தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking
Showing posts with label கி.தனவேல். Show all posts
Showing posts with label கி.தனவேல். Show all posts

Thursday, November 26, 2015

நகர்க் குருவி திறனாய்வு கவிஞர் கி.தனவேல்



கவிஞர் கி.தனவேல் பணி நிறைவு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர். தமிழ்நாட்டு அரசுத் தொழில்துறையின் முதன்மைச் செயலராகப் பணியாற்றியவர். எனது நகர்க்குருவி கவிதை நூலைப் படித்து எனக்கு எழுதிய கடிதம் இங்கே ...

அன்பார்ந்த இரத்தின புகழேந்தி,
            வணக்கம் உங்களது ‘மண்கவுச்சி’ கவிதைகளை ஏற்கனவே துய்த்துவிட்ட எனக்கு சமீபத்தில் உங்களது ‘நகர்க்குருவி’ கவிதைத் தொகுப்பு கிடைத்த்து.

“சுட்டெரிக்கும் கோடையிலும்கூட
திருமுட்டம் செல்லும்போதெல்லாம்
வெள்ளாற்றின் தென்கரையில் பார்த்திருக்கிறோம்
ஓடிவரும் ஊற்று நீரை

கால் நடைகளின்
உரும நேர
                                                உயிர்த் தண்ணீர் அது!”                                          (நிரல்)
என வெள்ளாற்றின் ஊற்று நீரை நீங்கள் நினைவு படுத்தும் போது வறண்டுபோன விருத்தாசலம் மணிமுத்தா நதியில் கோடையிலும் கொடிபோல ஒடிக்கொண்டிருந்த ஊற்று நீரைப் பார்த்த எனது பள்ளிக் கூட நாட்கள் நினைவுக்கு வருகின்றன.
“அன்று முதல்
பல்லிகள்
நம்மை மேய்க்கத் தொடங்கி வருகின்றன”
என வரும் ‘பல்லி பயம்’ நயமான கவிதை.  ‘மரணத்தை மறந்து’ கவிதையில் சிறுவர்களின் சிந்தை சித்திரமாக்கப் பட்டுள்ளது.  ‘ஒரு இறுதிச்சடங்கு’ நல்லபதிவு.  ‘ஒருவன் நீரை ஊற்றிக் காப்பாற்றினான் நகரத்தின் மானத்தை’ (அணைத்தல்) நல்ல கவிதை.
“இரவில் செத்து
காலையில் பிழைத்த
அமைச்சர்கள் காத்திருக்கின்றனர்
கழிவறை செல்வதற்கு
                                    அரசியின் ஆணையை எதிர்பார்த்து”                       (வித்தைக்காரி)
இது சிறந்த அங்கதக் கவிதை.
நடப்பது என்பது
நடந்தது ஆகிவிட்டது
மருத்துவரின் ஆலோசனையால்
இன்றும்
அதிகாலையில்
நடந்து கொண்டுத்தான் இருக்கின்றனர்
                                                நகரத்து மனிதர்கள்.             (நடந்த கதை)
“உற்சாகத்தோடு
வீடு திரும்பும்
ஒவ்வொரு அந்தியிலும்
அவனுக்கு
கண்ணீரால் எழுதக்
காத்திருக்கும்
                       பை நிறைய வீட்டுப்பாடம் ”             (படிப்பு)
இதையும் ஒரு ஆசிரியர் தான் சொல்கிறார்.  நாம் தப்பித்துவிட்டோம் என்ற ஆறுதல்தான் பெற்றோர்களுக்கு.  ‘நிலாவிழுந்தமாடி’ அழகிய கவிதை.
“மரணத்திலிருந்து தப்பிய
பறவைகளை எண்ணி
மகிழ்ந்த கவிஞனுக்கும்
உமிழ்நீர் சுரக்கத் தொடங்கியது
                                    கொக்குக் கறியின் சுவை கேட்டறிந்து. ”    (உயிர் பிழைத்தல்)
இக்கவிதை வரிகள் நடப்பியல் மன முரண்பாடுகளை நன்றாகச் சித்திரித்துள்ளன.
“அங்காடியைக் கைகளிலேந்தி
சிற்றூர்களின் தெருக்களில்
அலைந்து திரிந்து
அரைஞாண் கயிறு விற்பவர்கள்
இப்போது காணக் கிடைப்பதில்லை”
(அரைஞாண் கயிறும் ஆனைமுகக் கடவுளும்)
‘அரைஞாண் கயிறும் ஆனைமுகக் கடவுளும்’ என்ற கவிதை நடப்பியலையும் தொன்மத்தையும் சுட்டிக் காட்டி அவை அறுந்து போனதை அழகாய்ச் சொல்கிறது.
“அன்று
தொல்தமிழர் வீடுகளில்
ஆட்டுக்கறி தின்ற
எங்கள் முருகன்
இன்று பழனியில்
பஞ்சாமிர்தம் உண்டு
                                      நாக்கு செத்துக் கிடக்கிறான்”            (மேல்நிலையாக்கம்)
இது ஒரு சிறந்த ஆய்வுக் கவிதை.
            உங்களது ஒவ்வொரு கவிதையைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்... அதுசரி... “கவிஞர்களின் மனைவிமார்களுக்கு ஒரு வேண்டுகோள்”  இந்த கவிதையை யாராவது கொஞ்சம் விளம்பரப்படுத்தினால் பல கவிஞர்களுக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.

“கோட்டூர் ஆலைக்கு
குறுக்கு வழியில்
கரும்பேற்றிச் செல்வதற்கு
அமைத்த சாலைச் செம்மன்
குருடாக்கித் தொலைத்தது
                                     ஆற்றோர ஊற்றுக் கண்களை ”.      (ஊற்றுக் கண்கள்)
நாம் தொலைத்து வருபவை ‘ஆற்றோர ஊற்றுக் கண்களும்’ ‘முட்புதர் சூழ்ந்த ஒழுங்கை’ களும் மட்டுமல்ல; அவை பற்றிய சொல்லாடல்களும் தான்.  அறியப் போகிறதா அடுத்த தலைமுறை?
தொடர்ந்து எழுதுங்கள்; வாழ்த்துகள்.
என்றும் அன்புடன்
        கி.தனவேல்