தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking
Showing posts with label பொற்கோ peti. Show all posts
Showing posts with label பொற்கோ peti. Show all posts

Sunday, April 19, 2009

பொற்கோ அவர்களுடன் பேசியது...



சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்க நிறைவு விழாவில்(16.4.09) சிறப்புரையாற்ற விருத்தாசலம் வந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.பேராசிரியர் முனைவர் சு.அமிர்தலிங்கம் அவர்கள் அறிமுகப் படுத்தினார். நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருந்தோம் அவர் புலமை இதழைத் தொடங்கியது பற்றியும் அதில் எழுதிய ஆய்வாளர்களுக்கு மதிப்பூதியம் வழங்கியது பற்றியும் குறிப்பிட்டார். சிற்றூரிலிருந்து ஓர் இதழ் வரவேண்டும் என்பதற்காகவே மக்கள் நோக்கு இதழைத் தொடங்கினோம் அதில் பல புதுமைகளைச் செய்தோம் எளிய மக்களான ஈயம் பூசுபவர்கள், கூலித்தொழிலாளிகள் போன்றவர்களின் நேர்காணல்கள் அதில் இடம்பெற்றன, வாசகர்களிடம் போதுமான ஒத்துழைப்பு இன்மையால் அது இடையிலேயே நிறுத்தப்பட்டது. ஆனாலும் அந்த இதழில் நாங்கள் என்னவெல்லாம் எழுதினோமோ அதெல்லாம் இப்போது நிறைவேறியுள்ளது.அப்போது பள்ளிகளில் விடுதிகள் கிடையாது குறிப்பாகப் பெண்கள் படிப்பைத் தொடர வேண்டுமென்றால் பள்ளிகளில் பெண்கள் விடுதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். சின்ன விசயம் என்ற தலைப்பில்தான் இதுபோன்ற செய்திகளைக்குறிப்பிட்டோம், சென்னை அண்ணா சாலையில் கழிவரை அப்போது கிடையாது பெண்களின் நலன் கருதி ஏன் மாநகராட்சி கழிவரைகளைக் கட்டக்கூடாது என்று எழுதினோம் அவையெல்லாம் இன்று நடந்தேறியுள்ளன.அந்தவகையில் மக்கள் நோக்கு இதழ் பணி மகிழ்வளிப்பதாகவே உள்ளது. என்று தம் இதழியல் பட்டறிவைப் பகிர்ந்து கொண்டார் நாங்கள் நடத்திய களம்புதிது இதழ் பற்றியும் அது ஆறு இதழோடு நின்று போனது பற்றியும் குறிப்பிட்டேன். வந்தவரை மகிழ்ச்சியடைவோம் நின்றுபோனது பற்றி கவலைப் பட வேண்டாம் என்று ஆறுதல் கூறினார். புலமை இதழ் தமிழியல் ஆராய்ச்சியானது பற்றியும் அதற்கு நண்பர்கள் அளித்த ஒத்துழைப்பு பற்றியும் மறவாமல் குறிப்பிட்டார். நீங்களெல்லாம் இவ்வளவு ஈடுபாட்டோடு செயலாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிப்பதாக உள்ளது. மயிலை சீனி. வேங்கடசாமி போன்ற அறிஞர்கள் பலர் உலகம் முழுவதும் சரியான பணிவாய்ப்பு கிடைக்கப் பெறாவிட்டாலும் அதற்காக சோர்ந்து விடாமல் தொடர்ந்து அவர்கள் ஊக்கத்தோடு இயங்கியது பற்றியும் நினைவு கூர்ந்தார். நாட்டுப்புறவியலில் நாம் செய்யவேண்டிய பணிகள் ஏறாளமாக உள்ளன.நம் பகுதி சிற்றூர்களில் முன்பு ஏறாளமான பழக்க வழக்கங்கள் சடங்குகள் வழக்கத்திலிருந்தன. ஆனால் பெரியாரின் பகுத்தறிவுப் பரப்புரைக்குப் பிறகு சடங்குகளை முதலில் கைவிட்டதும் நமது பகுதியில்தான். முக்கியமான மனிதர்கள் மறைந்தால் உறை சொல்லி ஒப்பாரி பாடும் வழக்கமிருந்தது இப்போது அது உண்டா என்று வினவினார் நள்ளிரவில் நடைபெறும் அந்த நிகழ்ச்சி அனைத்து செயல்பாடுகளையும் தானாகவே நிறுத்திவிடும் வல்லமை படைத்தது என்றும் குறிப்பிட்டார். நம்மிடமுள்ள குடும்பப் பெயர்களைத் தொகுத்தாலே நம் பண்பாட்டு ஆவணமாகத் திகழும் இதையெல்லாம் நீங்கள் செய்ய வேண்டும், நாட்டுப் புறக் களஞ்சியத்தை மனதில் கொண்டு எழுதி வாருங்கள் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வைத்தால் பின்னால் அது மிகப் பெரிய அளவில் சேர்ந்திருக்கும் இவற்றையெல்லாம் தொடர் பணியாகச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இலண்டனில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியது முக்கியமான கால கட்டம் அதுதான் உலக அளவிலான தொடர்பை அவருக்கு ஏற்படுத்தியது என்பதையும் மறவாமல் குறிப்பிட்டார். நான் எழுதிய நூல்களைப்பற்றி பொருட்படுத்தி கேட்டது மகிழ்வளித்தது, கிராமத்து விளையாட்டுகள் நூல் பற்றி கூறியபோது பாவாணர் நூலிலுள்ள கருத்துகள் ஒன்று சேறுமே அதை எப்படி கையாண்டீர்கள் என வினவியதோடு நம் விளையாட்டுகள் ஒவ்வொன்றிலும் ஒரு தத்துவம் உள்ளது என்பதையும் நினைவு கூர்ந்தார் அதைக் கூடுமான வரை நூலில் குறிப்பிட்டுள்ளேன் எனக்கூறியதும் மகிழ்ச்சி தெறிவித்தார். என் உணவு பற்றிய ஆராய்ச்சி நூலைப் பார்த்தும் மகிழ்ந்தார் இதெல்லாம் அவசியம் பதிவுசெய்யப்பட வேண்டியவை சேத்தமாவு பற்றி இதில் குறிப்பிட்டிருக்கிறீர்களா? இல்லை என்றதும் அதைக் கேட்டுப் பாருங்கள் இப்போது வழக்கத்திலிருக்கிறதா என்று தெரியவில்லை நாங்கள் சிறுவர்களாக இருந்த போது சில மாவுகளை ஒனறாகச் சேர்த்து தருவார்கள் அதனால்தான் அப்பெயர் அதற்கு. சில தானியங்களை ஒன்றாக சேர்த்து அரைத்து மாவாக்கி இனிப்பு கலந்து கொடுப்பார்கள் என்று சேத்த மாவு பற்றி கூறினார். ஒரு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் அவருக்கு இணையான ஒரு அறிஞரிடம் பேசுவது போல நம் பேச்சை அலட்சியப் படுத்தாமல் கவனமாகக் கேட்டு உரிய முறையில் எதிர்வினையாற்றிது மனதுக்கு இதமாகவும் மகிழ்வாகவும் இருந்தது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த பேராசிரியர் அமிர்தலிங்கம் நன்றிக்குரியவர்.