தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Sunday, April 28, 2019

சிங்கப்பூர் கோயில்களில் தமிழ் இசை




முன்னுரை
            தமிழர்கள் வாழும் நாடுகளில் குறிப்பிடதகுந்தது சிங்கப்பூர்.  அந்த நாட்டின் அலுவல் மொழிகளில் ஒன்றாகவும் தமிழ் விளங்குகிறது. அரசால் நிறுவப்படும் அறிவிப்பு பலகைகளில் தமிழ் இடம்பெற்றுள்ளது. தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் அங்கு போற்றி வளர்க்கப்படுகிறது. அங்கு இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்க் கோயில்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான நான்கு கோயில்களை நேரடியாக நிர்வகிக்கிறது சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம். அவற்றில் தெற்கு பாலம் சாலையில்    உள்ள மாரியம்மன் கோயிலும், லிட்டில் இந்தியா பகுதி சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் சீனிவாசப் பெருமாள் கோயிலும் சிங்கப்பூரின் தேசியச் சின்னங்களின் பட்டியலில் உள்ளன.  அக்கோயில்களில் தமிழ் இசையின் நிலை பற்றி இக்கட்டுரை ஆய்வுசெய்கிறது.

சிங்கப்பூரில் தமிழ்க் கோயில்கள்
            19 ஆம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தால் தமிழகத்திலிருந்து தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டனர். தாய்நாட்டை விட்டு வெளிநாட்டில் குடியேற வந்த இந்த மக்கள் தங்களது பண்பாட்டு மரபைப் பேணிக்காத்து வந்தனர். அவர்களது வருகை தீவு முழுவதிலும் திராவிட கட்டிடக்கலையின் அடையாளங்களுடன் கோயில்களை எழுப்பக் காரணமாக இருந்தது.
சிங்கப்பூரில் தமிழ்ப் பண்பாட்டைப் பாதுகாத்ததில் தொழிலாளர்கள் பெருமளவு பொறுப்புடையவர்களாக இருந்தபோதிலும், பிற்காலங்களில், வணிகர்களால் வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்புகள் வழிபாட்டுத் தலங்களைக் கட்டவும், புனரமைக்கவும் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட தமிழ்க் கோயில்கள் சமுதாயத்தை ஒற்றுமையுடன் வைக்கவும், தாய்நாட்டைப் பிரிந்து வாழும் மக்களுக்கு அந்நிய நாட்டில் ஒரு பாதுகாப்புணர்வைத் தரும் ஒரு அமைப்பாகவும் உதவின.
கோயிகளில் தமிழ் இசை
            அங்குள்ள பெரும்பாலான கோயில்களில் நாள்தோறும் நடைபெறும் பூசைகளில் தவில் மற்றும் நாகசுரம் இசைக்கப்படுகிறது. இசைக்கலை என்பது கோயில் கலையாகவே தொடக்க காலங்களில் வளர்ந்துவந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தவிலை கோயில் மேளம் என்றே இன்றும் நாட்டுப்புற மக்கள் குறிப்பிடுகின்றனர். மங்கல இசைக்கருவிகளில் தவிலுக்கு தவிர்க்க இயலாத இடமுண்டு. தவில் என்னும் சொல் வழக்கு பிற்காலத்தில் ஏற்பட்டதாகும். இதனை சங்க இலக்கியங்கள் மண முழவு என்று குறிப்பிடுகின்றன.
மணமுழவு
            மணமுரசு என்ற சொற்றொடரை விழா முரசு என்று சிலப்பதிகார உரை குறிப்பிடுகின்றது. மணமுழவு என்பதனை மருதநிலப் பறை என்று தொல்காப்பியப் பொருளதிகார உரை குறிப்பிடுகின்றது.
            ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
          ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப (புறநானூறு;194)
என்று புறநானூறு குறிப்பிடும் முழவுஎன்பது, திருமணத்தில் வாசிக்கப்படும் மங்கல இசைக்கருவியான தவிலேயாகும்.
            இன்றும் திருமண விழாக்களின் பொழுது தவில் கருவி பயன்படுத்தப்படுகிறது. திருமாங்கல்யம் திருப்பூட்டுச் செய்யும் பொழுது கெட்டி மேளம் என்ற பெயரில் இசைக்கப்படுகிறது.

