் போன்ற ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி நெல்லை அரிசியாக்கி இடைத் தரகர் இல்லாமல் நேரடியாக நுகர்வோரிடம் சேர்ப்பதன் மூலம் உற்பத்தியாளர்கள் அதிக பயனடைய முடியும்.

எனவே அரசு இது குறித்து சிந்தித்து கிராமப்புற பொருளாதார நிலை உயரும்படியான திட்டங்களை வகுப்பதன் மூலம் கந்தியின் கிராம சுய ராஜ்யம் என்ற கனவை நனவாக்க வேண்டும்.

சீனாவைப் போல் அதிக மக்களை உற்பத்தியில் ஈடு படுத்தி நம் நாட்டுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்துவதே காலத்தின் கட்டாயம்.

நன்றி: தினகரன் நாளிதழ்




Saturday, May 20, 2023

தொலைவுச் சவால் 2023


***
சென்னை சைக்கிள் குழுவினரின் தொலைவு சவாலில் பங்கேற்பதற்காக மருத்துவர் பார்த்திபன் அழைப்பு விடுத்தார். அப்போதுதான் இப்படி ஒரு குழு (WCCG) இருப்பது எனக்கு தெரியவந்தது. விதிமுறைகளைக் கேட்ட போது கொஞ்சம் தயக்கமாகத் தான் இருந்தது. ஐந்து பேர் சேர்ந்து ஒரு மாதத்தில் 5000 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்ட வேண்டும். அப்படி எனில் ஒருவர் ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டினால் தான் சரியாக இருக்கும். என்னால் ஒரு மாதத்தில் ஆயிரம் கிலோமீட்டர் ஓட்ட முடியாது என்று கூறி மறுத்து விட்டேன். நீங்கள் 500 கிலோ மீட்டர் ஓட்டினால் போதும் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து 4500 கிலோமீட்டர் ஓட்டிக் கொள்கிறோம், ஒரு குழுவுக்கு ஐந்து பேர் தேவை நான்கு பேர் தயாராக இருக்கிறோம் ஐந்தாவதாக நீங்களும் இணைந்தால் பதிவு செய்யலாம் என்றார். (மருத்துவர் நவீன், மருத்துவர் விஜய், திரு. சுதாகர் ஆகியோர் இக்குழுவில் உள்ளதால் நானும் சம்மதித்தேன். நவீன் சுதாகர் இருவரும் சைக்கிள் பேய்கள் 100 கி.மீ.க்கு குறைவாக ஓட்டுவதே இல்லை சுதாகர் சார் 600 கி.மீ. பி.ஆர்.எம். செல்கிறார் எனவே இந்த சவாலை எளிதாக எதிர்கொள்ளலாம் என்று ஆசையைத் தூண்டினார்) பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் இன்று மாலை ஆறு மணியுடன் கால அவகாசம் முடிவடைகிறது என்றார். அந்த நேரத்தில் எனது கைபேசி முடங்கிப் போனது. மருத்துவர் விஜயோ துபாய் விமான நிலையத்தில் இருக்கிறார். அவருக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு என்னை அழைத்து சலித்து எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டார். அப்போது தான் என் கைபேசிக்கு உயிர் வந்தது. மணியோ ஏழு ஆகியிருந்தது. பதிவு செய்வதற்காக காலக்கெடு முடிந்து விட்டது. எங்களுக்காக மருத்துவர் நவீன் சென்னையில் பேசி கால அவகாசத்தை நீட்டிக்கச் செய்திருந்தார். என்னால் இணைய வழியில் தொகையை செலுத்த இயலவில்லை எனவே பார்த்திபன் எனக்காக தொகையை செலுத்தினார். இப்படியாக அந்த சவாலில் பதிவு செய்வது மிக பெரிய சாவலாக இருந்தது எங்களுக்கு.
ஒரு வழியாக டாக்டர்ஸ் ஸ்ட்ரேஞ்ச் குழு டைட்டன்ஸ் சவாலில் இணைக்கப்பட்டது.
24 நாட்களில் 2868 கி.மீ. தான் ஓட்டினோம் இன்னும் ஆறு நாட்களில் 2132 கி.மீ. ஓட்ட வேண்டும். மாதம் முடிந்தது வாட்சப் குழுவில் நாங்கள் ஓட்டிய தூரத்தை மருத்துவர் விஜய் இப்படி பதிவுசெய்தார்.
Vijay 1066
Parthiban sir. 1002
Sudhakar sir 782
Rathna pugazh sir. 705
Naveen sir 669
Total 4225 / 5000
ஒரு மாதம் முடிந்தது நாங்கள் நினைத்தபடி சவாலை முடிக்க இயலவில்லை. இருந்தாலும் 4000 கி.மீ.க்கு மேல் ஓட்டியதால் டைட்டன்ஸ் க்கு பதில் வைக்கிங் வகையில் நாம் வருவோம் என்று ஆறுதல் கூறினார் பார்த்திபன். ஒரு வழியாக சென்னையிலிருந்து எங்கள் குழுவினருக்கான மெடல் களை பெற்றோம். இன்று குழுவினர் அனைவரும் வடலூரில் சந்தித்து பதக்கங்களை பகிர்ந்து கொண்டோம். மருத்துவர் நவீன் புதுவையில் இருந்தும் திரு. சுதாகர் கடலூரில் இருந்தும் மிதிவண்டியில்தான் வந்தனர் நாங்கள் மூவரும் வடலூர் சென்றோம். மீண்டும் அவர்களை விருத்தாசலம் அழைத்து வந்து காலை சிற்றுண்டியை முடித்து அவரவர் இல்லம் திரும்பினோம்.
PC: Dr. Navin , Dr. Parthiban Allimuthu
See Insights
Boost a Post
All reactions:
Pa U Thendral, Thanga Velmurugan and 106 others