எழுத்தாளர், கவிஞர் கட்டுரையாளர் என்று மட்டுமே என்னால் அறியப்பட்ட அன்பிற்கினிய நண்பர் இரத்தின.புகழேந்தி Rathina Pugazhendi மிகச்சிறந்த மிதியுந்து வீரர் என்பதை அவரது பசுமைப் பயணம் என்கிற நூல் வழியாகத்தான் அறிந்தேன்.
பிலோ இருதயநாத் என்றொரு மானுடவியலாளர் இருந்தார். தென்னகப் பழங்குடியினரை நேரில் சந்தித்து அவர்களை ஆவணப்படுத்தியப் பெருமை அவருக்கு உண்டு.. அதுவும் மலைகள் காடுகள் என பல கடினமானப் பாதைகள் அனைத்தையும் தனது மிதிவண்டியில் ஒற்றை ஆளாகப் பயணித்து தகவல்களை சேகரித்தவர். அரசோ அமைப்போ எதனுடைய உதவியுமின்றி தன்னுடைய சொந்தச் செலவில் உழைப்பில் தனிப்பட்ட ஆர்வத்தில் அந்தப் பணியைச் செய்தவர். அவரைப் பற்றி என்னுடைய பாதை தந்த பயணிகள் நூலில் எழுதி இருக்கிறேன்.
பலசமயம் சென்னைப் புறவழிச்சாலையில் செல்லும்போது தனித்துவமான ஆடை, தலைக்கவசம் அணிந்து பலர் மிதிவண்டிகளை ஓட்டிச்செல்வதைப் பார்த்திருக்கிறேன். அது ஒரு பந்தயம் போலத் தெரியாது. சக நண்பர்களுடன் ஒரு மகிழ்வான பயணம் போலத் தோன்றும். ஒரு வகையில் அது உண்மைதான் என்பதை புகழேந்தி அவர்களின் பசுமைப் பயணம் நூலை வாசிக்கையில் உணர்ந்தேன்.
புகழேந்தி இந்த நூலைத் தந்து பல நாட்களாகிவிட்டன. முயன்றால் ஒரு மணி நேரத்துக்குள் வாசித்துவிடலாம். அவரது ஒவ்வொரு மிதியுந்துப் பயணம் பற்றியும் நாட்குறிப்புகள் போல மிகச் சுருக்கமான கட்டுரைகள் ஆனால் ஒவ்வொரு கட்டுரையிலும் அவர் தரும் தகவல்கள், அனுபவங்கள் என்னை அவை பற்றி தேட வைத்துவிட்டன.
குறிப்பாக அவரது மூன்றாவது கட்டுரையில் BRM மற்றும் SR என்று குறிப்பிடுகிறார். எப்படியாவது SR ஆக வேண்டும் என்று தன் ஆசையை சொல்லிவிட்டு அப்படி என்றால் என்ன என்று அறியும் ஆசையைத் தூண்டிவிட்டு அவர் தன் மிதிவண்டியில் ஏறி பறந்துவிட்டார்.
நான் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு தேடத்தொடங்கினேன்.
BREVETS DE RANDONNEUR MONDIAUX (BRM) என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகளை வெற்றிகரமாகக் கடந்து, குறிப்பிட்ட கால வரம்புகளுக்குள் முடிக்கப்பட வேண்டிய நிலையான தூரங்களின் சவாரிகள் ஆகும். உலகளவில் BRMகள் Audax Club Parisien (ACP) என்கிற அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.
BRM-ன் விதி என்பது வரையறுக்கப்பட்ட தூரத்தை, வரையறுக்கப்பட்ட நேரத்துக்குள் தீர்மானிக்கப்பட்ட சாலை வழியாக சென்றடைவது. உதாரணமாக 200 கி.மீ தூரத்தை 13.5 மணி நேரத்துக்குள் சென்றடைவது. யாருடனும் போட்டி இல்லை. தனக்குத்தானே போட்டியாளர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
சூப்பர் ரேண்டன்னூர் (SR) என்பது ஒரு காலண்டர் வருடத்திற்குள் தொடர்ச்சியான BRMகளை முடிக்கும் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு ACP வழங்கும் ஒரு பட்டமாகும். இந்தத் தொடரில் நான்கு சுருக்கமான தூரங்கள் உள்ளன: 200 கிமீ, 300 கிமீ, 400 கிமீ மற்றும் 600 கிமீ, முறையே 13.5, 20, 27 மற்றும் 40 மணிநேர வரையறுக்கப்பட்ட நேர அளவுகளுடன். சென்று முடிக்க வேண்டும். ஆனால் கால்ண்டர் வருடம் என்பது ஜனவரியில் தொடங்குவது இல்லை.
நவம்பர் 1 தொடங்கி அடுத்த அக்டோபருக்குள் இந்த இலக்குகளை முடித்தால் ACP அமைப்பின் சான்றிதழ் மற்றும் பதக்கம் கிடைக்கும்.