தவிலும் நாகசுரமும்
            கோயிலில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளில் ஒவ்வொரு நிலையிலும் மல்லாரி இசைக்கப்படும் வழக்கம் உள்ளது. மல்லாரி என்பது தமிழிசையில் இசைக்கப்படும் ஓர் இசை உருப்படியாகும். மங்கல இசைக் குழுவிற்குரிய நாகசுர இசை உருப்படியாக மல்லாரி அமைந்துள்ளது. இசைப் பரிமாணத்திற்குரிய உருப்படியாக இது அமையும். தவிலின் பங்கு இதில் மிகுதியாக இருக்கும். இறைவன் வீதி உலா எழுந்தருளும் பொழுது மல்லாரியை இசைப்பர். “ மயில்+ ஆரி மயிலாரி என்பது மருவி மல்லாரி என ஆனது. ஆரி என்பது பாடுதல், ஒலியெழுப்புதல் என்ற பொருள்படும்.மயில், தன் கழுத்தை நீட்டிக் கூவுதல்தான் அகவுதல் என்பது. இந்த மயில் அகவுதலும் ஆரியும் சேர்ந்து - மயில் ஆரி - மல்லாரி ஆனது” என்பார் இசை அறிஞர் மம்மது.
கோயில் நிகழ்வுகளில் மல்லாரி 
            இறைவனின் நீராடலுக்கு திருமஞ்சன நீர் கொண்டு வரும் பொழுது திருமஞ்சன மல்லாரி இசைக்கப்படும்.
             தளிகை உணவு தயாரிக்கும் இடமான மடைப்பள்ளியிலிருந்து தளிகை கொண்டு வரும் பொழுது தளிகை மல்லாரி இசைக்கப்படும்.
             திருவிழாக் காலங்களில் இறைவனைத் தேரில் எழுந்தருளச் செய்தல் உண்டு. தொண்டர்கள் தேரின் வடம் பிடித்துத் தேரை இழுப்பர். இவர்களை உற்சாகப்படுத்தும் நிலையில் தேர் மல்லாரி இசைப்பது வழக்கம்.
            இறைவன் வீதியுலா எழுந்தருளும் போது சின்ன மல்லாரி இசைக்கப்படும்.
            சிவன் கோயில்களில் இறைவன் காளை  வாகனத்தில் எழுந்தருளும் பொழுது பெரிய மல்லாரி இசைக்கப்படும். இந்த நிகழ்வுகளை ஆவணப்படமாக லலிதாராம் வெளியிட்டுள்ளார்.
            சிங்கப்பூர் கோயில்களில் தவில் மற்றும் நாகசுர கலைஞர்களைக் கொண்டு மேற்கண்ட முறைப்படி இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதற்காக தமிழகத்திலிருந்து இசைக்கலைஞர்கள் கோயில்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அந்த நாட்டு விதிமுறைப்படி உரிய ஊதியம் வழங்கப்படுகிறது.

