தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Thursday, January 30, 2020

தமிழிசைப் பாடநூல்கள்



         
          தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் முதன்முதலாக இசையியலுக்கென்று தனியே பாடநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த பாடநூல்களில் என்ன வகையான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அவை மாணவர்களுக்கு எத்தகைய அறிவைப் பெற்றிட உதவும். இசைப் பாடங்களின் நோக்கங்கள் என்ன? இவற்றை முழுமையாக நிறைவேற்றிட அரசு செய்ய வேண்டிய தொடர் பணிகள் யாவை? என்பன குறித்து விரிவாக ஆய்வு செய்கிறது இக்கட்டுரை.

தமிழிசைப் பாடநூல்கள்:
         
          தமிழகத்தில் 3 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை இசையியல் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டு 2018 ஆம் ஆண்டில் முதன்முதலாக அதற்கென ஆசிரியர் கையேடும் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் வயதுக்கு ஏற்ப இசை குறித்து அறிமுகப் படுத்தி பல வகையான இசைப் பாடல்களும் அதற்கு உரிய பண், இராகம், தாளம், நிரல் ஆகியவற்றோடு கொடுக்கப்பட்டுள்ளன.

இசையியல் பாடநூல்களின் உள்ளடக்கம்:
         
          தொடக்க நிலை மாணவர்களுக்கு ( 3 முதல் 5 ஆம் வகுப்புவரை) இசை குறித்த எளிய அறிமுகத்தோடு இசைப்பாடல்கள் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வகுப்புவாரியாகக் காண்போம்.

மூன்றாம் வகுப்பு : இசை அறிமுகம் என்னும் முதல் பாடத்தில் மனிதர்கள் இயறகையினின்று இசையையும் இசைக்கருவிகளையும் எவ்வாறு உருவாக்கினார்கள், சங்க காலத்தில் ஐவகை நிலங்களில் எத்தகைய இசைக்கருவிகள் புழக்கத்திலிருந்தன என்று விளக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து திருக்குறள் இசைப்பாடல், மகாத்மா பாடல், பாரதியார் பாடல், கிருத்துவர் பாடல், இசுலாமியர் பாடல்,விளக்குப்பாடல் கண்ணன் பாடல், தேவாரம், நாட்டுப்புறப் பாடல் ஆகிய பாடல்கள் இசைக்குறிப்புகளோடு கொடுக்கப்பட்டுள்ளன.

நான்காம் வகுப்பு: பதிமூன்று தலைப்புகளில் பல்வேறு பாடல்கள் மட்டும் இசைக்குறிப்புகளோடு அமைந்துள்ளன.

ஐந்தாம் வகுப்பு: நான்காம் வகுப்பில் உள்ளதுபோல் பல்வேறு பாடல்கள் (திருக்குறள், கம்பராமாயணம், சீராப்புராணம்) இடம்பெற்றுள்ளன.


 6 முதல் 10 ஆம் வகுப்புவரை இசைகுறித்து விரிவான அறிமுகங்களும் கொடுக்கப்பட்டுள்ளன இசை, சரளி வரிசைகள், நாதம்,சுருதி, தாளம், ஏறு நிரல், இறங்கு நிரல், இசைப்பழமொழிகள்,நாட்டுப்புற இசை, தமிழிசைக்கு தொண்டு செய்த முன்னோடிகள் பற்றியெல்லாம் விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஆறாம் வகுப்பு:  தமிழ் இசை குறித்து விரிவான ஒரு பாடம் இடம்பெற்றுள்ளது. அதில் தமிழ் இசை பற்றிய அறிமுகத்தோடு இசையின் பிறப்பு, தமிழ் இசையின் தொன்மை, சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இசை பற்றிய தகவல்கள்,பண், இராகம், தாளம், இசைக்கலைஞர்கள், இசைப்பாடல்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் சுரத்தொகுப்புகளின்  சரளி வரிசைகள் அளிக்கப்பட்டுள்ளன. (ச ரி க ம ப த நி ச)
பாரதியார், புரந்தரதாசர் ஆகியோரின் இசைத்தொண்டுகள் பற்றி தனித்தனி பாடங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முதல் பருவத்திற்கு உரியவை.
இரண்டாம் பருவம்: முதல் பாடத்தில் நாதம், சுருதி, தாளம் பற்றி விரிவான செய்திகள் இடம்பெற்றுள்ளன.நாதத்தின் இரு வகைகளான ஆகதநாதம்,அனாகதநாதம் பற்றியும் பஞ்சம சுருதி, மத்யம சுருதி ஆகிய இரு சுருதி வகைகள் பற்றியும் ஏழு சுரங்கள் மற்றும் ஏழுதாளங்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. மேலும் பல இசைப்பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் பருவம்: தைப்பொங்கல் குறித்த முதல் பாடத்தில் பொங்கல் பாடலும் இடம்பெற்றுள்ளது. ஏறு நிரல், இறங்கு நிரல் என்னும் பாடத்தில் ஏழு சுரங்கள் ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் எவாறு அமையும் என்பதையும் தானங்கள் பற்றி விபுலானந்தரின் யாழ்நூல் குறிப்புகளிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மேலும் இசைப்பழமொழிகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளமை மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும்படி உள்ளது.

