எழுதச்சொல்லி
நச்சரிக்கும்
ஆசிரியர்களின்
பிடுங்கல்களிலிருந்து
விடுபட நினைக்கும்
என் மகனின்
நாள்காட்டி முழுக்க
ஞாயிற்றுக்கிழமைகள்
பள்ளி செல்லாமல்
வீதியில் திரியும்
நாய்களின் சுதந்திரம்
தனக்கில்லாதது பற்றி
வருந்துமவனை
உணவு முறையில்
நமக்கும் நாய்க்குமான
வேறுபாடு கூறி
தேற்றுவாள் மனைவி
விளையாட்டு மைதானத்தில்
கழற்றி வைக்கப்பட்ட
மனத்தோடு
பள்ளிக்கு விரட்டப்படும்
அவன் கடிகாரம்
நொண்டியடிக்கும்
உற்சாகத்தோடு
வீடு திரும்பும்
ஒவ்வொரு அந்தியிலும்
அவனுக்குக்
கண்ணீரால் எழுதக்
காத்திருக்கும்
பை நிறைய வீட்டுப்பாடம்
விரலிடுக்குகளில்
எழுதுகோலோடும்
விரிக்கப்பட்ட
குறிப்பேடுகளின் மீது
உலர்ந்த கண்ணீர்க் கோட்டு
கன்னங்களோடும்
உறங்கிப் போனவனை
எழுப்பி
ஊட்ட முயல்கையில்
உள்ளிறங்க மறுக்கும்
சோற்றுருண்டைகளும்.
நிதர்சனமான நல்லதொரு கவிதை.
ReplyDeleteவாழ்த்துகள் சார்!.