சிங்கப்பூரில் தமிழிசைக்கலைஞர்கள்
            சிங்கப்பூர் கோயில்களில் தவில் மற்றும் நாகசுரம் வாசிக்கும் இசைக்கலைஞர்கள் கோயில்களிலேயே தங்கியுள்ளனர். அங்கு அவர்களுக்கு உரிய வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. கோயிலில் சமைக்கும் உணவு அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இறை பணி என்பதால் அந்த இசைக்கலைஞர்கள் அப்பணியை பக்தியோடு மேற்கொள்கின்றனர்.
உறுமிமேளம்
            சிங்கப்பூரில் புகழ்பெற்றுத் திகழும் உறுமிமேளக் குழு ‘சிவசக்தி முனியாண்டி உறுமிமேளக் குழு’ ஆகும். அக்குழு, தைப்பூசத் திரு விழாவில் சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் காலை 7 மணியிலிருந்தே உறுமி மேளம் இசைக்கத் தொடங்கி விடும்.
            ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று வாசித்துள்ள இந்த 16 பேர் கொண்ட இசைக்குழு, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முதன்மையான விழாக்களில் வாசிப்பது தம் குழுவினருக்கு கிடைத்த பெருமையாகக் கருதுவதாக இக்குழுவின் தலைவர் திரு நவின் குமார் இளங்கோவன் தெரிவித்தார்.
            தைப்பூசத் திருநாளில் உறுமி மேளம் வாசிப்பது குறித்து அங்குள்ள உறுமிமேளக் குழுக்கள் ஒரு சந்திப்புக் கூட்டத்தை நடத்தி அதில் தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொள்வதற்கான விதி முறைகளுக்கு கட்டுப்படுவதென உறுதியளித்துள்ளனர். இந்து அறக்கட்டளை வாரியம் கொடுத்த தகவல்படி   11 உறுமிமேளக் குழுக்கள் தைப்பூசத் திருநாளில் வாசிக்க அனுமதி பெற்றுள்ளன.
கோயில்களில் திருமுறை இசை
            சிங்கப்பூரின் பல்வேறு கோயில்களில் திருமுறை இசை தினமும் ஒலிக்கக் கேட்கலாம். இவற்றைப் பாடுவோர் தமிழ் நாட்டிலிருந்து சென்ற கலைஞர்கள் ஆவர். மேலும், தேவார இசை நிகழ்ச்சிகள் பல அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவற்றில் தமிழகத்திலிருந்து வரும் ஓதுவார்கள் முதல் உள்ளூர் திருமுறை மாணவர்கள் வரை பலரும் பாடக் கேட்கலாம். பெரும்பாலும் இவை, நவராத்திரி, புத்தாண்டு, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் நடைபெறும். மேலும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்  உட்பட பல கலை அமைப்புகள் தமிழ் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
முடிவுரை
சிங்கப்பூரில் அமைந்துள்ள கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி தமிழ் இசையைப் போற்றிப்பாதுகாக்கும் நிறுவங்களாகவும் விளங்குகின்றன.
கோயில் இசை மரபுகளின்படி அன்றாட வழிபாடுகளிலும் திருவிழாக் காலங்களிலும் உரிய முறையில் இசைக்கருவிகள் இசைக்கப் படுவதன் மூலம்  தமிழிசைக் கலைஞர்களுக்கு வாழ்வதாரம் அளிக்கப்படுகிறது.
மேலும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் மற்றும் தஞ்சாவூர் மரபு இசைப் பள்ளி, சிங்கப்பூர் ஆகிய அமைப்புகள் தமிழ் இசையை மக்களிடம் கொண்டுசேர்க்க பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
துணைநூற் பட்டியல்
1.தொல்காப்பியம் பொருளதிகாரம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2007
2.புறநானூறு,நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்,சென்னை,2007
3.சிலப்பதிகாரம், வர்த்தமானன் பதிப்பகம்,சென்னை,2000
இணையதளங்கள்
1.தமிழ் இணையக் கல்விக்கழகம்
2. தமிழ் விக்கிப் பீடியா
3.கீற்று/செம்மலர்
தகவலாளர்கள்
1.கவிஞர் தியாக ரமேஷ், செயலாளர், கவிமாலை, சிங்கப்பூர்
2.திரு. நவீன்குமார் இளங்கோவன், தலைவர், சிவசக்தி முனியாண்டி உறுமிமேளக் குழு, சிங்கப்பூர்




2 comments:

  1. படிக்கப் படிக்க இனித்த செய்தி, நம் இசை பிறந்த தமிழகக் கோவில்களே மறந்து, மின்டமாரம் அடித்து வழிபாடு செய்யும் போது, சிங்கைத் தமிழர் நாளும் நாதசுர,தவிலிசையுடன் வழிபாடு செய்வது மனதுக்கும் இதமான செய்தியாகவுள்ளது. இது தொடரவேண்டும். இளம் தலைமுறையிடம் பரவவேண்டும். நம் இசை வளரவேண்டும். இசைக் கலைஞர்களைக் கௌரவமாக வாழ வைக்கவேண்டும்.

    ReplyDelete
  2. இங்குள்ள கோயில்களில் தமிழ் இழிவுபடுத்தப்படுகிறது. இங்குள்ள தமிழர்களே இதற்கு உடந்தையாகவும் இருக்கிறார்கள்.

    சிங்கைத் தமிழர்களைப் பாராட்டுகிறேன்.

    ReplyDelete