ஏழாம் வகுப்பு: ஆறாம் வகுப்பின் தொடர்ச்சியாக சரளி வரிசைகள் பற்றிய கூடுதல் தகவல்கள் தொகுத்தளிக்கப் பட்டுள்ளன. மேலும் தாளங்கள் பற்றி இரண்டு பாடங்கள் அமைந்துள்ளன.

          அருணாச்சலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதியார் பற்றி தனித்தனி பாடங்கள் இடம்பெற்றுள்ளன. திருப்பாவை திருவெம்பாவை போன்ற இசைப்பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கிளிக்கன்னி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

எட்டாம் வகுப்பு: சுரங்களை இரண்டிரண்டாக இணைத்து இரட்டைச் சுரங்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தாளம் என்னும் பாடத்தில் துருவதாளம், மத்யதாளம், ரூபகதாளம், சம்பதாளம், த்ரிபுட தாளம், அடதாளம், ஏகதாளம் ஆகியவற்றுக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இசையின் உறுப்புகளை மாணவர்கள் அறிந்துகொள்ளும்பொருட்டு கீதம் பற்றி ஒரு பாடத்தில் விளப்பட்டுள்ளது. முத்துத் தாண்டவர் பற்றிய ஒரு பாடமும் உள்ளது.

ஒன்பதாம் வகுப்பு: பண்கள் பற்றி மாணவர்கள் விரிவாக அறிந்துகொள்ளும்பொருட்டு திறப்பண்கள், தமிழ் இசைப் பண் என்னும் இரு பாடங்கள் இடம்பெற்றுள்ளன. பண்களின் பழமை அதன் வகுப்புகள் குறித்த அறிமுகமாக அமைந்துள்ளது. தியாகராசர் வரலாறு, முத்துசாமி தீட்ச்சிதர், சியாமளா சாஸ்திரிகள் குறித்து தனித்தனி பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இசை மையங்கள், இசைக்கருவிகள், நாகசுரம், திரைப்படப்பாடல்களில் தமிழ்ப் பண்கள் என்னும் பாடங்களும் இடம்பெற்றுள்ளன.

பத்தாம் வகுப்பு: அடிப்படை இசை இலக்கணக்குறிப்புகள் என்னும் பாடத்தில் தொடக்க நிலைப் பயிற்சி இசை, இரட்டைச் சுர அடுக்கணி, தாண்டு வரிசை பற்றி விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இராக குணங்கள் என்னும் பாடத்தில் ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு குணம் உண்டு என்று எடுத்துக் காட்டுகளோடு குறிப்பிடப்பட்டுள்ளது. ( மேகம் திரள – மேக ரஞ்சனி, மழை பொழிய – அமிர்த வர்ஷினி) அது போல நோய் தீர்க்கும் பண்கள் பற்றிய குறிப்புகள் சுவைபட உள்ளன. ( அசாவேரி- தலை வலியைப் போக்கும், சர்க்கரை நோய் குணமாக- நளின காந்தி, சூரிய காந்தம்)