இதில் என்ன கொடுமை என்னவென்றால் ACP இணையதளத்தில் பதிவுக் கட்டணம், பயணச்செலவு, இடையில் மருத்துவ உதவி தேவைப்பட்டால் பங்கேற்பாளர் தன் சொந்த செலவில்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் இந்தப் பயணங்களை AIR ( ALL INDIA RANDONNEUR) என்ற அமைப்பு கண்காணிக்கிறது. அவ்வளவுதான்.. பணமும் தரமாட்டார்கள். பொறுப்பேற்கவும் மாட்டார்கள்.
இத்தாலியில் தொடங்கப்பட்ட இந்தப் பயண அமைப்புகள். தற்சமயம் பிரான்சில் உள்ள அமைப்பால் உலகம் முழுக்க உள்ள அமைப்புகளை அங்கீகரிக்கின்றது. நான் எப்படியும் SR ஆகிவிடுவேன் என்று புகழேந்தி சபதமெடுத்ததன் விளைவு நான் அங்கே எல்லாம் சென்று திரும்ப அடுத்த அத்தியாயத்துக்கு வரவேண்டி இருக்கிறது.
அடுத்ததாக விருத்தாசலத்தைச் சுற்றி பல்வேறு வரலாற்றுத் தலங்களுக்குச் சென்று அவைப் பற்றியச் செய்திகளைப் பகிர்கிறார்.
முகாச பரூர் அருகிலுள்ள பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி,
பரூர் கச்சிராயர் வசித்த அர்ண்மனையின் சிதிலமடைந்த மிச்சங்கள்,
சுந்தர பாண்டியனின் கல்வெட்டு, வீரமாமுனிவர் தேம்பாவணி எழுதியதாகக் கருதப்படும் கோணான்குப்பம் பெரியநாயகியம்மன் ஆலயம் இப்படியாக அவரது மிதிவண்டிப்பயணம் பல ஆச்சர்யத் தகவல்களை சுருக்கமாகத் தருகின்றது.
பின்னர் தான் பார்த்த சோலோ என்கிற ஆங்கிலக் குறும்படம் பற்றி எழுதி இருக்கிறார். மலையேறும் குழு எப்படி பாறை இடுக்கில் இருந்து ஒரு தேரையைக் காப்பாற்றி மலை உச்சிக்கு எடுத்துச்செல்கிறார்கள் என்னும் கதையாம். இனி அந்தப்படத்தைத் தேடிப்பிடித்துப் பார்க்க வேண்டும்.
எனக்கு வேறொரு ஆவணப்படம் நினைவுக்கு வந்தது 1232 KM என்றொரு படம். பீஹாரில் இருந்து தில்லிக்கு தினக்கூலிக்காகச் சென்று கொரானா காலத்தில் கைவிடப்பட்டு பசி பட்டினியுடன் சைக்கிளிலேயே தில்லியில் இருந்து தங்கள் சொந்த மாநிலமான பீகாருக்கு ஏழு நாட்கள் பயணித்து, பீஹாரின் எல்லையிலேயே நிறுத்தப்பட்டு கொடுமைகளை அனுபவித்தவர்களுடன் இயக்குனர் வினோத் காப்ரி பயணித்து படப்பதிவு செய்திருந்தார். அதுவே அந்த ஆவணப்படம். ஹாட்ஸ்டாரில் உள்ளது.
தற்போது பீகார் தேர்தலையொட்டி திடீர் சாம்பார் திடீர் ரசம் போல திடீர் BIHAR LOVERS தமிழ்நாட்டில் தோன்றிவிட்டார்கள். முகநூலில் பீகார் தெருக்களில் பாலும் தெளிதேனும் பெருக்கெடுத்து ஓடுவதாக கூச்சமில்லாமல் எழுதுகிறார்கள். அவர்கள் அந்த ஆவணப்படத்தைப் பார்க்க வேண்டும். வெளியே சொல்லமாட்டார்கள். கையது கொண்டு மெய்யது போர்த்தி கம்மென இருப்பார்கள்.
சிறுகதை எழுத்தாளர் இல்லையா தன் மகன் விரும்பிய மிதிவண்டியை தான் வாங்கிக் கொடுக்க இயலாமல் போனதையும் ஆனால் வேலையில் சேர்ந்தபின் மகன் இளவேனில் தன் ஊதியத்தில் இருந்து தான் விருப்பபட்ட மிதிவண்டியை வாங்கித் தந்த அனுபவத்தை நெகிழ்வுடன் பதிவு செய்துள்ளார். மிதிவண்டி பற்றிய அவரது கவிதையும் இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு மகத்தான அனுபவம் தேதிவாரியாக புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார். நேர்த்தியான வடிவமைப்பு. பயணிகள் பற்றிய பயண இலக்கியங்கள் பற்றிய பல்லவிகுமாரின் அழகான முன்னுரை.
இரத்தின புகழேந்தியுடன் அழகான மிதிவண்டிப் பயணங்களை நாமும் அனுபவித்தது போன்ற உணர்வு புத்தகத்தை வாசிக்கும்போது ஏற்படுகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர் புகழேந்தி. . .
நன்றி: எழுத்தாளர் நெய்வேலி பாரதிக்கு மார்.

