முற்றிலும் மாற்றுத் திறனாளிகளால் உருவாக்கப் பட்டிருக்கும் திரைக் காவியம் 'மா' விரைவில் வெளிவர உள்ளது.கதை,திரைக்கதை,உரையாடல்,திரைவடிவம் என அனைத்துப் பணிகளையும் மதன் கேப்ரியெல் சிறப்பாகச் செய்துள்ளார். ஒலி,ஒளி,இசை,பாடல் என அனைத்துப் பணிகளையும் தமிழ்த் திரைக்குப் புதியவர்களான இவர்கள் எப்படி இவ்வளவு சிறப்பாகச் செய்துள்ளனர் என்கிற வியப்பு எழுகிறது.இசைக் குருந்தகடையும் 'மா' உருவான விதத்தினை விளக்கும் குருந்தகடையும் இப்படத்தில் நடித்து ஒரு பாடலையும் எழுதியிருக்கும் தோழர் தமிழியலன் அனுப்பியிருந்தார். படத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பார்த்து நமக்கு பரிதாபம் ஏற்படவில்லை. மகிழ்ச்சியும் நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க வில்லையே என்கிற பொறாமையும்தான் தோன்றுகின்றன.
கிடியோன் கார்த்திக்கின் இசையில் அமைந்த பத்து பாடல்களும் கேட்க கேட்க புத்துணர்வை ஏற்படுத்துகின்றன.பாரதியாரின் நான்கு பாடல்களோடு ஜி.சிதம்பரநாதன், பவானி கண்ணன், தமிழ்இயலன், மு.வள்ளி, லிடியோன் கார்த்திக், வேதை த.இளங்கோ ஆகியோர் எழுதிய பாடல்களும் இடம்பெற்றுள்ளன. தமிழ்இயலன் எழுதிய புயலாக நீ மாறு பாடல் துள்ளல் இசையில் அமைந்து கேட்போரை உற்சாகம் கொள்ளச்செய்கிறது.
இசைக் குருந்தகடு வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி- இன்லேண்ட் பிலிம்ஸ், 4/528, பரசுராம் பட்டி, கே.புதூர், மதுரை-625 007. பேசி: 9345999990.