          அறிவியல், கணிதம், கணிப்பொறி, வேளான்மை, மருத்துவம் ஆகிய பல்வேறு துறைகளில் இசை எவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்னும் பாடமும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. குரலிசை, புல்லாங்குழல், வீணை, வயலின் போன்ற துறைகளில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல் தமிழ் இசைக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இசைப் பாட நூல்களின் நோக்கங்கள்: 
         
o   மாணவர்களிடம் உள்ள இசைத்திறன்களைக் கண்டறிந்து மேம்படுத்துதல்

o   இசையில் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்த வாய்ப்பளித்தல்

o   மாணவ்ர்களின் இசைப் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்த வாய்ப்பளித்தல்

o   இசை கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்துதல்

o   குரல் வளத்திற்கும் விரலுக்கும் பயிற்சியளித்தல்

         



இசையில் பன்முகத்தன்மை:
         
          இசை குறித்த வரலாற்றிலும் பாடல்களிலும் கவனமாக பன்முகத்தன்மை கடைபிடிக்கப்பட்டுள்ளது, இசைப்பாடல்களில் மதச்சார்பு இன்றி மும்மதப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

இசைக் கருவிகள் அறிமுகம்:
         
          இசைக்கருவிகள் பற்றிய அறிவினை மாணவர்கள் பெறும் வண்ணம் ஓரொலி வாத்தியம், பல்லொலி வாத்தியம், இசைக்கருவிகள் செய்யப்படும் மரங்கள், தம்புரா, நாகசுரம் ஆகியன பற்றிய வரலாற்றுத்தகவல்கள் விரிவாக இடம்பெற்றுள்ளன.

இசை மையங்கள்:
         
          தமிழகத்தில் பன்னெடுங்காலமாக செயல்பட்டுவரும் இசை மையங்கள் பற்றியும் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இணையச் செயல்பாடுகள்:
         
          ஒவ்வொரு பாடநூலின் இறுதியிலும் இணையச் செயல்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளமை மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உள்ளன. பாடங்களுக்குள் கொடுக்கப்பட்டுள்ள விரைவு துலங்கல் குறியீடுகள் இன்னும் முழுமையாக செயல்படும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசு செய்யவேண்டிய தொடர் பணிகள்:
         
          பாட நூல்களின் மென் நகல்கள் மட்டுமே கிடைக்கின்றன. முழுமையாக அச்சிட்டு வழங்கினால் மட்டுமே இசைப் பாடங்களை பள்ளிகளில் முழுமையாக நடைமுறைப் படுத்த இயலும்.

          எல்லா பள்ளிகளுக்கும் இசை ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை பாடநூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடலும் இசையோடு பாடி இணையத்தில் பதிவேற்றப்பட்டு மாணவர்கள் கேட்டுப் பயிற்சி பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதற்கு முன்பு ஆசிரியர்களுக்கு இசைக்கென தனிப் பயிற்சியைப் பணியிடைப் பயிற்சியோடு வழங்கிட வேண்டும்.

முடிவுரை:
         
          இசையியலை தனி ஒரு பாடமாக தொடக்க நிலையிலிருந்தே அறிமுகப் படுத்தியிருப்பது தமிழகத்தில்தான் முதல் முயற்சியாக இருக்கும் என்பதை இக்கட்டுரை குறிப்பிடுகிறது. மேலும் மாணவர்களிடையே இதுபோன்ற கலை ஆர்வத்தை சிறு வயதிலேயே ஏற்படுத்துவதன் மூலம் அவர்களிடம் நற்பண்புகள் வளரும். தமிழ் இசையின் பயன்களை சிறுவயதிலேயே உணர்ந்துகொள்வதற்கு இப்பாடநூல்கள் துணையாக அமையும். தமிழ் இசைத்துறையின் முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறுகளை அறிந்துகொள்வதன் மூலம் மாணவர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை இசைத்துறைக்கு வழங்குவார்கள். மாணவர்களுக்கு பதின் வயதில் ஏற்படும் உடல் உள்ள மாற்றங்களை மடை மாற்றிட இசைப்பாடங்கள் மிகுந்த உதவியாக அமையும் என்பது உறுதி.

துணை நூற்பட்டியல்:
          இசை இயல் ஆசிரியர் கையேடுகள் – 7 தொகுதிகள்
          (3 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை )
          தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்
          சென்னை
          2018
 மதுரையில் 2019 திசம்பர் திங்கள் நடைபெற்ற உலகத்தமிழிசை மாநாட்டில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.

1 comment:

  1. Sir
    I tried to find the Tamilnadu State musicology books you have written about in this article. I couldn't find them. Can you guide me where I can find/buy them?
    Milton

    ReplyDelete